
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு
மையங்களில் காலியாக உள்ள 265 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள், 552 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பப்பட உள்ளதால் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் நகராட்சி ஆணையாளர் அலுவலகங்களில் 24.09.2020 முதல் 30.09.2020 வரை
பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் மற்றும் இனசுழற்சி சம்பந்தமான விவரங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி அலுவலக விளம்பரப் பலகையில் விளம்பரப் படுத்தப் பட்டுள்ளதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல்
உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு கல்வித் தகுதியாக பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு பொறுத்தவரை பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்தும்
குறிப்பிட்ட தேதியில் 40 வயதுக்கு மிகாமலும்…
பழங்குடியினர் எனில் எட்டாவது தேர்ச்சி/தோல்வி
பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் 18 வயது
பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க
வேண்டும்.
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20
வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு
கல்வித்தகுதி: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தேர்ச்சி பெறாதவர்.
வயது வரம்பு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 21 வயது பூர்த்தியடைந்தும்,
குறிப்பிட்ட தேதியில் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
பழங்குடியினர் எனில் எழுதப் படிக்க தெரிந்திருக்க
வேண்டும். பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும்,
40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
முன்னுரிமை பிரிவினர்:
கல்வித்தகுதி: வயது; இருப்பிடம்; சாதி மற்றும்
முன்னுரிமை சம்மந்தமான ஆவணங்களான ஆதரவற்ற விதவை/ கலப்புத் திருமணம் மேற்கொண்டவர்/ முன்னாள் இராணுவத்தினர்/ இராணுவத்தில்
பணிபுரிபவர்களைச் சார்ந்தோர், பர்மா இலங்கை அகதிகள், அரசுக்கு நிலம் அளித்தவர்கள், தமிழ்மொழி காவலர்களின் குடும்பங்கள், முன்னாள் மக்கள் தொகை கணக்கு எடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள், விடுதலை
போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்கள் தகுதிகளுக்கு ஆதாரமாக நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
கொரோனா நோய் தொற்று காரணமாக விண்ணப்பிக்க
தகுதியானவர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள்/ நகராட்சிகளில் மட்டுமே விண்ணப்பம் செய்யப்பட வேண்டும்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு நேரடியாகவோ மற்றும் தபால் மூலமாகவோ வரப்பெறும் மனுக்கள் பரிசீலிக்கப்படாது எனத் தெரிவித்தார் ஆட்சியர்.
- செய்தி: தனபால், புதுக்கோட்டை