ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாதிரியார் மீட்கப்பட்டது, மோடி அரசின் ராஜதந்திர நடவடிக்கைக்குக் கிடைத்த வெற்றி என்று கூறினார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். சுமார் 8 மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் நேற்று அங்கிருந்து இந்தியா திரும்பினார். இது குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை சௌந்தர்ராஜன், நரேந்திரமோடி அரசு, பிற நாடுகளுடன் நட்புடன், நல்ல உறவை மேம்படுத்தி வருகிறது. இதனால்தான், இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை காப்பாற்ற முடிந்தது. தற்போது, தாய் உள்ளத்துடன், பாதிரியார் பிரேம்குமார் கடத்தல் விஷயத்தில் நரேந்திரமோடி செயல்பட்டு, அவரை மீட்டுள்ளார். அவ்வாறு மீட்டது மட்டும் இல்லாமல், அவரது தந்தைக்கு போன் செய்து, நேரடியாக அந்த தகவலை கூறியுள்ளார். இதன்மூலம், நாட்டு மக்கள் மீது, நரேந்திரமோடி எந்த அளவு பாசமும், பற்றும் வைத்துள்ளார் என்பது தெரியவருகிறது. பிரதமர் நரேந்திரமோடி, ராஜதந்திரத்துடன் அண்டை நாடுகளுடன் நல்ல உறவை வைத்துள்ளார். அவர் இலங்கை செல்வதையும், அந்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவிப்பதையும், சிலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால் நரேந்திரமோடியின் தொலைநோக்கு பார்வை என்ன? என்பது தற்போது, பிரேம்குமார் மீட்கப்பட்டதன் மூலம், விமர்சனம் செய்பவர்களுக்கு நன்கு புரிந்து இருக்கும். பிரேம்குமார் மீட்கப்பட்டதற்காக தமிழக மக்கள் சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும், பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். – என்று கூறினார்.
பாதிரியார் மீட்பு- மோடி அரசின் ராஜதந்திர நடவடிக்கைக்குக் கிடைத்த வெற்றி: தமிழிசை

Published:

