திருச்சி: முதல்வரைச் சந்திக்க விவசாயிகளுக்கு தடை விதித்தது நியாயமில்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தேசிய, தென்னக நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் திருச்சி அய்யாகண்ணு தலைமையில், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைளை முன் வைத்துதொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் வாங்கிய அனைத்துப் பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; வறட்சியால் அழிந்துவிட்ட விவசாயப் பயிர்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்க வேண்டும்; 60 வயதான அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்ñதியம் வழங்க வேண்டும்; நதிகள் இணைப்பை செயல்படுத்த வேண்டும்; நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் ஆகிய 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திருச்சியில் விவசாயிகள் இரு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த மார்ச் 26 ஆம் தேதி திருச்சியில் இருந்து புறப்பட்டு, சென்னையில் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டிருந்த விவசாயிகளை திருச்சியிலேயே காவல்துரை தடுத்து நிறுத்தியது. பின்னர் அவர்கள் ஊர்வலமாகச் சென்று திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மார்ச் 31 ஆம் தேதி சென்னைக்கு வந்த விவசாயிகள், முதல்வரைச் சந்திக்க அனுமதிக்கப்படாமல் கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 1 ஆம் தேதி விவசாயிகள் மெரினா கடற்கரையில் இறங்கி போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வரும் தேசிய, தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் திருச்சி அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் முதல்வரைச் சந்திக்கவிடாமல் காவல்துறை முட்டுக்கட்டை போடுவதும், கைது செய்து திருப்பி அனுப்புவதும் வேதனை தருகிறது. தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்த கரும்பு கொள்முதல் விலையை வழங்காமல், சர்க்கரை ஆலைகள் விவசாயிகளை அலைக்கழித்து வருகின்றன. இதுகுறித்து தமிழக அரசு இதுவரை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்று ரூபாய் 3500, நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு, நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டது. இந்நிலையில், முதல்வரைச் சந்தித்து விவசாயிகள் தங்கள் கோரிக்கையை எடுத்துரைக்கவும் தடைபோடுவது சரியல்ல. எனவே தமிழக அரசு திருச்சியில் இருந்து சென்னை வந்து போராட்டம் நடத்தும் விவசாய சங்கத்தினரை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தவறான கேள்விக்கு மதிப்பெண் அதிகமாக வழங்கிய பேராசிரியருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை
புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2007–ம் ஆண்டு படித்த மாணவர்கள் அகிலன், பெருமாள். கடந்த 2007–ம் ஆண்டு நவம்பர்–டிசம்பர் மாதம் நடந்த தேர்வில் இந்த மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்கலைக்கழக பேராசிரியர் பிரபாகரன் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி இருப்பது தெரிய வந்தது. தேர்வில் 24 மதிப்பெண் எடுத்த அகிலனுக்கு 48 மதிப்பெண்ணும், 22 மதிப்பெண் பெற்ற பெருமாளுக்கு 42 மதிப்பெண்ணும் வழங்கியது தெரிய வந்தது. அதோடு மாணவர்கள் கேள்விக்கு தவறான பதில் எழுதியிருந்ததும் அதற்கு மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் தனித்தனியாக 2 வழக்கு பதிவு செய்து பேராசிரியர் பிரபாகரன், மாணவர்கள் அகிலன், பெருமாள் ஆகியோரை கைது செய்தனர். புதுவை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில் நீதிபதி வேல்முருகன் பேராசிரியர் பிரபாகரனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்தார். மாணவர்கள் அகிலன், பெருமாள் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
