புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவரை கர்காவ்னில் மூன்று நாட்களுக்கு ஒரு அறையில் அடைத்து வைத்து, 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, பட்டினி போட்டுள்ளது. அந்த 5 பேர் கும்பலின் முக்கிய நபர் மீது ஏற்கெனவே ஒரு பாலியல் பலாத்கார வழக்கு உள்ளது. போலீஸார் 5 பேரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்துள்ளது. குர்காவ்னில் உள்ள டிஎல்எப் 5வது ஃபேஸில் தங்கி வீட்டு வேலை செய்து வந்துள்ளார் ஒரு பெண். அவர் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது, அவரை ஒரு கும்பல் ஆட்டோ ரிக்சாவில் தூக்கிச் சென்று, வஸிராபாத் பகுதியில் ஒரு அறையில் அடைத்து வைத்தது. தலிப் என்ற பில்லு, ரூப் சந்த், விகாஸ், மோர்சிம் மற்றும் அகில் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல், அந்தப் பெண்ணை அடித்து, நிர்வாணமாக்கி துன்புறுத்தியது. பின்னர், அந்தப் பெண்ணை 5 பேரும் 3 நாட்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அடைத்து வைத்திருந்த அந்த 3 நாட்களும் அந்தப் பெண்ணுக்கு உணவு எதுவும் கொடுக்காமல் கண்டபடி தாக்கியுள்ளனர். இதில், அந்தப் பெண்ணின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடல் முழுதும் காயம் அடைந்துள்ளார். இந்நிலையில் வஸீராபாத் பகுதியில் செக்டார் 57ஐ ஒட்டிய பகுதியில் பெண் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கே சென்று அறைக் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, பெண் ஒருவர் உடல் முழுவதும் காயங்களுடன் இருந்துள்ளார். அவரை மீட்ட போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அந்தப் பெண்ணை அடைத்து வைத்து துன்புறுத்திய 5 பேரையும் கைது செய்தனர். கர்காவ்ன் ஏசிபி ராஜேஷ் குமார் இது குறித்துக் கூறியபோது, அந்தப் பெண்ணை அறையில் வைத்து, அறையை வெளியில் பூட்டியுள்ளனர். 24 மணி நேரமும் காவலுக்கு ஒருவர் இருந்து, அறையில் இருந்து அந்தப் பெண் வெளியேறிவிடாமல் பார்த்துக் கொண்டுள்ளனர். தலிப் அந்தப் பெண்ணுக்கு ரூ. 1 லட்சம் கொடுத்து அவரைத் தன்னுடன் வாழ்க்கை முழுவதும் இருக்குமாறு கேட்டுள்ளார் என்று ஒருவர் கூறியுள்ளார். அக்கம்பக்கத்தில் சிலர் கூறியபோது, அந்தப் பெண் அல்டாஃப் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது அல்டாஃப் பணத்தை தர மறுத்துள்ளார். பின்னர் அல்டாஃப் அந்தப் பெண்ணை முறைகேடாக நடத்தி அவரை மிரட்டியுள்ளார். அதன் பிறகு அந்தப் பகுதியில் தாதா போன்று வலம் வந்த தலிப்பிடம் அந்தப் பெண்ணுக்கு தகுந்த பாடம் கற்பிக்குமாறு கூறியுள்ளார். அதன்பிறகே, தலிப் அந்தப் பெண்ணைக் கடத்தி பலாத்காரம் செய்து தாக்கியுள்ளார்… என்று கூறியுள்ளார் ஏசிபி குமார். இந்நிலையில் தலிப் உள்ளிட்ட 5 பேர் மீதும் சுஷாந்த் லோக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
32 வயது பெண்ணை அறையில் 3 நாள் அடைத்து 5 பேர் கும்பல் பலாத்காரம்
பாட்டு பட்ட பாடு
பாட்டு பட்ட பாடு கழுதை மேய்த்தாலும் அரசாங்கத்தில மேய்க்கனும்… இது பழமொழி… பாட்டு பாடி பழகனும்னா அரசாங்க போட்டில கலந்து பாடனுங்கறது புதுமொழி…. நம்ம கதையோட நாயகன் கண்ணனோட அலுவலகத்துல பாட்டு போட்டி வந்தது…. வருடாவருடம் நடைபெறும் போட்டிதான். சென்னையில இருக்கற அத்தனை அரசாங்க அலுவலகத்திலுருந்தும் பாடறவங்க வருவாங்க. பிரச்சினை என்னன்னா இந்த போட்டில ஹிந்தி பாட்டு பாடனும்…. அதுவும் ஆண்கள் முகேஷ், கிஷோர் குமார் மற்றும் பெண்கள் லதா மங்கேஷ்கர் பாட்டுதான் பாடனும். எப்படி பாடினாலும் பரவாயில்லை, இவங்க