முல்லை பெரியாறு அணையின் மேற்பார்வைக்குழு கண்காணிப்பு குழுவில், இரு மாநில தொழில்நுட்ப வல்லுனர்களை சேர்த்த பின், அணையில் முதல் ஆய்வு இன்று நடைபெற்றது.
முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் நாதன் தலைமையில் 3 பேர் கொண்ட ‘கண்காணிப்பு குழுவை’ உச்சநீதிமன்றம் நியமித்தது. தற்போது இந்த குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். தமிழக பிரதிநிதியாக பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, கேரள பிரதிநிதியாக கேரள நீர்ப்பாசனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டி.கே.ஜோஸ் உள்ளனர்.
இக்குழுவினர் கடந்த 2021 பிப்ரவரி 19ல் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். கண்காணிப்பு குழுவில் இரு மாநில தொழில்நுட்ப வல்லுனர்களையும் சேர்க்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதையடுத்து தமிழகம் சார்பில் காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியம், கேரளா சார்பில் கேரள நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்க்கீஸ் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.50 அடியாக உள்ள நிலையில், இந்த 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவினர் இன்று பெரியாறு அணையை ஆய்வு செய்தனர்.
பெரியாறு மெயின் அணை பகுதி, கேலரி பகுதியில் கசிவுநீர் குறித்தும், பேபி அணை பகுதியையும் குழுவினர் ஆய்வு செய்தனர். இதையடுத்து அணை மதகுகளின் இயக்கத்தை சரிபார்த்தனர்.