ஆவின் பால் வளர்ச்சியை தடுக்கும் தனியார் பால் கம்பெனி: பால் முகவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு
சென்னை பேரூர் நாடார் சங்கத்திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம், (ஆவின் மற்றும் தனியார் பால் முகவர்கள் கூட்டமைப்பு) மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்., அப்போது., இந்திய பால்வளத்தையும், ஆவின் நிறுவனத்தையும் காத்திடவும், Let Groupe Lactalis Thirumala நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்… மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக உலக பால் உற்பத்தியில் முதலிடத்திலும், உலகின் ஒட்டு மொத்த பால் உற்பத்தியில் 17% யும் வைத்துள்ள நமது இந்திய பால் வளத்தை குறி வைத்து பன்னாட்டு நிறுவனங்கள் படையெடுக்க தொடங்கியுள்ளன. அதன் முதற்கட்டமாக அண்டை மாநிலமான ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் “திருமலா பால்” நிறுவனத்தின் 26% பங்குகளை Carlyle Growth Capital Fund. எனும் நிறுவனம் சுமார் 650 கோடிக்கும், மீதமுள்ள 74% பங்குகளை உலகின் முன்னணி பால் பொருட்கள் நிறுவனமான Le Groupe Lactalis எனும் பன்னாட்டு நிறுவனம் சுமார் 1750 கோடி கொடுத்தும் கடந்த 2014ம் ஆண்டு வாங்கின. பொதுமக்கள் நலன் மீது சற்றும் அக்கறை இல்லாமல் கடந்த ஆண்டில் மட்டும் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 12.00 ரூபாய் வரை உயர்த்திய பன்னாட்டு நிறுவனமான Le Groupe Lactalis திருமலா பால் நிறுவனம் 3.00% கொழுப்பு சத்தும், 8.5% திட்டம் சத்தும் உள்ள Toned Milk போலே Speciale Toned Milk எனும் புதிய வகை பாலினை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் ஒரே அளவான 3.00% கொழுப்பு சத்தும், 8.5% திட சத்தும் உள்ள பழைய வகை Toned Milkஐ (MRP 44.00) விட புதிய வகையான Speciale Toned Milk (MRP 36.00) லிட்டருக்கு 8.00 ரூபாய் குறைவாக நிர்ணயம் செய்துள்ளது. ஒரே வகுப்பில் பாலில் பெயரில் மட்டும் சிறு மாற்றம் செய்து விட்டு புதிய பெயரில் அறிமுகம் செய்து விற்பனை விலையை லிட்டருக்கு 8.00 ரூபாய் குறைவாக நிர்ணயம் செய்துள்ளதற்கு காரணம் “ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது” எனும் பழமொழியைத் தான் நமக்கு ஞாபகப்படுத்துகிறது. கடந்த ஆண்டில் மட்டும் பால் விலையை லிட்டருக்கு 12.00 ரூபாய் வரை உயர்த்திய அதே பன்னாட்டு பால் நிறுவனமான Le Groupe Lactalis திருமலா பால் நிறுவனம் பழைய வகை பாலிற்கு விற்பனை விலையை குறைக்காமல் தற்போது பொதுமக்கள் நலன் மீது அக்கறை இருப்பதாக இரட்டை வேடம் போடுவதற்கு எங்களது “தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம்” கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. கடந்த 2014ம் ஆண்டு தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிய பிறகு பெரும்பாலான தமிழக விவசாயிகள் தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் ஊற்றுவதை குறைத்துக் கொண்டு ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றத் தொடங்கியதின் விளைவாக ஆவின் நிறுவனத்திற்கு பால் வரத்து அதிகரித்துள்ளதுடன் ஆவின் பால் விற்பனையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. தற்போது ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாத பன்னாட்டு பால் நிறுவனமான Le Groupe Lactalis திருமலா பால் நிறுவனம் ஆவின் பால் விற்பனையை குறைத்துக் கொண்டு தங்களது Speciale Toned Milk வகை பாலினை கட்டாயம் கொள்முதல் செய்து விற்பனையை அதிகரிக்க வேண்டும் எனவும், அவ்வாறு அப்பாலினை கொள்முதல் செய்து விற்பனையை அதிகரிக்காத பால் முகவர்களுக்கு அருகில் புதிய பால் முகவர்களை நியமனம் செய்யப் போவதாகவும், பழைய பால் முகவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் எனவும் மிரட்டி எச்சரிக்கை செய்து வருகிறது. ஒரே வகையான பாலிற்கு இரட்டை விலை நிர்ணயம் செய்திருப்பதுடன், ஆவின் பால் விற்பனையை குறைக்கச் சொல்லி பால் முகவர்களை அந்நிறுவனம் மிரட்டி வருவது பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் இந்திய குளிர்பான நிறுவனங்களை அழித்ததைப் போன்று இந்திய பால் நிறுவனங்களையும் அழிக்க இந்த பன்னாட்டு பால் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதோ எனும் பெருத்த சந்தேகத்தை எங்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு பன்னாட்டு நிறுவனமான Le Groupe Lactalis திருமலா பால் நிறுவனத்தின் அடாவடி, அராஜகப் போக்கினை உடனடியாக தடுத்து நிறுத்திடவும், ஆவின் நிறுவனத்தை பாதுகாத்திட பால் முகவர்களுக்கு உரிய தொழில் பாதுகாப்பு வழங்குவதோடு, ஆவின் நிறுவனத்தில் இன்னும் தொடர்ந்து வரும் இடைத்தரகர்கள் முறையை முற்றிலும் நீக்கி விட்டு பால் முகவர்களுக்கு நேரிடையான வர்த்தக தொடர்புகளை வழங்கிட வேண்டும் எனவும் எங்களது “தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம்” சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும், தமிழக பால்வளத்துறை அமைச்சர் அவர்களையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். மேலும் பால் முகவர்களை தொடர்ந்து மிரட்டி வரும் பன்னாட்டு நிறுவனமான Le Groupe Lactalis திருமலா பால் நிறுவனம் உடனடியாக தனது மிரட்டல் போக்கினை கை விட வேண்டும் எனவும் அவ்வாறு கை விடாதபட்சத்தில் சென்னையில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு வரும் 08.04.2015 புதன்கிழமை அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பது எனவும் முடிவு செய்திருக்கிறோம்.
கல்யாணம் களைகட்டும்! : மெய்யூர் ஸ்ரீசுந்தர்ராஜ பெருமாள்
தி.க.வின் தாலியறுக்கும் நிகழ்வை தடுத்து நிறுத்த முதல்வருக்கு இந்து முன்னணி கோரிக்கை
சென்னை: திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ள தாலியறுக்கும் நிகழ்வை தடுத்து நிறுத்த, காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது. அந்த அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் நா. முருகானந்தம் வெளியிட்ட அறிக்கையில், புனிதமான நாளில் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் தி.க.விற்கு பாடம் புகட்டுவோம்.. தமிழ்ப் புத்தாண்டு இந்துக்களுக்கு புனிதமான நாள். உலகின் தலைசிறந்த பாரம்பரியத்தைக் கொண்ட இந்து தர்ம வாழ்க்கையின் அடையாளமாக விளங்கும் தாலியை அறுத்து, இந்துக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தி மதக் கலவரத்தைத் தூண்ட நினைக்கும் திராவிடர் கழகத்தை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. ஒருவரின் நம்பிக்கை என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாகும். அதனை கொச்சைப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. திராவிடர் கழகமானது இந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல் மாட்டிறைச்சி பிரியாணி விருந்து என அறிவித்திருப்பதையும் கண்டிக்கிறோம். ஏப்ரல் 14 சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள். இந்த நாளில் சமுதாய ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் நாட்டில் நடந்து வரும் வேளையில், மக்களிடையே பகையை வளர்க்கவும், தங்களை விளம்பரப்படுத்த கீழ்த்தரமான காரியத்தை திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இது தடுக்கப்பட வேண்டும். ஜனநாயக ரீதியில் எமது எதிர்ப்பைத் தெரிவிக்க இந்து மதத்தின் மீதும், புனிதமான தாலியின் மீதும் நம்பிக்கையுள்ள ஒவ்வொரு இந்துக்களும் தங்கள் வீடுகளில் ஈ.வெ.ராவின் படத்தை கிழித்து தக்க மரியாதை செய்து தங்களது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று இந்து முன்னணி அறைகூவல் விடுகிறது. கோவையில் 8.4.2015 அன்று நடைபெற இருந்த மாட்டுக்கறி பிரியாணி விருந்துக்கு, இந்து முன்னணியின் எதிர்ப்பை அடுத்து காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனை வரவேற்கிறோம். இதுபோல திராவிடர் கழகத் திடலில் நடைபெறும் நிகழ்வும் தடுத்து நிறுத்திட காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
- என்று அவர் கூறியுள்ளார்.
