
தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் அண்ணாமலை மேலும் கூறியுள்ளதாவது,
தமிழகத்தில் நடுநிலையாகச் செயல்பட்டு வந்த போலீஸாரும் தற்போது திமுகவுக்கு சாதகமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக நாங்கள் அச்சப்படவில்லை.
சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினராக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை. தமிழகத்தில் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமரவைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் வந்துள்ளேன். மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு இன்னும் காலம் இருக்கிறது. இடைத்தேர்தல் முடிவுகள் வருகிற மக்களவைத் தேர்தலைப் பாதிக்காது.
தமிழகத்தில் புதுவிதமான அரசியல் சூழலைக் கொண்டு வர பாஜகவால் மட்டுமே முடியும். பாஜகவின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நிர்வாகிகளை அழைத்து தங்களது கட்சியை வளர்க்கும் சூழலுக்கு ஒரு சிலர் வந்துள்ளனர். அவர்களது கட்சியின் நிலையும் அந்த நிலைக்குச் சென்றுவிட்டது. பாஜகவில் இருந்து யார் பிரிந்து சென்றாலும் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
முதல்வர் மு.க. ஸ்டாலின் எதைப் பற்றியாவது குறை கூற வேண்டுமானால், முதலில் தனது கட்சியைச் சேர்ந்தவர்களைத்தான் கூற வேண்டும். பாஜக பிரச்னைகளை உருவாக்காது. தீர்வைத்தான் கொடுக்கும்.
வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். தமிழக காவல் துறையை சுதந்திரமாகச் செயல்படவிட்டால் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து விலகி, பாஜக தலைவர் கே. அண்ணாமலை முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தனர்.