பாட்டைத்தான் பாடியாக வேண்டிய சூழ்நிலை. பெண் குரலுக்கு ஆள் ரொம்ப எளிமையா கிடைச்சுடுச்சு…. ஆனா பாருங்க… இந்த ஆண் குரலுக்குத்தான் ரொம்ப DEMAND. நல்ல பாடற கண்ணனோட நண்பனுக்கு வேற முக்கியமான வேலை, போட்டி நடைபெறும் நாளில் முக்கிய வேலை வருவதால போட்டியில கலந்துக்க முடியாத சூழ்நிலை… யாரை அனுப்பறது போட்டிக்கு…. கண்ணனோட மேற்பார்வையாளர் ஆள் பிடிக்க ஆரம்பித்தார். கொஞ்சம் பாடத்தெரிந்த கண்ணனின் சக ஊழியரை பாட சொல்லி கேட்டார். அவருக்கு என்ன மனநிலையோ தெரியலை… எப்புவும் பிறர் கேட்கறத்துக்கு முன்னாடியே நான் பாடறேன்னு ஒத்துக்கறவர் சொன்னார்…. இப்பல்லாம் நான் போட்டில பாடறதில்லை… பாட்டு எழுதுறது…. பாட்டுக்கு மெட்டு அமைச்சு…. இசை அமைச்சு…. நானே அதை பாடறதுதான் எனக்கு புடிச்சிருக்கு… என்னை பாட சொல்லி தொந்தரவு செய்யாதீங்க என்றார். இதை கேட்டதும் கண்ணனோட மேற்பார்வையாளர் வேற ஒருத்தரை பாட சொல்ல முயற்சியெடுக்க ஆரம்பித்தார். அவர் முயற்சி செய்த ஒவ்வொருத்தரும் மறுக்க மறுக்க கண்ணனோட மேற்பார்வையாளர் முகம் சுருங்கி போனது. அவங்க படும் கஷ்டத்தைப்பார்த்துட்டு கண்ணனால சும்மா இருக்க முடியலை. பல நிகழ்ச்சி பார்த்த கண்ணன் பாட்டு பாடும் தரம் ஓரளுவுக்கு அறிந்ததால் தானே பாட முடிவு செய்தார்… அந்த முடிவுக்கு அவர் பின்னாடி ரொம்ப வருத்தப்பட்டார்… அதைப்பற்றி பிறகு பார்ப்போம்….. கண்ணன் பாடறேன்னு சொன்னதும் அவரோடு வேலை செய்பவர்கள் அனைவருக்கும் ரொம்ப மகிழ்ச்சி…. கண்ணனுக்கு வாய் கொஞ்சம் அதிகம்…. தன்னடக்கத்தோட சொல்லனும்னா ரொம்ப அதிகம். எல்லோருக்கும் என்ன எண்ணம்… இவன் எங்கே பாடப்போறான்… எல்லோரையும் கிண்டல் கேலி செய்து மகிழும் இவனை நாமும் கொஞ்ச நாள் கேலி செய்ய வாய்ப்பு கிடைத்து என்று எண்ணி கண்ணனுக்கு முகேஷின் பாட்டை பாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. கண்ணனுக்கு மனதில் தன்னைப்பற்றி தெரிந்தாலும் அலுவலகத்தில் ரொம்ப உதார்விடுபவர் என்பதால் அதை வெளியே சொல்லாமல் திருவள்ளுவர் சொன்ன உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதெற்கு ஏற்றவாறு முகேஷின் இக் தின் பிக் ஜாயேகா என்ற அருமையான பாடலை பாட… மன்னிக்கனும் பாட முயற்சி செய்ய முடிவு செய்தார். ரொம்ப சரியாக சொல்லனும்னா கொலை செய்ய முயற்சி செய்ய முடிவு செய்தார். கண்ணன் பெயர் பாட இருக்கின்றது என்று தெரிந்ததும் அவருக்கு பல போன் கால்கள்… என்னடா நீ பாடுவேன்னு எங்களுக்கு தெரியாது… இவ்வளவு நாள் எப்படி நீ பாடமா இருந்தே… இதற்கெல்லாம் அவர் பதில் அவருக்கே தான் பாடுவேன்றது இன்னிக்குத்தான் தெரியும் என்பது… கண்ணனின் நண்பர்கள் வட்டம் மிகவும் பெரியது… காட்டு தீயை விட வேகமாக பரவியது அவர் பாட்டை கொல்ல போற செய்தி… வீட்டிலும், அலுவலகத்திலும் அக்கறை உள்ள சிலர் வேண்டாம் என்று தடுத்தாலும் பலர் கொடுத்த நீ நல்லா பாடுவேன்ற பொய் போதை அவரை தடுமாற வைத்தது… கலி காலம் அல்லவா… பொய் வாய்மையை வென்றது. இது கண்ணனின் தன்மான பிரச்னை ஆனது…. பாட்டை ஒலி வடிவமாக எடுத்து தன் செல் போன், கம்ப்யூடரில் வைத்து பாட ஆரம்பித்தார். வீட்டிலும்…. அலுவலகத்திலும்… தன்னோட மற்றோறு பரிமாணம் பாடகன் ஆனது. 