நெல்லை மாவட்டத்தில் 14 குவாரிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. குவாரிகள் சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்களை வெட்டி எடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 40 கல்குவாரிகளில் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட கனிம வளங்களை பொறுத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் கடந்த மே மாதம் 14-ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த 4 தொழிலாளர்கள் பாறைகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வந்த 54 கல்குவாரிகளும் மூடப்பட்டன. அனுமதிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக அதிக அளவு கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். அதன்படி 6 அதிகாரிகள் தலைமையில் தலா ஒரு குழுக்கள் அமைத்து கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி முதல் அனைத்து குவாரிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
சுமார் 25 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற ஆய்வுக்கு பின் அறிக்கைகள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வந்ததில் 14 குவாரிகள் சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்களை வெட்டி எடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குவாரிகளை ஏன் மூடக்கூடாது என அதன் உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சுமார் 40 கல்குவாரிகளில் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட கனிம வளங்களை பொறுத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த அபராத தொகை ரூ.300 கோடியை தாண்டியது. இதையடுத்து குவாரி உரிமையாளர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அபராதத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தனர். மேலும் எந்த விதமான கல்குவாரிகளும் செயல்படாததினால் கற்கள், ஜல்லிகள் மற்றும் எம் சாண்ட் மணலுக்கும் அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கட்டுமான தொழில்கள் முழுவதும் முடங்கிப் போய் இருப்பதாகவும் அவர்கள் அதில் கூறியிருந்தனர். இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் இருந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கல்குவாரிகளில் குழுக்கள் ஆய்வு செய்ததில் முரண்பாடுகள் இருப்பதாக கூறி மாவட்ட நிர்வாகம் மீண்டும் முறையாக தகவல் தெரிவித்து கல்குவாரிகளை ஆய்வு செய்து விதிமீறல்கள் இருந்தால் அபராதம் விதிக்கலாம் என்று தெரிவித்தது.
மேலும் அபராதம் விதிக்கப்பட்ட 40 குவாரிகளை இடைக்காலமாக செயல்பட அனுமதிக்கலாம் எனவும், மீதமுள்ள 14 குவாரிகளில் விதிமீறல் உறுதியாகி உள்ளதால் அந்த குவாரிகளுக்கு நிரந்தரமாக தடை விதித்தும் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து சுமார் 5 மாதங்களுக்கு பிறகு மாவட்டத்தில் உள்ள 40 கல்குவாரிகள் செயல்பட தொடங்கின. அதற்கான அனுமதி சீட்டுகளும் நெல்லை மாவட்ட கனிமவள துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

.