
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி – ஆறாம் நாள் 12.02.2026
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இன்று (12.02.2026) முதல் ஆட்டம் காலை 1100 மணிக்கு இலங்கை ஓமன் இடையே பல்லேகலே மைதானத்திளும் இரண்டாவது ஆட்டம் மதியம் 0300 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இத்தாலி நேபாள் அணிகளுக்கிடையேயும் மூன்றாவது ஆட்டம் டெல்லியில் இந்திய நமீபிய அணிகளுக்கு இடையே இரவு 0700 மணிக்கும் நடைபெற்றது.
இலங்கை அணி எளிதில் வெற்றி பெற்றது
பூவாதலையா வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் இலங்கை அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் குசால் மெண்டிஸ் (61 ரன்), பவன் ரத்னநாயகே (60 ரன்), தசுன் ஷனகா (50 ரன்) ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடியதால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 225 ரன் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஓமன் அணியில் முகம்மது நதீம் (ஆட்டமிழக்காமல் 53 ரன்) வாசிம் அலி (27 ரன்) ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். மற்ற மட்டையாளர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தன்ர். இலங்கை அணியில் மஹீஷ் தீக்ஷனா மற்றும் துஷ்யந்த் சமீரா இருவரும் தலா 2 விக்கட் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் ஓமன் அணி 9 விக்கட் இழப்பிற்கு 120 ரன் மட்டுமே எடுத்தது. அதனால் இலங்கை அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இத்தாலி அணி அபார வெற்றி
இரண்டாவது ஆட்டத்தில் பூவாதலையா வென்ற இத்தாலி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் நேபாள அணி முதலில் மட்டையாட வந்தது. 19.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து நேபாள அணி 123 ரன் எடுத்தது. இத்தாலி அணியின் பென் மனெண்டி 2 விக்கட்டுகளும் கிரிஷன் கழுகுமகே 3 விக்கட்டுகளையும் எடுத்தனர். இரண்டாவதாக ஆடவந்த இத்தாலி அணி 12.4 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 124 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜஸ்டின் மோஸ்கா 60 ரன்னும் அந்தோணி மோஸ்கா 62 ரன்னும் அடித்தனர். இவ்வாறு இத்தாலி அணி அபார வெற்றி பெற்றது.
எதிர்பார்த்தபடி இந்திய அணி விளையாடவில்லை; இருந்தாலும் வெற்றி
பூவாதலையா வென்ற நமீபிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய அணியும் இதைத்தான் விரும்பியிருக்கும். முதலில் மட்டையாடி 300 ரன் அடிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கட் இழப்பிற்கு 209 ரன் மட்டுமே எடுத்தது. இன்று அபிஷேக் ஷர்மா விளயாடவில்லை. அவருக்குப் பதிலாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் (8 பந்துகளில் 22 ரன், 3 சிக்சர்) சிறப்பாக ஆடினார்.
ஆனால் 2ஆவது ஓவரில் ஆட்டமிழந்துவிட்டார். அதன் பின்னர் இஷான் கிஷன் (24 பந்துகளில் 61 ரன், 6 ஃபோர், 5 சிக்சர்) திலக் வர்மா (21 பந்துகளில் 25 ரன்) இருவரும் மிகச் சிறப்பாக ஆடினர். பவர்பிளே ஓவர்களில் இந்த இருவரின் ஆட்டத்தால் இந்திய அணி 86 ரன் எடுத்தது. அதன் பின்னர் இந்திய அணியின் ரன் அடிக்கும் வேகத்தை நமீபிய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். சூர்யகுமார் யாதவ் (12 ரன்), ஷிவம் துபே (23 ரன்) இருவரும் தாம்தூம் என அடித்து ஆடமுடியவில்லை. ஹார்திக் பாண்ட்யா (28 பந்துகளில் 52 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினார். ரிங்கு சிங் 6 பந்துகள் ஆடி 1 ரன் மட்டுமே எடுத்தார்.
இரண்டாவதாக ஆடிய நமீபிய அணிக்கு தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் வருண் சக்ரவர்த்தி, பும்ரா இருவரும் பந்துவீச வந்தபின்னர் அவர்களது விக்கட்டுகள் மடமடவென விழத்தொடங்கின. அந்த அணி 18.2 ஓவர்களில் 116 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதனால் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாளை (13.02.2026) முதல் ஆட்டத்தில் காலை 1100 மணிக்கு கொழும்புவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஜிம்பாபே அணிகள் மோதுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் மதியம் 0300 மணிக்கு டெல்லியில் கனடா ஐக்கிய அரபு எமிரேட்டு அணிகள் விளையாடுகின்றன. மூன்றாவது ஆட்டத்தில் இரவு 0700 மணிக்கு சென்னையில் நெதர்லாந்து அமெரிக்க அணிகள் மோதுகின்றன.




