Home Blog Page 5695

பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது

உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை
வார வர்த்தகத்தின் 4வது நாளான இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.இன்று மாலை நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்ந்து 28,226 புள்ளிகளாக உள்ளது.தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 17 புள்ளிகள் உயர்ந்து 8,734 புள்ளிகளாக உள்ளது.
*தங்கம், வெள்ளி மாலை விலை நிலவரம்*
22 கேரட் தங்கம் ஒரு கிராம் – ரூ.2,809.
22 கேரட் தங்கம் ஒரு சவரன் – ரூ.22,472.
24 கேரட் தங்கம் ஒரு சவரன் – 
வெள்ளி: ஒரு கிராம் – ரூ.45.80.
வெள்ளி கட்டி: ஒரு கிலோ – ரூ.42,835

ஏர்செல்-மேக்சில் வழக்கிலிருந்து மாறன் பிரதர்ஸ் விடுவிப்பு

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கிலிருந்து கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி விடுவித்தது சி.பி.ஐ. நீதிமன்றம்.

சில ஆண்டுகளில் சீனா மீது போர்: அமெரிக்க அதிபரின் ஆலோசகர்!

வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆலோசகரான ஸ்டீவ் பெனான் அளித்த பேட்டியில் “சந்தேகமில்லை இன்னும் சில ஆண்டுகளில் சீனா மீது போர் தொடுக்கப்படும்” என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராகப் பதியேற்றது முதல் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார். அமெரிக்கவாழ் வெளிநாட்டவர்களுக்கான விசா அனுமதி தொடர்பான நடவடிக்கைகளை அவரது அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இதனால், அமெரிக்க டாலர் மதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. அதிபர் டிரம்ப்பின் அதிரடித் திட்டங்களில் ஒன்று, சீனா மீதான போராக இருக்கும் என மக்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள்.

டிரம்ப், தாம் பதவி ஏற்கும் முன்பே சீனா தனது நாணய மதிப்பைக் குறைத்தது குறித்தும், தென் சீனக்கடலில் ராணுவ விரிவாக்க அடாவடி நடவடிக்கை குறித்தும் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் டிரம்ப்பின் முதன்மை ஆலோசகரான ஸ்டீவ் பெனான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “சந்தேகமில்லை இன்னும் சில ஆண்டுகளில் சீனா மீது அமெரிக்கா விரைவில் போர் தொடுக்கும்” என்று கூறியுள்ளார்.

சீனா மீதான போரை உறுதிப்படுத்தும் வகையில் பேசிய பெனான், அதிபர் ட்ரம்ப்பின் தேசியப் பாதுகாப்பு மற்றும் திட்டக்குழுவில் முதன்மை ஆலோசகராக இருப்பவர். அமெரிக்கக் கடற்படையின் பசிபிக் பெருங்கடல் பகுதியில் தலைமைக் கமாண்டோ பொறுப்பில் இருந்தவர்.

பசிபிக் கடல் எல்லைப் பங்கீடு தொடர்பாக சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடையே தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. சீனாவும், பசிபிக் பெருங்கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கி தனது ராணுவத் தளவாடங்களை நிறுத்தியுள்ளது. கடந்த வாரம் சீன ராணுவ உயர் அதிகாரி ஒருவர், “அமெரிக்கா உடனான போர் என்பது வெறும் கனவுப் பேச்சு இல்லை. அதற்கான திட்டங்கள் நிறைவேறிக் கொண்டே இருக்கின்றது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பெனானின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. ஆனால், சீனாவுடன் போர் என்றால் அது சீனா மீதான போராக மட்டும் அது இருக்காது. சீனாவின் நேச நாடான ரஷ்யாவும், பாகிஸ்தானும் அவர்களுடன் இணையும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை உரிமைப் பிரச்னையாக மட்டும் இல்லாமல், சர்வதேச அரசியலில் மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியமாக உருப்பெற்றுவிடும். அப்படி என்றால் இன்னும் ஐந்து வருடங்களில் சீன – அமெரிக்கப் போர் வருவதற்கான ஒத்திகையாகவும் இது இருக்கக் கூடும் என்றே கருதப்படுகிறது.

முதல்வர் நாற்காலிக்கு குறி பார்க்கும் சசிகலா: செக் வைக்கும் மத்திய அரசு!

