சென்னை:
ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களின் போது, பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்காமல் பாதுகாப்பாகவும் அதே நேரம் திறமையாகவும் கையாண்டு அமைதியை ஏற்படுத்தியதற்காக, திருச்சி காவல் துறை துணை ஆணையர் மயில்வாகனனை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், அவருடன் நின்றுகொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், இதே போன்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையைச் செவ்வனே செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
திருச்சி டிசி மயில்வாகனனை அழைத்துப் பாராட்டிய முதல்வர்
சட்டசபையில் அரும்பும் நாகரிகம்!
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, தி.மு.க., உறுப்பினர்களை அதிகமாக கடுப்பேற்றுவது யார்? வெளிநடப்பு செய்ய வைப்பது யார்? என்பதில், அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கிடையே ஒரு மறைமுக போட்டியே நிலவும். அதற்காக, ‘2ஜி, மைனாரிட்டி, குடும்ப அரசியல், அழகிரி, ராசா’ போன்ற வார்த்தைகளை அடிப்படையாக வைத்து விதவிதமாக, உரைகளை, தயாரித்து வந்து பேசி, அம்மாவை அசத்துவர். ஒரு எம்.எல்.ஏ., பேசிய பேச்சால், அடுத்த தொடரிலேயே அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. இது போதாதா? பெரும்பாலான அ.தி.மு.க.,வினர் பேசும்போது, தி.மு.க., எதிர்ப்பால், அவையில், கடும் அமளி நிலவும்.
ஆனால், தற்போது நடக்கும் தொடரில், ஆளுங்கட்சியினரின் அணுகுமுறை சற்று மாறியிருப்பதை பார்க்க முடிகிறது. அவர்களது பேச்சுக்களில், முன்பிருந்த அந்த வெறுப்பை தூண்டும் வார்த்தைகள் இல்லை. அதனால், தி.மு.க.,வினரும் அமைதி காப்பதை பார்க்க முடிகிறது. தடாலடி, தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன், விவகாரமான, மெரினா கலவரம் பற்றி பேசியதை பார்க்கவேண்டுமே..அவரா இது என எண்ணத் தோன்றியது. அதற்கேற்றாற் போல், அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் கூட, அன்பகழன் தானா பேசுவது என, . ஆச்சரியமாக உள்ளது என்றார்.
மொத்தத்தில், அனல் பறக்கும் விவாதம் இல்லை. ஆனால், ஆரோக்கியமாக போய்க் கொண்டிருக்கிறது. நீடிக்க வேண்டுமே…அது தான் நம் கவலை!
யாரை அதிகம் புகழ்வது – அம்மாவையா? சின்னம்மாவையா? – அ.தி.மு.க.,வினருக்கு இருக்கும் ஒரே கவலை இப்போதைக்கு இது தான். சின்னம்மா என்ற வார்த்தை ஒலிக்கும்போது, மேசையை தட்டும் முதல்வரை பார்க்கத்தான் என்னவோ, போல் இருக்கிறது.
- தகவல்: சசிதரன் சுதர்ஸனம்

