வேலியே பயிரை மேய்வதா?கோவில் உண்டியல் பணத்தை அறநிலையத் துறை ஊழியர்களே திருடுவதா?

Published:

kadeswara subramaniam hindu munnani - 2026

கோவில் உண்டியல் எண்ணிக்கை – அறநிலையத்துறை ஊழியர்களின் தொடர் திருட்டு – வேலியே பயிரை மேய்வதா? என்று குறிப்பிட்டு, இந்துமுன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…

தமிழகத்தில் சமீப காலமாக உண்டியல் எண்ணிக்கையின் போது, அதில் ஈடுபடும் திருக்கோவில் செயல் அலுவலர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள் உண்டியல் காணிக்கையிலிருந்து பணம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை திருடிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் உண்டியல் எண்ணிக்கையின் போது தங்க நகைகள் திருடுபோய் உள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டும், காவல்துறை குற்றவாளிகளை கைது செய்யாமல் ஜாமினில் செல்வதற்கு காலஅவகாசம் வழங்கி இருப்பது வேதனையானது.

அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் கோவில் உண்டியல் எண்ணும் போது, கோயில் செயல் அலுவலர் தங்ககாசுகள் மற்றும் பணத்தை திருடி உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறை அவரை சொந்த ஜாமினில் விடுதலை செய்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருத்தணி முருகன் கோவில் உண்டியல் எண்ணிக்கையின் போது, திருக்கோவில் பணியாளர்கள் இருவர் சுமார் 1.25 லட்சம் ரூபாய் கோவில் உண்டியல் பணத்தை திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கையின் போது, கோவில் செயல் அலுவலர் தங்கக்காசுகளை திருடி தலைமறைவான செய்தி அனைவரும் அறிந்தது.

இவையெல்லாம் வெளியில் தெரிந்த உண்டியல் எண்ணிக்கை திருட்டுகள். இன்னும் வெளியில் தெரியாமல் எத்தனை திருக்கோவில்களில் உண்டியல் திருட்டு நடைபெறுகிறதோ என்கிற வேதனை பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து ஆலயங்களின் சொத்துக்களையும், வருமானங்களையும் பாதுகாத்து கண்காணிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.

ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பு பணிகளை ஒழுங்காக செய்யாமல், ஆலயங்களின் நிர்வாகத்தில் தலையிட்டு பூஜை முறைகளில் முட்டுக்கட்டை போடும் வகையில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது

அதேபோல், இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்களே கோவில் உண்டியல் பணத்தை திருடுவது அறநிலையத்துறை என்பதே அவசியம் தானா? என்று கேள்வி கேட்கும் நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது.

அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைத்தும் கோவில் நலனுக்கு எதிராகவே அமைந்துள்ளது. எனவே தான் அறநிலையத்துறை ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும் என இந்துமுன்னணி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறது.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

அதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் அறநிலையத்துறை அதிகாரிகளே, நகை திருட்டு, உண்டியல் பணம் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த உண்டியல் திருட்டில் யார் யாருக்கெல்லாம் பங்கு பிரிக்கப்படுகிறது என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட பலர் பெரிய அளவில் தண்டனைக்கு உட்படுத்தப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளது இந்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணியை நடத்த வேண்டும் என இந்துமுன்னணி கோரிக்கை விடுக்கிறது.

உண்டியல் பணத்தைக் கூட பாதுகாக்க தவறும் இந்து சமய அறநிலையத்துறை ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும். பிற மதத்தினர் வழிபாட்டுத் தலங்கள் போல இந்து ஆலயங்களும் உள்ளூர் மக்களால், பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது..

Related articles

Recent articles

spot_img