சென்னை:
தமிழக முதல்வராக முதல்வர் நாற்காலியில் அமர பிப்ரவரி 8 அல்லது 9-ந் தேதியை தேர்வு செய்து வைத்திருந்தார் வி.என்.சசிகலா. ஆனால் மத்திய அரசோ சசிகலா முதல்வராவதைத் தடுக்கும் வகையில் நெருக்கடிகளைக் கொடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சசிகலா குறித்த வழக்குகள் அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு தாமே முதல்வராக வேண்டும் என சசிகலா முயன்று வரும் வேளையில், அவர் மீதான வழக்குகளைக் காரணம் காட்டி, சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன் ஆகியோர் தாமே முதல்வர் நாற்காலியில் அமர்கிறோம் என வற்புறுத்தி வந்தனர்.

ஆனால், ஓ,.பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளித்து வரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்து, சசிகலாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார். திமுக., வெளிப்படையாகவே, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர ஆதரவு என்று அறிவித்து விட்டது. இதனை அக்கட்சியின் துரை.முருகன் அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார். சசிகலா தரப்பு அமர்வதைக் காட்டிலும், ஓபிஎஸ்,ஸே தமக்கு நல்லது என்று திமுக நினைக்கிறது.

இதை அடுத்து நடராஜனும் திவாகரனும் முதல்வர் ஆசையில் இருந்து ஒதுங்கிக் கொள்ள, தற்போது மீண்டும் சசிகலா முதல்வர் நாற்காலியில் அமர தீவிரம்காட்டி வருகிறார். தமிழக பொறுப்பு ஆளுநர் ஆளுநர் வித்யாசகர் ராவின் சென்னை வருகை தொடர்பான விவரங்களை கேட்ட அவர், பிப்ரவரி 8 அல்லது 9-ஆம் தேதி முதல்வர் பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை கொடுக்கப்படவில்லை.

ஏற்கெனவே சசிகலா முதல்வர் பதவியில் அமர தீவிரமாக காய் நகர்த்தி வந்தபோது, தில்லி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழக விவகாரங்களை பிரதமர் மோடிக்குத் தெரியப்படுத்தினார். அதை தீவிரமாகக் கேட்டுக் கொண்ட மோடி, முதல்வர் பணியை தைரியமாகச் செய்யுமாறு பன்னீர்செல்வத்துக்கு பச்சைக்கொடி காட்டினார். மற்ற விவகாரங்களைத் தாம் பார்த்துக் கொள்வதாகக் கூறியிருந்தாராம்.

இந்நிலையில், மத்திய அரசு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவுக்கு கண்டிப்பான ஒரு உத்தரவை பிறப்பித்ததாம். முதல்வர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக ஓ. பன்னீர்செல்வம் நேரில் வந்து கடிதம் கொடுத்தால் மட்டுமே ஏற்க வேண்டும்; பேக்ஸ் மூலமாகவோ வேறு நபர்களோ வந்து கொடுத்தால் அதை ஏற்கவே கூடாது என்று வலியுறுத்தியது. மேலும், சசிகலா தொடர்பான வழக்கு விவகாரங்களிலும் மத்திய அரசு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

மத்திய அரசின் நெருக்கடியை சமாளிக்கும் வகையிலேயே அருண்ஜேட்லி நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டைப் பாராட்டி சசிகலா அறிக்கை விடச் சொல்லியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருதலைக் காதலில் கல்லூரி புகுந்து மருத்துவ மாணவியை எரித்து முன்னாள் மாணவர் வெறிச்செயல்

திருவனந்தபுரம்:

ஒருதலைக் காதலில் கல்லூரிக்குள் புகுந்து, மருத்துவ மாணவியை தீவைத்து எரித்த, முன்னாள் மாணவர் தானும் தீயில் கருகி மாண்டார்.

கேரள மாநிலம் கோட்டயம் காந்தி நகரில் தனியார் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் கோழிக்கோடு விரிபாடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி (21) என்பவர் 3ஆவது ஆண்டு பிசியோதரபி படித்து வந்தார். கொல்லம் அருகே உள்ள நீண்டகரையைச் சேர்ந்த ஆதர்ஷ் (25), இதே கல்லூரியின் முன்னாள் மாணவர். இவர் அந்தக் கல்லூரி அருகே பேன்சி கடை நடத்தி வந்தார்.

