
புதுக்கோட்டை அருகே உள்ள அரசுப்பள்ளி மாணவிகள் ஆற்றில் மூழ்கி பலியானதையடுத்து பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்ற சூழல் நிலவுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை கரூர் மாவட்டம் தொட்டியத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை போட்டி நடைபெற்று முதல் ரவுண்டு முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 13 மாணவிகள் மாயனூர் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது தமிழரசி (8 ஆம் வகுப்பு), சோபியா (8 ஆம் வகுப்பு), இனியா(6 ஆம் வகுப்பு) லாவண்யா ((6 ஆம் வகுப்பு) ஆகியோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். பின்னர் 4 பேரின் உடல்களும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கால்பந்து போட்டிக்குச் சென்ற மாணவிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு பலியானதையடுத்து பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டு நின்று கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர். சிலர் ஆசிரியர்களைக் கண்டித்து ஆசிரியர்களுடனும் காவலர்களுடனும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஒருவித பதற்ற சூழல் நிலவுகிறது.
ஆசிரியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்..
குளித்தலை அருகே ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தலைமையாசிரியர் பொட்டு மணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசாய இப்ராஹிம், ஆசிரியர் திலகவதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல தவறியதால் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..
அதோடு, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், ‘உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும்’ என்று தெரிவித்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், கரூர், மாயனூர் காவிரியாற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து, தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும்” என்று அறிவித்திருக்கிறார். இறந்த மாணவிகளுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மாணவிகளை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.




