வெந்தபட்டியில் 2வது திருமணம் செய்த நபர் உட்பட 5 பேர் மீது குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் வெந்தபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி பிரியதர்ஷினி. இவர் கடந்த 2018ல் திருமணம் நடைபெற்று கணவருடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு மூன்றரை வயதில் கதிர்ச் செல்வன், ஒன்றரை வயதில் மித்திரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். டிரைவராக வேலை பார்த்து வந்த கணவர் மணிகண்டன் அடிக்கடி மது அருந்திவிட்டு வண்டி, நகை, பணம் கேட்டு பிரியதர்ஷினியை தகாத வார்த்தையால் திட்டி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதற்கு உடந்தையாக மாமனார், மாமியார், கொழுந்தனார் ஆகியோரும் சேர்ந்துகொண்டு பணம், நகை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.
கொடுமைகள் தாங்க முடியாமல் கடந்த வருடம் கணவர் மணிகண்டன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டார் என குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரியதர்ஷினி புகார் மனு அளித்துள்ளார்.
ஆனால் மணிகண்டன், மகாலட்சுமி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்து, பிரசவத்திற்காக மகாலட்சுமி குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கடந்த 22ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது என கூறப்படுகின்றது.
எனவே தன்னையும் தனது குழந்தைகளையும் அனாதையாக விட்டுவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவர் மணிகண்டனை கைது செய்தும், திருமணத்திற்கு துணைநின்ற மாமனார் மருதை, மாமியார் நவமணி, கொழுந்தனார் ராஜா ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மனு ஒன்றை நேற்று குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.
மனுவின் மீது நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது 2 மகன்களுடன் பேருந்துநிலையம் காந்திசிலை முன்பு நீதி கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து அனுப்பி வைத்தார். அதனையடுத்து பிரியதர்ஷனியை ஏமாற்றி 2வது திருமணம் செய்த மணிகண்டன், மணிகண்டனின் தந்தை மருதை, தாயார் நவமணி, சகோதரன் ராஜா, மணிகண்டனின் 2வது மனைவி மகாலெட்சுமி ஆகிய 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் நேற்று 23ந்தேதி வழக்குபதிவு செய்துள்ளனர்.