அவரது கடைக்கு மாணவி லட்சுமி பொருட்கள் வாங்க வந்த போது அவர்கள் இருவரிடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஆதர்சுக்கு அந்த மாணவி மீது காதல் ஏற்பட்டது. அவர் தனது காதலை அவரிடம் தெரிவித்த போது அதை ஏற்க லட்சுமி மறுத்து விட்டார். அவரிடம் நட்புடனேயே பழகியதாக லட்சுமி கூறியுள்ளார். ஆனாலும் ஆதர்ஷ் தனது காதலை கைவிடாமல், தன்னைக் காதலிக்கும் படி தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். இதனால் அவரது கடைக்குச் செல்வதை லட்சுமி தவிர்த்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆதர்ஷ், நேற்று பகல் கல்லூரி உணவு இடைவேளையின் போது கல்லூரிக்குள் நுழைந்தார். லட்சுமி படிக்கும் வகுப்பறைக்குள் சென்ற அவர் தன்னைக் காதலிக்கும் படி லட்சுமியிடம் மிரட்டியுள்ளார். ஆனால் அவரைக் கண்டித்த அவர், ஆதர்ஷை வகுப்பறையை விட்டு வெளியே செல்லும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற ஆதர்ஷ் தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை மாணவி லட்சுமியின் மீது ஊற்றி தீ வைத்தார். பிறகு அவர் லட்சுமியை கட்டிப்பிடித்துக் கொண்டார். இதனால் இருவரின் உடலிலும் தீ பரவியதால் அவர்கள் அலறினர். தங்கள் கண் முன் நடந்த இந்தக் கொடூரச் செயலைப் பார்த்த மாணவ- மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அவர்களைக் காப்பாற்ற முயன்ற சில மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே இருவரும் கருகி பிணமாகச் சாய்ந்தனர். கல்லூரி வகுப்பறையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது.

வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது: அருண் ஜெட்லி

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
2017-18 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அருண் ஜெட்லியால் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ரூ.21,47,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. பட்ஜெட் அறிவிப்பின் பின்னர் பேசிய அருண் ஜெட்லி இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ”இளைஞர் திறன் மேம்பாட்டுக்காக ’SANKALP’ (Skill Acquisition and Knowledge Awareness for Livelihood Promotion Programme) என்ற திட்டம் ரூ.4,000 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டிலுள்ள சுமார் 3.5 கோடி இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.
தற்போது நாட்டில் 60 மாவட்டங்களில் ‘பிரதான் மந்திரி கவுஷல் கேந்திரா’ என்ற திறன் மேம்பாட்டு மையங்கள் இருக்கின்றன. அதிவிரைவில் 600 மாவட்டங்களில் இந்த மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், நாடு முழுவதும் சுமார் 100 சர்வதேச திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்களில் அந்நிய மொழிகளில் சிறப்பான முறையில் பயிற்சிகள் அளிக்கப்படும். இதன்மூலம் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்கள் பயன்பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.

பன்னீர்செல்வத்தை ஆதரிக்க தயார் : துரை.முருகன்

*பன்னீரை ஆதரிக்க தயார்: துரைமுருகன்*
வியாழன், 2 பிப் 2017
சட்டசபையின் நேற்றைய கூட்டத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தை திமுக மூத்த தலைவர் துரைமுருகன் பாராட்டிப் பேசினார்.
நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 23ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து சபை நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கவர்னர் உரைக்கு பதில் தெரிவித்து, உறுப்பினர்கள் பேசும்போது, அவர்களது கேள்விக்கு அமைச்சர்கள் பதில் தெரிவித்தனர். இந்நிலையில், சட்டசபை கூட்டம் நேற்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவையில் இருக்கும்போது, ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர் கட்சி உறுப்பினர்களும் நேருக்கு நேராக சந்திக்கும் வாய்ப்பு வந்தால்கூட பெரும்பாலும் அதை தவிர்த்து விடுவார்கள். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்பாராத திருப்பமாக வடமாநில அரசியல் சம்பவங்கள்போல், அரசியல் கலாச்சாரம் மாறி வருகிறது. இது ஒரு நல்ல ஆரோக்கிய அரசியலுக்கு அடையாளமாக உள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற சட்டசபையின் இறுதிக்கூட்டத்தில், முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவளிப்பது போல் துரைமுருகன் பாராட்டிப் பேசினார். அதன் விபரம் இதோ…
"நன்றாக பாராட்டுகிறோம்…
நீங்களே தொடர்ந்து முதலமைச்சராக இருக்க பாராட்டுகிறோம்…
5 ஆண்டுகளும் நீங்களே முதல்வராக இருக்க பாராட்டுகிறோம்…
அதற்கான சக்திகளை நாங்கள் தருகிறோம்…
அதற்கு எதிராக உங்கள் பின்னால் இருப்பவர்கள் போகாமல் பார்த்து கொள்ளுங்கள்..
மனப்பூர்வமாக பாராட்டுகிறோம்…"
என்று சிலேடையாகக் கூறினார்.
தமிழக சட்டசபையில் ஆளும் கட்சியினர், தங்களுக்குப் பிடிக்காத பேச்சுகளை அவைக்குறிப்புகளில் இருந்து நீக்கிவிடுவது வழக்கம். இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்களை முகம் சுளிக்க வைத்த
 துரைமுருகனின் இந்த பேச்சு அவைக்குறிப்பில் இருந்து இன்னும் நீக்கப்படாதது ஆச்சர்யத்தை அளிக்கிறது.

