உண்மை ஜெல்லும்
.1990களில் ஒரு நாள் நானும் எனது சகோதரரும் “உள்ளத்தை அள்ளித்தா” படம் பார்க்கச் சென்றிருந்தோம். படம் “காமெடி வகை” என்று தெரியாமல் உள்ளே போய் வயிறு குலுங்க சிரித்துவிட்டு வந்தோம்.
கிட்டத்தட்ட அதே நிலை இன்று அலுவலகம் முடிந்து வீடு வந்தவுடன் “சம்பிரதாயமாக” டிவி பார்த்தபோது பப்புவின் நாகர்கோவில் பேச்சு நேரலையாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருந்தது.
.
மொழி பெயர்ப்பாளர் (தங்கபாலு) ராகுலுக்கு மேல் காமெடி. பாவம் அவர். உடைந்துபோன keyboard போல அடிக்கடி ஓரிரு எழுத்துக்கள் விட்டுப்போய் தமிழ் மொழியை “பெயர்த்து” எடுத்துக் கொண்டிருந்தார். (பாரதம் என்பதை பாரம் என்கிறார்)
.
ராகுல் – தங்கபாலு கூட்டு அந்தக்காலத்து “தங்கவேலு முத்துலட்சமி” காம்பினேஷன் போல இருந்தது.
.
ஒரு கட்டத்தில் ராகுல் “The great tamil poet” என்று ஆரம்பித்தவுடன் நம் மனதுக்குள் ஒரு ஜெர்க் “அய்யயோ யாரை இழுத்து தெருவில விடப் போறானோன்னு”
.
வழக்கம் போல “பெயரைக் கெடுக்கும்” பப்பு திருவள்ளுவரை “திருவா.. லவ… வலுவா” என்று துழாவ ஆரம்பித்ததும் வந்த சிரிப்பை மீறி அடுத்த ஜெர்க் நம் மனதில் “எந்த குறளோட குரல்வளைய நெரிக்கப்போறானோன்னு தெரியலையே” என்று.
.
அங்கதேன் ட்விஸ்ட் வச்சார் ராகுல். “He said உண்மையே வெல்லும்” என்று சட்டென்று முடித்து விட்டார். குறள் 7 பதம் கொண்டது, இவர் இரண்டிலேயே முடித்துவிட்டாரே!
.
“உண்மையே வெல்லும்” – அவ்வளவுதான் திருக்குறள். ஆனால் தங்கபாலுவோ இன்னும் வரும், மொழி பெயர்க்கலாம் என்று காத்திருக்க, சிறிது நேரம் கழித்து ஒன்னும் வராமல் “அவ்வளவுதான் போலிருக்கு இன்னைக்கி” என்று அதையும் மொழி பெயர்த்து அடுத்த அதிர்ச்சிக்காக காத்திருந்தார்.
.
“உண்மை வெல்லும்” “இது எந்தக் குறள் அய்யா” என்று “தேவர் மகன் ஸ்ருதி” போல நாமும் குழம்பி, சரி இது முப்பாலுக்கும் “அப்பால்” ஏதோ போல என்று மனதை தேற்றிக்கொண்டு அடுத்த வரிக்காக ஒரு திகிலுடன் காத்திருந்தோம்.
.
நாம் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. கடைசியில் ராகுல் “டெல் மோடிஜி, உண்மை ஜெல்லும்” என்றார்.
.
“ஜெல்லுமா” என்று தங்கபாலு, துரைமுருகனைவிட அதிகமாக ஒரு expression கொடுக்க, பப்புவோ “i know what i mean, please go ahead” என்று புன்னகையுடன் உத்திரவாதம் கொடுக்க, தங்கபாலுவோ மையமாக “உண்மை செல்லும்” என்ற வாக்கில் ஏதோ மையமாக சொல்லி வைத்து முடித்தார்.
.
இந்த எழுச்சி உரை முடிந்தவுடன் அனைவரும் ராகுலை உச்சி முகர்ந்து “அனல் பறக்கும் பேச்சு” என்று கொஞ்சாத குறை.
.
கடைசியில் வைகோ “கண்ணுல ஜலம் வச்சுண்டு” வந்து இரண்டு முறை கைகொடுத்து “வாழ்த்து” சொன்னது மனதுக்கு ரொம்பவும் ஆறுதலாக இருந்தது.
.
உண்மை ஜெல்லட்டும்.
– கார்த்திக் விஸ்வநாதன் (Karthik Viswanathan)