40 வருடம் மேடையேறி பாடாத அவர் பாட முயற்சி எடுத்தது வீணாய் போகக் கூடாது என்ற வைரக்கியத்துடன் karaoke யோடு பாட்டு பாட முடிவு செய்தார். பாட்டில் அவருக்கு நல்லா பாட வந்த இடம் லலாலல்லா என்ற கோரஸ் மட்டும்தான்… மத்த எல்லா இடமும் பிரச்சினைதான்… சரி வேற பாட்டு பாடலாம்னு பார்த்தா அதெல்லாம் இதைவிட கஷ்டமாக இருந்தது.. சரி முடிவு செய்து விட்டோம்…. பார்ப்போம் ஒரு கை.. என்று பாட்டை பாட முடிவு செய்தார். காலை, மாலை என்று பெருமாள் பெயரை ஜபம் செய்வதுபோல இந்த பாட்டை பாட ஆரம்பித்தார்… அவர் மனைவி சொன்னால் இதுக்கு நாலு ஸ்லோகம் சொன்னால் புண்ணியமாவது கிடைக்கும்… ஏன் இப்படி பாட்டு பாடி பல பேரின் பாவத்தை சம்பாதிக்கீறீங்க என்று.. அவர் அவளிடம் சொன்னார் – முன் வைத்த காலை பின் வைக்கும் பழக்கம் தன் பரம்பரைக்கே கிடையாது என்று. அவள் சொன்னால் நான் சொல்லட்டா எத்தனை முறை நீங்க மாறியிருக்கீங்க என்றதும். வடிவேலு மாதிரி அது நேத்து… நான் இன்னிக்கு சொன்னேன் என்ற டயலாக்கை வீசி விட்டு தன் பாட்டு பாடும் முயற்சியை தொடர்ந்தார். வீட்டில் இருக்கும் அவருடைய பெரிய பையனுக்கு கூட பாட்டு நல்லா வந்துவிட்டது… அவருடைய மண்டைக்குத்தான் சரியா ஏறலை… தன் வீட்டில் குடித்தனம் இருப்பவர்கள் கூட கோரஸை சரியா பாடி… ஸார் அந்த பாட்டில கோரஸ் மட்டும் அருமையா பாடறீங்க என்று கேலி செய்ய ஆரம்பித்தனர். பழக பழக வரும் இசை என்பதை நம்பித்தான் அவர் பாட முயற்சி செய்தார். ஆனால் அது கொஞ்சமாவது பாட தெரிஞ்சவங்களுக்குத்தான் என்பது கண்ணனுக்கு புரிய ஆரம்பித்தது. உண்மைய சொல்லனும்னா பாடறது அவருக்கு சுகமாத்தான் இருந்தது… ஆனா அவர் பாடறது பிறருக்கு சுமையா இருந்தது என்பதை அவரால் உணர முடிந்தது. பாடறது தனக்கு சரிப்பட்டு வராது போல தெரிய ஆரம்பித்தது. இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனை போல ஹிந்தி பாட்டென்ற வேதாளத்தை தன் முதுகில் சுமக்க தொடங்கினேன். சுமந்தது வீண் போகவில்லை… கொஞ்சம்… கொஞ்சமா… பாட தொடங்கினார்…. ரொம்ப நல்லா பாடலைன்னாலும் சுமாரா பாட ஆரம்பிச்சார்…. இதன் நடுவில் அவர் பாடுவதை கேட்டே தீரவென்றுமென்ற முடிவோட அவரோட அலுவலகத்தில் வேலை செய்பவர்களும், அவரது மேலாளரும் முடிவு செய்தனர். கண்ணன் அதுக்கு சில நிபந்தனை போட்டார். மாலை 6 மணிக்கு மேலதான் பாடுவேன்… எல்லா கதைவையும் முடினபிறகுதான் பாடுவேன். ஒரே ஒரு முறைதான் பாடுவேன்… அதற்கு அவர் மேலாளர் கேட்டார் மற்ற நிபந்தைனைகள் எல்லாம் சரி, அதென்ன ஒரே ஒரு முறைதான் பாடுவேன் என்பதென்பது… அவர் சொன்னார் நீங்க என்னை எத்தனை தர பாட சொன்னாலும் அதே தப்புதான் வரும்… என் தரம் அவ்வளவுதான். என்று… பிண்ணனி இசையோடு கண்ணன் பாடினதும்… அவரோட வேலை செய்யும் அனைவருக்கும் கொஞ்சம் வருத்தம்தான். என்னாட இவனை கொஞ்ச நாள் இதை வைத்து ஓட்டாலாமென்று பார்த்தால் சுமாரா பாடறானே…. பரிசு வேற வாங்கிட்டா… இவனை சமாளிக்க முடியாதே… என்ற மனக்கவலைகள் அவர்களை சூழ்ந்து கொண்டதை உணர முடிந்தது. அதை பார்த்தும் கண்ணன் சொன்னார் பாடி முடித்தும் தனக்கு முண்ணனி இசையமைப்பாளரிடமிருந்து வாய்ப்புகள் வரும் என்று… அவர் நண்பன் தைரியமாக சொன்னான் நினைப்புதான் பொழப்பை கெடுக்கும் என்று. அவர் சொன்னார்… ஏன் அவசரப்படறே…. நான் இன்னும் முடிக்கலே… அவங்க சொல்வாங்க…. நாங்க மிருகங்களை வைத்து படம் பண்ணப்போறோம் நீங்க அதுல கழுதைக்கு குரல் குடுக்க முடியுமா என்று…. இதை கேட்டதும் அனைவரும் இன்னிக்குத்தான் இவன் உண்மை பேசறடான்னு கண்ணனை பாராட்டினாங்க… பாடும் தினமும் வந்தது… ஸிடியில பாட்டை எழதி கண்ணனா எடுத்துக்கொண்டார். பிறரின் பாடும் தரத்தைப்பற்றிய தன் கணிப்பு தவறென்று உணரும் நிலை வந்தது கண்ணனுக்கு… முதலில் பாடியவர் அசத்தினார். அடடா… தனக்கு மேல ஒருத்தர் என்று நினைக்கும் போது 16வதாக பாட வரும் தனக்கு முன்னால் பாடிய பலர் அருமையாக பாட கண்ணனுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. பிறரை கிண்டல் செய்வதற்கும்… தாமே அந்த நிலைக்கு தள்ள படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தார். கண்ணனுக்கு ஒரு திறமை உண்டு தன் மனைவியை தவிர மற்ற எல்லாரையும் தன்னிடம் திறமை உண்டு என்று எளிமையாக ஏமாற்றிவிடுவார். அப்படி தன்னை நம்பும் ஒருவர்தான் போட்டிக்கு வந்த நடுவர்களில் ஒருவர். கண்ணனுக்கு நன்றாக தெரிந்தவர். அடடா தன்னுடைய சாயம் வெளுத்துடும் போலிருக்கே என்று வருத்தப்பட ஆரம்பிச்சார். பல வருடமா கட்டி காத்த கோட்டை பாட்டு மேல வந்த ஆசையால பாழா போயிடுமோயென்ற பயம் அவரை சூழ்ந்தது. அதுக்கும் மேல பிரச்சனைன்னு வந்தா எல்லாம் சேர்ந்து வரும் என்பார்கள்…. பட்ட காலிலேயே படும் என்பார்கள். ஆனால் பிரச்னை கண்ணன் பெரிய பையன் படிக்கும் பள்ளியிலிருந்து அவர் பாட ஆரம்பிக்கும்போது வந்த போனின் மூலம் வந்தது… கண்ணன் சொன்னார் நான் முக்கியமான போட்டியில் இருக்கிறேன், தயவுசெய்து 10 நிமிடம் கழித்து கூப்பிடுங்கள் என்று. சொல்லிவிட்டு தன் ஸிடியை தந்து பாட்டை போடச்சொன்னால் பாட்டின் இசை வரவில்லை. கண்ணனால் நன்கு அறிந்த கூட்டத்தின் ஒரு பகுதி இதுதான் நல்ல சந்தர்ப்பமென்று கூறி பாடதே என்றனர்.. மறு பகுதி அடுத்தாதாக பாடு என்றது…. ஆசை யாரை விட்டது…. சரி ஸிடியை சரி செய்து பாடுகிறேன் என்று கூறிய போது மீண்டும் பள்ளியிலிருந்து போன் கால். என்ன ஸார் உங்க பையன் காலை உடைத்துக் கொண்டிருக்கிறான்…. நீங்க போனை எடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று. கண்ணன் தன் பையனிடம் பேசினேன்…. என்னடா எப்படி இருக்கே… அவன் அந்த வலியிலும் கேட்டான்… அப்பா பாடிட்டியா என்று… நான் இன்னும் பாடலடா… கிளம்பி வரட்டுமா என்று கேட்க… இல்லப்பா நீ அங்க பாடிட்டு வா… நான் வீட்டில பட்ட வேதனை அனைவரும் படட்டும்னான். மேலும் சொன்னான் நான் என் நண்பனோட அப்பாவோட நம்ம வீட்டுக்கு போறேன்னு. கண்ணன் அக்கறையோட சொன்னார் வீட்டுக்கு போய் ஜஸ் வைச்சுக்கோ… 30 நிமிடத்துல வீக்கம் போலேன்னா அம்மாவோட போய் எக்ஸ்ரே எடுத்துக்கோ…. சரிப்பா என்றான் அவரின் மகன்… பாட போன கண்ணனுக்கு மீண்டும் சத்யசோதனை. ஸிடி மீண்டும் வேலை செய்யவில்லை. அதை சரி செய்ய எடுத்த பல முயற்சிகள் வீணானது… தன்னை பாடமால் இருக்க கடவுள் கொடுத்த பல வாய்ப்பை பயன்படுத்த தவறி, ஆனது ஆகட்டும் என்று பிண்ணனி இசையில்லாமல் பாட முடிவு செய்தார். பிறரையே டென்ஷன் செய்து பழகிய அவருக்கு டென்ஷன், பிரஸர் என்றால் என்ன என்று தெரிந்தது. 15 நாட்கள் காலை, மாலை, இரவு என்று நன்றாக மனப்பாடம் செய்த பாட்டு மறந்து, பார்த்து பாட ஆரம்பித்தார். எப்படியோ பாடி முடித்தார். கண்ணன் தெளிவாக அனைவரிடமும் தனக்கு பரிசு கிடைக்காததைப் பற்றி சொன்னார், இங்கு தன்னை விட பலர் நன்றாக பாடிய ஒரே காரணத்தினால்தான் தனக்கு பரிசு பெறும் வாய்ப்பை கிடைக்கவில்லையென்று. ஆனாலும் எல்லா பிரச்சனைகளுக்கும் நடுவே அவர் பாடியதால் பலரின் பாராட்டு கிடைத்தது. வெளியே மழைவேறு பெய்ய ஆரம்பித்தது… அனைவரும் உன் இசைமழையில் நனைய வருணபகவானே வந்துவிட்டார் என்றனர். நல்ல முயற்சி… நீ நல்லா பயிற்சி செய்தா பரிசு நிச்சயம் கிடைக்குமென்று உசுப்பிவிட்டார்கள். டென்ஷனில் பாதி மட்டுமே சரியாக பாடியதால் முழுமையாக அதை படுத்திவிட்டால்தான் திருப்தி என்ற நிலையை கண்ணன் எடுத்து அடுத்த விழாவில் தான் இந்த பாட்டை சரியாக பாடுவேன் என்று சபதம் எடுத்தார்.. தன் முயற்சியை பற்றி அவருடைய மேலாளர் சொன்ன வார்த்தைகள் நீங்கள் பாடியது நல்ல தைரியமான முயற்சியென்று சொன்னது மட்டும் கண்ணனின் நினைவில் நன்றாக பசுமரத்தானி போல் பதிந்து நின்றது……. பாட்டு கண்ணனிடம் பட்ட பாடு இதோட நிற்காது.