ஸ்டாலின் மனு தள்ளுபடி

*ஸ்டாலின் மனு தள்ளுபடி!*
வியாழன், 2 பிப் 2017
ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ, என்ஐஏ அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கக்கோரி திமுக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக திமுக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த பொது நல மனுவின் விவரம் வருமாறு:
சென்னை மாநகரில் ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த மாதம் 23, 24 ஆகிய இரு நாள்களில் வன்முறை நடந்தது. இது குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், தேசிய புலனாய்வு அமைப்பு, சிபிஐ, பிற மத்திய புலனாய்வு அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும்.
மேலும் வன்முறைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை இடை நீக்கம் செய்து, வன்முறையால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிட்டு இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்கான அரசாணையை தாக்கல் செய்தார்.
ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத் தலைவராக எஸ்.ராஜேஷ்வரன் நியமனம்!
அப்போது மனுதாரர் தரப்பு மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் முன் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வன்முறை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அரசு ஏற்கனவே அமைத்துள்ளது. மேலும் தவறிழைத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எனவே, தற்போதைய சூழலில் இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. மனுதாரர் தன்னிடம் உள்ள வீடியோ உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் விசாரணை குழுவிடம் வழங்கலாம் என்றனர். இதையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறியதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சசிகலாவுக்கு புதிய சிக்கல்!

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது அந்நிய செலவாணி மோசடி (ஃபெரா) வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சசிகலாவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
1990களில் வெளிநாட்டில் இருந்து சுசீலா என்பவரிடம் உரிய அனுமதியின்றி பணம் பெற்றதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது 1996-ஆம் ஆண்டு அமலாக்கத் துறை அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக மூன்று வழக்குகளை தாக்கல் செய்தது. அதையடுத்து, சசிகலா 1996இல் கைது செய்யப்பட்டார். 
அதன் பின்னர், சசிகலா ஜாமீனில் வெளியே வந்தார். இதனையடுத்து இந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை விடுவித்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் இருந்து சசிகலா, அவரது சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோரை கீழ் நீதிமன்றம் விடுவித்ததை ரத்துசெய்து உத்தரவிட்டது. மேலும் சசிகலா அந்நிய செலவாணி மோசடி வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
2015இல் சசிகலா மீதான இரு ஃபெரா வழக்குகள் தள்ளுபடியானாலும் கூட மேலும் 3 வழக்குகளை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. தள்ளுபடி செய்த 2 வழக்குகளிலும் கூட அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சசிகலாவிற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

1.75 கோடி கார்டுகளில் உள் தாள் ஒட்டப்பட்டுள்ளது

ஜனவரி., வரை, 1.75 கோடி ரேஷன் கார்டுகளில், உள்தாள் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில், புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 2009ல் முடிவடைந்தது. பின், உள் தாள் ஒட்டப்பட்டு, அதன் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, இந்த ஆண்டுக்கு, உள் தாள் ஒட்டும் பணி, ரேஷன் கடைகளில், ஜன., 2ல் துவங்கியது. இதுவரை, 1.75 கோடி கார்டுகளில், உள் தாள் ஒட்டப்பட்டுள்ளது.
உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரிசி, சர்க்கரை, காவலர் கார்டுகளுக்கு, ரேஷன் கடைகளில், உள்தாள் ஒட்டப்பட்டு, புதுப்பிக்கப்படுகிறது. பொருளில்லா ரேஷன் கார்டுதாரர்கள், இணையதளத்தில் புதுப்பித்து கொள்ளலாம்.
ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 35 ஆயிரம் பொருளில்லா கார்டுகள் உட்பட, 1.93 கோடி ரேஷன் கார்டுகள் பதிவாகியுள்ளன. அதில், 1.75 கோடி கார்டுகளில் மட்டும் உள் தாள் ஒட்டப்பட்டுள்ளது. உள்தாள் ஒட்டுவதிலும், சிலர் அலட்சியம் காட்டி வருகின்றனர். உள் தாளில், வரும் டிசம்பர்., வரை செல்லும் என, குறிப்பிட்டிருந்தாலும், ஏப்ரல்., முதல், 'ஸ்மார்ட்' கார்டு உறுதியாக வழங்கப்படும். இவ்வறு அவர் கூறினார்.