செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவனுக என்று பொருமித் தள்ளுகிறார்கள் கன்னியாகுமரி வாசிகள்!
ஏன் இந்தப் பொருமல்? காங்கிரஸ் கட்சியின் கொடிக்கும், இந்திய தேசியக் கொடிக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் அதிகாரிகளின் செயலால்தான்!
வழக்கம் போல், மூன்று வண்ணங்கள் தீட்டப் பெற்றிருந்தால், அது காங்கிரஸ் கட்சிக் கொடி என்று சாதாரண குடிமகன் நினைக்கலாம்.. ஆனால் அதிகாரிகள்?
அவர்கள் என்ன படித்து எப்படி இந்தப் பொறுப்புக்கு வந்தார்களோ என்று ஆச்சரியப் படுகிறார்கள் ராமபுரம் மக்கள்!
கன்னியாகுமரியில் தேர்தல் விதி மீறல் எனக் கூறி ராமபுரம் ஊராட்சியில் இந்திய தேசியக் கொடி ஏற்றப் பட்டிருந்த கொடிக் கம்பம் அமைக்கப்பட்ட இடத்தை ஜெசிபி கொண்டு இடித்து தரை மட்டமாக்கியுள்ளனர் அதிகாரிகள்.
மேலும், கொடிக் கம்பத்தையும் உடைத்து எறிந்துள்ளனர் குமரி மாவட்ட தேர்தல் அதிகாரிகள். தேசியக் கொடிக்கம்பத்துக்கும் காங்கிரஸின் கொடிக்கம்பத்துக்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கிறார்கள் அதிகாரிகள்?!
தேசியக் கொடி கம்பத்தை இடித்த, தேசியக் கொடியை அவமதித்த அதிகாரிகள் மீது நடவடக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள் ஊர் மக்கள்!
தகவல் உதவி: எரச்சகுளம் காளியப்பன்