ஆட்சிக்கு வந்து 50 நாட்களில் ஆம் ஆத்மி., வி.ஐ.பி., ஆகிவிட்டனர்: அஜய் மக்கான்
புதுதில்லி: ஆட்சிக்கு வந்து 50 நாட்களிலேயே ஏழைகளின் கட்சி எனப்படும் ஆம் ஆத்மி கட்சி, வி.ஐ.பி., கட்சியாகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கான் கூறியுள்ளார். தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கு எதிரான புதிய உதவி எண்ணை அறிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. தில்லி தல்கடோரா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும் துணை முதல்வருமான மனீஷ் சிஷோடியா உள்ளிட்ட தலைவர்கள், தங்களது கார்களை விஐபி., விவிஐபி பார்க்கிங்களில் நிறுத்தியிருந்தனர். இதற்கு, ஆம் ஆத்மியினரிடையே விஐபி கலாச்சாரம் உருவாகியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன் தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு படங்களை வெளியிட்டுள்ளார். அதில், ஊழலுக்கு எதிரான உதவி எண் அறிவிக்கும் மாநாடு நடைபெறும் தல்கடோரா மைதானத்துக்கு வெளியே, விஐபி பார்க்கிங், விவிஐபி பார்க்கிங் பகுதிகள் என பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. 50 நாட்களில் ஆம் ஆத்மி கட்சி விஐபி; விவிஐபி கட்சியாக மாறிவிட்டது எப்படி என்று கூறியுள்ளார். விஐபி கலாச்சாரத்தை இப்போது உருவாக்கியுள்ள ஆம் ஆத்மி கட்சியினர், முன்பு எங்களை இப்படி பகிரங்கமாக குற்றம்சாட்டினர். இதே கட்சிதான் விஐபி கலாச்சாரத்துக்கு நாங்கள் முற்றுப் புள்ளிவைப்போம் என்று கூறியது. தற்போது அவர்களே நுழைவுப் பகுதிகளில் விஐபிகள் செல்லும் இடம் என்று பலகைகள் வைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார் அஜய் மக்கான்.
Just passed through the Talkatora Stadium- Look at the pictures- How in just 50 days AAP became a party of VIP&VVIP? pic.twitter.com/oOGPQewsD5 — Ajay Maken (@ajaymaken) April 5, 2015
மனிதாபிமானத்தை தேடி – ஹேமோ
எங்கள் வீட்டில் என்றும் காலை பொழுது மிகவும் பரபரப்பானது. நான் மட்டும் கொஞ்சம்…. இல்லை…. இல்லை… ரொம்ப சோம்பேறி….. காலை என்பதே 8 மணிக்கு மேல்தான்…. வெயில் தாங்காமல்… குளிர்சாதன வசதி இல்லாததால்…. மின்சாரம் சரியாக வரததால்… காற்றுக்காக ஏங்கி ஹாலில் தான் படுக்கை…. எப்பொழுதும் போல் ஒரு நாள் விடியற்காலை 5 மணிக்கு அப்பா…. அம்மா….. இங்கே வாங்க…… என்று என் சின்ன சிங்கம் கர்ஜித்தது. பாருப்பா நம்ம ரூமுல பூனை குட்டி போட்டிருக்கு என்ற எனது மகனின் வியப்புக் குரலுடன் என் காலை பொழுது அன்று மட்டும் விடியல் காலையில் தொடங்கியது. இதை கேட்டதும் கிரிக்கெட் தவிர மற்றவற்றை பற்றி செவிசாய்க்காமல் என்னோடு தூங்கி கொண்டிருந்த என் முதல் மகனும் எழுந்தான். ஒன்றல்ல…. இரண்டல்ல….. அழகழகாக ஐந்து சின்னஞ்சிறு குட்டிகள்… அதன் அழகு எங்களை கவர்ந்தது உண்மை. ஆனாலும் நாங்கள் மனிதர்கள் அல்லவா. எண்ணங்கள் பறக்க தொடங்கியது. எங்களின் தூங்கும் அறை மிகப்பெரியதல்ல. அதில் எப்படி பூனைக்கும் இடம் அளிப்பது. பூனை வெளியே போனதும் குட்டிகளை வெளியேற்றலாம் என நான் முடிவு எடுத்ததை எனது இரண்டு மகன்களும் தடுத்தனர். நாட்டில் வேண்டுமானால் ஆட்சி மாறி மாறி வரும்…. வீட்டில் என்றும், எப்போதும் அம்மாவின் ஆட்சி என்பதால், அம்மாவிடம் முறையிட்டனர். அம்மா…. பாவம்மா குட்டி பூனைகளே…. நடக்க கூட முடியலே… வெளியே விட்டா அதை நாய் சாப்பிடும்…. இங்கேயே இருந்துட்டு போகட்டும்… கொஞ்சம் வளர்ந்ததும் வெளியே விடலாம்…. இதனை என் மனைவியும் ஆமோதித்து… மேலும் சொன்னால் இந்த கடுவன் பூனை வெளியே குட்டிகளை சாப்பிட காத்து கொண்டிருக்கு என்று கூறி, குட்டிகள் இன்னும் 10 நாளில் பெரிசாயிடும்… நாம எல்லாரும் அது வரை ஹாலில் படுத்துக்கொள்ளலாம் என்று சொன்னதும், மனைவியின் சொல்லே மந்திரம் என்று ஏற்று, சுற்று வட்டாரத்தின் அறிவுரைகளை மீறி எங்கள் வீட்டில் பூனைக்கு இடம் கொடுக்கப்பட்டது. எங்கள் அறையில் நன்று வளர்ந்து வந்த பூனைக்குட்டிகள் அறையில் ஓடி விளையாட ஆரம்பித்ததும் வரத் தொடங்கியது அறிவுரைகள். பூனை