
இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக போட்டியின்றி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளையும் நியமிக்க வேண்டும். அந்த வகையில் தற்போது தி.மு.க.வில் 15-வது முறையாக உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. முதற்கட்டமாக பேரூராட்சி, ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரம் வரை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். கட்சி ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் 64 மாவட்ட செயலாளர்கள் மீண்டும் அதே பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். 7 பேர் புதியவர்கள் ஆவார்கள். தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பொதுக்குழுவில் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. தி.மு.க. தலைவர் பதவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், பொதுச்செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி.யும் மீண்டும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். மேலும், தி.மு.க. துணை பொதுச்செயலாளர்களாக 4 பேர் இருந்தனர். திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்களாக 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முகமது சகி, கு.பிச்சாண்டி, வேலுசாமி, சரவணன் ஆகியோர் தணிக்கை குழு உறுப்பினர்களாக தேர்வு செய்துள்ளனர்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக பொதுக்குழு இன்று நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ஆயிரத்து 600 பொதுக்குழு உறுப்பினர்களும், ஆயிரத்து 500 சிறப்பு அழைப்பாளர்களும் என மொத்தம் 4 ஆயிரத்து 100 பேர் பங்கேற்று உள்ளனர்.இந்த நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக கட்சி தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
இதேபோல், திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் திமுக துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. தொடங்கப்பட்டபோது பேரறிஞர் அண்ணா தலைவராக இருந்தார். அவர் மறைவுக்கு பிறகு 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி, முதல்முறையாக தி.மு.க. தலைவராக கருணாநிதி பொறுப்பு ஏற்றார். தொடர்ந்து 11 முறை இந்த பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கருணாநிதி மறைவுக்கு பிறகு 2016-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவர் ஆனார்.
தற்போது அவர் 2-வது முறையாக தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல்முறையாக தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். தற்போது 2-வது முறையாக அவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும்போது முதலமைச்சராக உள்ளார். தலைவராக தேர்வான ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள், தொடர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.