துப்பாக்கி முனையில் சகோதரிகள் பலாத்காரம்:5 பேர் கைது
ஜரீப்நகர் உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜரீப்நகரில் சகோதரிகள் இருவரி துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற இளைஞர்கள் 5 பேர், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளான இருவரும் வேலைக்காக வீட்டில் இருந்து வெளியே சென்றபோது அவர்களை இளைஞர்கள் 5 பேர் கடத்திச் சென்றுள்ளனர். அப்போது சிறுமிகளின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் பலாத்காரம் செய்தவர்களைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி, பலாத்காரச் செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் துப்பாக்கி சூடு: காவலர் பலி; 2 பேர் காயம்
காஷ்மீரில் வடக்குப் பகுதியில் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் பலியானார், பொதுமக்களில் ஒருவர் உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியபோது, “பாரமுல்லா மாவட்டம் டங்மார்க் பகுதியில் உள்ள குன்சர் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து குன்சர் கிராமத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது ஒரு வீட்டினுள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டையில் காவலர் ஒருவர் பலியானார். பொதுமக்களில் ஒருவரும், ராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்தனர். அங்கே பயங்கரவாதிகள் இருவர் பதுங்கியிருக்கலாம் என்று தெரிகிறது… என்றார் அவர்.
மனைவியுடன் போனில் பேசியபடி தவறி விழுந்தவர் பலி: ஆஸ்திரேலியாவில் இந்தியருக்கு நேர்ந்த பரிதாபம்
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போனில் பேசிக் கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த தகவல்தொழில்நுட்பப் பொறியாளர் ஒருவர், மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தியாவைச் சேர்ந்த பங்கஜ் ஜா, ஆஸ்திரேலியாவின் வடக்கு சிட்னியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மெக்யரிபார்க் என்ற இடத்தில் வசித்து வந்த பங்கஜ் ஜா தற்போதுதான் திருமணம் முடிந்து மனைவியை இந்தியாவில் உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு ஆஸ்திரேலியா சென்றுள்ளார். நள்ளிரவு ஒரு மணி அளவில் மாடி பால்கனியில் இருந்து இந்தியாவில் உள்ள மனைவிக்கு போன் செய்துள்ளார். அப்போது திடீரென பால்கனியில் இருந்து தவறி கிழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு விரந்து வந்த மருத்துவக் குழுவினர், பங்கஜை பரிசோதித்து விட்டு, அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
ரஷ்ய மீன்பிடி கப்பல் மூழ்கி 54 பேர் பலி: 15 பேரை மாயம்
மாஸ்கோ: ரஷ்யாவில் 132 பேருடன் சென்ற மீன்பிடி கப்பல் திடீரென நீரில் மூழ்கியது. இதில் சென்ற 54க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்றும், பலரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. குளிர்சாதன வசதியுடன் கூடிய மீன்பிடிக் கப்பல் இது. மீன்பிடி கப்பலில் பணியாற்றியவர்களில் பெரும்பாலானவர்கள் லாட்வியா, உக்ரைன், மியான்மர், வனுவாடு நாடுகளைச் சேர்ந்தவர்கள். ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள காம்சட்கா தீபகற்பத்தின் ஓகோட்ஸ்க் கடல் பகுதியில் இந்த விபத்து நடந்தது. இதுவரை மீட்புப் குழுவினரால் 63 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 15 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணியில், அந்தப் பகுதியில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 25 படகுகள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு இந்த விபத்து நடந்துள்ளது. மீன்பிடி கப்பல் விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. பனிப் பாறைகளில் கப்பல் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரேஷ் ரெய்னா திருமணத்தில் கோலி, அனுஷ்கா சர்மா ஜோடி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவுக்கு வெள்ளிக்கிழமை நாளை திருமணம் நடக்கிறது அவரது திருமண நிகழ்ச்சியில், சுரேஷ் ரெய்னாவின் சகாவும், இந்திய அணியின் துணைத் தலைவருமான கோலி, தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் ஜோடியாகக் கலந்து கொள்கிறாராம். சுரேஷ் ரெய்னாவின் திருமணம் தில்லி நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. இந்தத் திருமண விழாவில் கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். இதனால், அங்கே பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் சரியாக விளையாடாமல் சொதப்பிய கோலி, தனது காதலியுடன் இத்திருமண விழாவில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இருவரையும் இணைத்து விமர்சனங்கள் அதிகம் எழுந்துள்ள நிலையில், அதை ஒரு பொருட்டாகவே கோலி எடுத்துக் கொள்ளவில்லை. இத்தகைய சூழ்நிலையில், அவர்களின் நண்பர்களுக்கு இடையேயும் இருவரின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