வீட்டில் இருந்தால் ஆகாது. அது வாழ்க்கையை அது பார்த்து கொள்ளட்டும்… மிருகத்தின் மேல உனக்கு என்ன திடீர் அக்கறை…. உனக்கு படுக்க இடம் இல்லை… பூனைக்கு இடம் தேவையா? உனக்கு ஏன்டா இந்த வம்பு… பேசாம வெளியே கொண்டு போய் விடு…. நல்ல விஷயங்கள் எதுவும் ஏறாத மரமண்டையில் இந்த அறிவுரைகள் நன்றாக ஏறியது… இருந்தாலும் குட்டிகளின் மேல் இருந்த என் மகன்களின் அன்பு என் மனைவியை யோசிக்க வைத்தது… மனைவிக்கோ என் இரண்டு மகன்களின் விருப்பத்தை மாற்றிட மனம் இல்லை. நன்கு வசம் கண்ட பூனை குட்டிகளின் அம்மாவோ எங்கள் வீட்டை விட்டு செல்ல மறுத்தது. என் மனைவியின் அறிவுரைப்படி குட்டிகளின் அம்மாவோட பூனை குட்டிகளை எங்கள் வீட்டின் மாடி படிக்கட்டின் கீழே குடித்தனம் வைத்தோம். நாய்களின் பசி வேட்டையிலிருந்து குட்டிகளை காப்பாற்ற இந்த இடம் தாய் பூனைக்கு உதவியது. எங்கள் வீட்டின் பாலை குடித்து நன்கு வளர்ந்தாலும் அதற்கு பூனைக்கு எலிகளையும், அணில்களையும் மிகவும் பிடித்திருந்தது. தாய் பூனை தினம் தினம் எலிகளையும், அணில்களையும் கொண்டுவர அதை பூனை குட்டிகள் சாப்பிட்டதை என் மனைவி, என் அம்மாவுடன் என்னையும் சேர்த்து என்னை சுற்றி இருந்த பலர் விரும்பவில்லை. எனது பிள்ளைகளுக்கு பூனை குட்டிகளின் மேல் இருந்த பாசம் எங்களை எந்த முடிவும் எடுக்க விடாமல் தடுத்தது. இப்படி 20 நாட்கள் ஓடியது. எல்லோரும் என்னை குடைய ஆரம்பித்தனர். இந்த பூனைகளின் தொல்லை தாங்க முடியவில்லை… அதை வெளியேற்று என்று தொந்தரவு செய்ய நானும் மகுடிக்கு கட்டுபட்ட பாம்பாக, எனது சுய அறிவை மறந்து இரண்டு குட்டிகளை பக்கத்தில் உள்ள பூங்காவில் விடவும் மற்ற இரண்டு குட்டிகளோடு தாய் பூனையை என் நா(வீ)ட்டை விட்டு கடத்தவும் முடிவு செய்தேன். எனது மனைவியும், மகன்களும் மனதில் குறையுடன் என்னுடன் உடன்பட்டனர். இருப்பினும் என் நா(வீ)ட்டை விட்டு வெளியேற மறுத்த தாய் பூனை வாசலிலேயே இருந்தது பிடிவாதம் பிடித்தது. விடப்பட்ட இரண்டு குட்டிகளில் ஒன்று என் வீடு திரும்பியது மற்றொன்றை பற்றிய விவரம் தெரியவில்லை. இது எங்களின் மனதை நெருடியது…..குட்டிகளின் ஆட்டம், ஓட்டம் எங்களுக்கு பெரு மகிழ்ச்சியை தந்தது. அதனை கருத்தில் கொண்டு, வெளியே போரட்டம் நடத்திய பூனையின் போரட்டத்தை எங்கள் வீட்டின் அரசாங்கம் அதாவது என் மனைவி ஏற்றுக்கொண்டதால், பூனையின் பிடிவாதம் வெற்றி பெற்றது. மனைவி, மக்களின் அன்பு கட்டளையின் காரணமாக மீண்டும் எங்களது மாடிப்படிக்கட்டின் கீழேயே வெற்றிகரமாக பூனை தன் குட்டிகளுடன் குடியேறியது. குடும்பத்துடன் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. பூனைகளை யாராவது வளர்க்க முன் வந்தால் தந்து விடலாம் எனவும், அதுவரை அவற்றை இங்கேயே வளர்ப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. எல்லோரிடமும் பூனைகுட்டி என் வீட்டில் இருப்பது சொல்லப்பட்டது. எங்களின் மகிழ்ச்சியை அன்று இரவு நடந்த சம்பவம் முடித்தது. நடக்க ஆரம்பித்த குட்டிகள் வெளியே செல்ல இரவு வேளையில் நாய் ஒரு குட்டியை கொன்று தனது நீண்ட நாள் தோல்வியை சரி செய்தது. இதை தொடர்ந்து மறுநாளே மற்றொரு குட்டியையும் தாய் பூனை நாயிடம் இழந்தது. ஒரு மாதம் வளர்த்த என் மனைவி, மக்களை இந்த தொடர் இழப்பு பாதித்தது. என் மகன்களின் கண்ணீர் என்னை மிகவும் பாதித்தது. வளர்ந்து மீதி இருந்த இரண்டு குட்டிகளோடு எங்களை பரிதாபமாக பார்த்து விட்டு இனியும் இங்கு பாதுகாப்பில்லை என்று தாய் பூனை குட்டியுடன் எங்களை விட்டு விலகி சென்றது. குற்ற உணர்ச்சியில் நான் தவித்த போது… எனக்கு பல அறிவுரைகள் கிடைத்தன… நாம என்ன பண்றது… அதுக்குத்தான் கடவுள் அதுக்கு பல குட்டிகளை தரான் என்றார் ஒருவர்… நம்மால ஆனத நாம செய்தாச்சு…. இதுக்கு மேல என்ன பண்ண முடியும் என்றார் ஒருவர்… நாம என்ன கடவுளா? அது அது விதிப்படிதான் நடக்கும் என்றார் ஒருவர்… நம்மால முடிஞ்சதை செஞ்சாச்சு…. இதுக்கு மேல எப்படி அதை காப்பாத்த முடியும் என்றார் ஒருவர்…. இந்த மனிதர்களின் வாதத்தில் தொலைந்து போன என் மனிதாபிமானத்தை தேடத்தொடங்கினேன் அமைதியாக…..
திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. தூத்துக்குடி சின்னக்கடை தெருவைச் சேர்ந்த பில்லா ஜெகன் தூத்துக்குடி மாவட்ட திமுக., இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். மேலும் நடிகர் விஜய் மன்ற தலைவராகவும் உள்ளார். இன்று அதிகாலை பில்லா ஜெகன் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென 2 பெட்ரோல் குண்டுகளை அவர் வீட்டின் மீது வீசிவிட்டு தப்பிவிட்டனர். இதில் வீட்டின் முன்பு நின்ற பில்லா ஜெகன் மற்றும் அவரது வீட்டின் மாடியில் வசித்து வரும் அக்பர் ஷா என்பவரின் இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. மேலும் வீட்டின் முன்புறம் இருந்த பொருட்களும் தீப்பிடித்து எரிந்தன. இதை அடுத்து பில்லா ஜெகனுடன் அப்பகுதி மக்களும் சேர்ந்து தீயை அணைத்தனர். பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ், ஏ.எஸ்.பி. அருள்சக்தி குமார், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பகுதியை சேர்ந்த சிலருடன் பில்லா ஜெகனுக்கு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்த விவகாரம் பெட்ரோல் குண்டுவீச்சுக்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இருப்பினும் மேற்கொண்டு விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. பில்லா ஜெகன் மீது போலீஸ் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மணி ஆர்டர் சேவை நிறுத்தப் படுகிறது!
புது தில்லி: பாரம்பரிய தந்தி சேவைக்கு மூடு விழா நடத்தப் பட்டது போல், 135 ஆண்டுகால மணி ஆர்டர் சேவைக்கும் மூடுவிழா நடத்த அஞ்சல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அஞ்சலகங்களில் நடைமுறையில் இருக்கும் மணி ஆர்டர் – பணவிடை அஞ்சல் அனுப்பும் முறை செல்வாக்கை இழந்து வருகிறது. கிராமங்களில் மட்டுமே இன்றும் ஓரளவு நடைமுறையில் இருக்கும் மணி ஆர்டர்களின் இடத்தை வெறு சில நவீன தொழில்நுட்பங்கள் பிடித்து விட்டன. கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் இன்றளவும் ஓரளவு பயன்படுத்தி வருகின்றனர் என்றாலும், மணி ஆர்டர் மூலம் அனுப்பப் படும் பணம் உரியவரைச் சென்று சேரும் கால அளவை விட நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விரைவில் பணத்தை சேர்த்து விட முடியும் என்பதால், அதன் செல்வாக்கு இழந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், படிவத்தை நிரப்பி பணம் அனுப்பும் முறையான மணி ஆர்டரை முடிவுக்கு கொண்டு வர அஞ்சல் துறை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் அதிகமான தபால் நிலையங்களில் மணி ஆர்டர்கள் மூலம் பண விநியோகம் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர், தந்தி அனுப்பும் நடைமுறை, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக படிப்படியாக வழக்கத்தில் இருந்து மறைந்தது. சில மாதங்களுக்கு முன்னர் அனைத்து தபால் நிலையங்களிலும் பயன்பாட்டில் இருந்த தந்தி முறை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
“சத்தம் அதிகம் வரும் பாகம் அடி, குறைவாக உள்ளது நுனி.”
“சத்தம் அதிகம் வரும் பாகம் அடி, குறைவாக உள்ளது நுனி.” (பெரியவாளின் சிற்பக்கலை நுட்பம்) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் பத்ராசலத்தில் ஸ்ரீராமர் கோயில் திருப்பணி நடந்து முடிந்தது. கோயில் திருப்பணியில் கை தேர்ந்த கணபதி ஸ்தபதி அந்த பொறுப்பை ஏற்றிருந்தார். பத்ராசலத்துக்கு யாத்திரையாக வந்திருந்த மகாபெரியவர்களிடம் “தாங்கள் அவசியம் வந்து பார்வையிட வேண்டும்.தங்கள் கடாக்ஷம் வேண்டும்” என அழைத்தார் ஸ்தபதி.பெரியவர்கள் கோதாவரியில் ஸ்நானத்துக்குச் செல்லும் வழியில் அங்கே நுழைந்தார்கள். கல்தூண் ஒன்றில் சிற்பம் செதுக்கும் வேலை நடந்து வந்தது. “இந்தத் தூணுக்கு அடிப்பாகம் எது,நுனிப்பாகம் எது” என்று கேட்டார்கள் பெரியவர்கள். ஸ்தபதிக்கு ஒரே திகைப்பு! ‘இதைப் பார்த்தாலே தெரிகிறதே! இப்படி ஏதோ குழந்தைத்தனமாகக் கேள்வி கேட்கிறார்களே!’ என்று எண்ணியபடி அந்தப் பாகங்களைச் சுட்டிக் காண்பித்தார். “இந்த அடிப்பாகத்தை நுனியாகவும்,நுனியை அடிப்பாகமாகவும் மாற்றலாமா?”என்று கேட்டார்கள். ஸ்தபதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது. “செதுக்குவதற்கு முன்னால் ஒவ்வொரு தூணுக்கும் இதுதான் அடிப்பாகம்,இதுதான் நுனி என்று எப்படித் தீர்மானம் செய்வாய்” என்று கேட்டார்கள் சுவாமிகள். ஸ்தபதி பதில் சொல்லத் தெரியாமல் நின்றார். “சுத்தி எடுத்துவா, இதைக் கீழேயிருந்து மேல் வரை கத்தியால் தட்டு.ஏதாவது தெரிகிறதா பார்”என்றார்கள். தட்டியபிறகு ஸ்தபதிக்கு ஏதோ ஒரு சந்தேகம். ஆனால் சொல்லத் தெரியவில்லை. “மீண்டும் ஒருமுறை தட்டு.அதிலிருந்து வரும் சத்தத்தைக் கவனி” என்றார்கள். “கீழே சத்தம் ‘கணீர்’ என்று வருகிறது. மேலே செல்லச் செல்ல சத்தம் குறைகிறது” என்றார்,ஸ்தபதி. “மரத்திலே வைரம் பாய்ந்த கட்டை என்பார்கள். அது சிகப்பாகக் கெட்டியாக இருக்கும். சுலபமாகப் பிளக்க முடியாது.அதிலிருந்துதான் மரப்பாச்சி- மரப்பொம்மை செய்வார்கள்.நீ அதைப்பற்றி கேட்டிருப்பாய். அதுபோலதான் கல்லிலும் வைரம் பாய்ந்த பாகம் கெட்டியாய் இருக்கும். அதிலிருந்து வெண்கலம் போல ‘கணீர்’ என்று சத்தம் வரும். அதுவும் கெட்டியாக (அடர்த்தி நிறைந்ததாக) இருக்கும். அந்தப் பகுதியைத்தான் அடிப்பாகமாகக் கொள்வார்கள். “சத்தம் அதிகம் வரும் பாகம் அடி; குறைவாக உள்ளது நுனி. நீ சரியாகத்தான் வைத்திருக்கிறாய். உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. சொல்லத்தான் தெரியவில்லை” என்றார்கள் பெரியவர்கள். ஸ்தபதி உடனே சாஷ்டாங்கமாகப் பெரியவர்களின் காலில் விழுந்து நமஸ்கரித்து, “தங்கள் அருளால்தான் எல்லாம் நன்றாக அமைய வேண்டும்” என்று பிரர்த்தித்தார். அப்படியே அமைய ஆசீர்வதித்தார்கள் பெரியவர்கள். எல்லாக் கலைஞர்களுமே இப்படித்தான் முதலில் சாமான்யமாக மதித்து,கடைசியில்,’இவர்களிடம் நாம் கற்கவேண்டியது நிறைய இருக்கு’ என்ற முடிவுக்கு வருவார்கள். தெய்வத்துக்கு தெரியாத கலை ஏதும் உண்டா?
ராம நாமம் அதன் மதுரம் தாரக மந்திரம்
ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் வீரம் வீழாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் தோல்வி நிலைக்காது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் வெற்றி மாறாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் சக்தி குறையாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் துன்பம் தொடராது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் இன்பம் விலகாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் சோகம் வாட்டாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் தேகம் வருந்தாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் உடல் சோராது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் உயிர் பிரியாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் உழைப்பு வீணாகாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் பக்தி தோற்காது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் நம்பிக்கை மாறாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் வாழ்க்கை வீழாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் கல்வி போகாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் ஞானம் மாறாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் அன்பு குறையாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் கனவு தோற்காது ராம நாமம் அதன் மதுரம் தாரக மந்திரம் ராம நாமம் அதன் இனிமை வாழ்வினில் இன்பம் ராம நாமம் அதன் வலிமை தாரக மந்திரம் ராம நாமம் அதன் பெருமை பாரினில் இன்பம் ராமநாமம் நாளும் சொல்வோம் வாழ்வினில் வெல்வோம் ராம் ராம் ராம் சீதா ராம் ராம் ராம் ராம் தசரத ராம் ராம் ராம் ராம் கோசல ராம் ராம் ராம் ராம் ரகுகுல ராம் ராம் ராம் ராம் ஆனந்தராம் ராம் ராம் ராம் கோதண்ட ராம்
தில்லியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கை
புது தில்லி: தில்லியில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 2 தாக்குதல் சம்பவங்கள் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது. இது தொடர்பாக உளவுத்துறை நடத்திய தீவிர விசாரணையில், பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் இதேபோன்று தாக்குதல் நடத்த தில்லி நகரைக் குறி வைத்து சதித் திட்டம் தீட்டி இருப்பதாக தெரியவந்தது. இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைப்புகள் தில்லி போலீசாருக்கு அறிவுரைக் குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் தில்லியில் தாக்குதல் நடத்த திட்ட தீட்டி இருப்பதாக தெரியவந்து இருக்கிறது. அண்மையில் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று இது அமையக் கூடும். எனவே அங்கு எந்த அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடாமல் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

