நகரி: உச்ச நீதிமன்றம் கண்டித்ததை அடுத்து, ஆந்திராவில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி சிலைகளை 15 நாட்களுக்குள் அகற்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையும், முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் சிலைகள் ஆங்காங்கே உடைக்கப்பட்டு வருகின்றன. தெலுங்கு தேசம் கட்சியினரே சிலைகளை உடைப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில், சித்தூர் மாவட்டம் குண்டலபள்ளி கிராமத்தில் ராஜசேகர ரெட்டி சிலை உடைக்கப்பட்டது. இதை கண்டித்து, எம்.எல்.ஏ., சுனில் குமார் தலைமையில் போராட்டம் நடந்தது. நகரி எம்.எல்.ஏ., நடிகை ரோஜா சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பீகார் அரசியலில் திடீர் திருப்பம்: ஜிதன் ராம் மாஞ்சி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்
பாட்னா: பீகார் அரசியலில் திடீர் திருப்பமாக, பீகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப் பட்டுள்ளார். முன்னதாக, துணை முதலமைச்சர் பதவி தந்தால் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து விலக தயார் என்று ஜிதன் ராம் மாஞ்சி கூறினாராம். இந்நிலையில், உட்கட்சி மோதல் வலுத்துள்ளதை அடுத்து, ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில், பீகார் முதலமைச்சராக உள்ள ஜிதன் ராம் மாஞ்சி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிதிஷ் குமார் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பீகார் சட்டப்பேரவையில் தனக்கு 130 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளத் நிதிஷ்குமார், ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை இன்று சந்தித்து, தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை அளிக்கவுள்ளார். இதனை அக்கட்சியின் கே.சி.தியாகி தெரிவித்தார். ஆளுநரை சந்தித்து, புதிய அரசு அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக தியாகி தெரிவித்துள்ளார்.
144 படப்பிடிப்பு மதுரையில் இன்று துவக்கம்
சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட், அபினேஷ் இளங்கோவனின் அபி& அபி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கும் 144 படத்தின் படப்பிடிப்பு மதுரையில் இன்று துவங்கியது. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, அசோக் செல்வன், ஓவியா, ஆண்மை தவறேல் படத்தில் கதாநாயகியாக நடித்த ஷ்ருதி ராமகிருஷ்ணன், முனிஷ்காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் இயக்குனர் மணிகண்டன், இசை சியான் ரோல்டன்.
தேர்வெழுதும் மாணவர்களுக்காக ஒரு “மன் கி பாத்” : பிரதமர் மோடி
புது தில்லி: போட்டித் தேர்வுகள், பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவ மாணவியருக்காக தனது பிப்ரவரி மாத வானொலி உரையான மன் கி பாத் நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை இன்று அறிவித்தார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் செய்தியை வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து தங்கள் அனுபவங்களை மாணவர்களும் ஆசிரியர்களும் இளம் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த அக்டோபரில் துவங்கியது பிரதமரி மன் கி பாத் வானொலி உரை நிகழ்ச்சி. மாதந்தோறும் ஒலிபரப்பான இந்த நிகழ்ச்சியில் இதுவரை, தூய்மை இந்தியா திட்டம், போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு, கருப்புப் பணம் குறித்த பேச்சு ஆகியவை இடம்பெற்றன. பிப்ரவரி மாத நிகழ்ச்சி அவருடைய 5வது வானொலி உரை நிகழ்ச்சியாகும்.
Was thinking about this month’s radio prog & thought…why not share ‘Mann Ki Baat’ with students preparing for board & competitive exams. — Narendra Modi (@narendramodi) February 9, 2015
I urge students, parents & teachers to share exam experiences that would inspire youngsters & even motivate them in exam preparation. — Narendra Modi (@narendramodi) February 9, 2015
Like always, I will share some of your thoughts, inputs & anecdotes during the programme. Do share them here. https://t.co/hxxnlOQPzN — Narendra Modi (@narendramodi) February 9, 2015
இறுதிக் கட்டத்தில் ’வலியவன்’
SK ஸ்டியோஸ் தயாரிப்பில் நீண்ட பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் “வலியவன்”. ஜெய் நடித்த “எங்கேயும் எப்போதும்”, விக்ரம் பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” போன்ற வெற்றி படங்களை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்குகிறார். பெரும் பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் இயக்குகிறார் இயக்குனர் சரவணன். வலியவன் படத்தின் கதாநாயகனாக ஜெய் மற்றும் நாயகியாக ஆண்டிரியா நடிக்கின்றனர். இவர்களுடன் அழகம் பெருமாள், “பண்ணையாரும் பத்மினியும்” பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தின் தலைப்புகேற்றவாறு தன்னை காண்பிக்கவும், படத்தின் கதாபாத்திறத்தின் தன்னைமைக்கு தேவைப்பட்டதற்காகவும் நடிகர் ஜெய் சுமார் 6 மாதங்களுக்கும் மேல் உடற்பயிற்சி மேற்கொண்டார். ஹாங்காங்கில் இருந்து ஒரு சிறப்பு உடற்பயிற்சியாளரை வரவழைத்து அவரின் வழிகாட்டுதலில் மிகவும் சிரமப்பட்டு உணவு பழக்கவழக்கங்களை மாற்றி அதன் மூலம் தன் உடலை மெருகேற்றி 6 பேக் வரவைத்துள்ளார் ஜெய். படமாக்கமும், அதன் வெளிபாடும் மிகவும் சிறப்பாக வந்ததை கண்டு மகிழ்ச்சியுற்ற நடிகர் ஜெய், வலியவன் படத்தின் ஒலிச் சேர்க்கையை (Dubbing) தொடர்ந்து 24 மணிநேரத்தில் முடித்துள்ளார். சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் உள்ளது. படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது போல, விரைவில் வெள்ளித்திரைக்கு வரவிருக்கும் வலியவன் படமும் கண்டிப்பாக கவரும். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்: கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சரவணன் தயாரிப்பு – SK STUDIOS ஒளிப்பதிவு – B. தினேஷ் கிருஷ்ணன் இசை – டி.இமான் கலை – ராஜா மோகன் படத்தொகுப்பு – சுபாரக் பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா நடனம் – பிருந்தா, சுசித்ரா சண்டைபயிற்சி – ஸ்டண் சிவா தயாரிப்பு மேற்பார்வை – எம். காசிலிங்கம்
குஜராத் பள்ளிக் கல்வித்துறை இணைய தளத்தை முடக்கிய பாகிஸ்தான் நாசகாரர்கள்!
குஜராத் மாநில பள்ளி கல்வித்துறை இணையதளத்தை பாகிஸ்தான் ஊடுருவல் காரர்கள் திடீரென முடக்கினர். அதில் பிரதமர் மோடியை பற்றி அவதூறான வாசகங்களையும் அவர்கள் பதிவேற்றம் செய்தனர். குஜராத் மாநில கல்வித்துறையில் வித்யாசாயக் குஜராத் என்னும் வலைதளத்தை பாகிஸ்தான் இணையதள ஊடுருவல் காரர்கள் முடக்கினர். ஆசியர்களுக்கான விண்ணப்பங்களை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த இணையதளம் காலை திடீரென முடக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குஜராத் கல்வித்துறை அதிகாரிகள் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு இணையதளம் சரிசெய்யப்பட்டு அதில் நரேந்திர மோடியை பற்றி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த அவதூறான செய்திகள் நீக்கம் செய்யப்பட்டன.
நியூட்ரினோ திட்டத்தை தடுக்கவும்: கேரள முதல்வரிடம் வைகோ கோரிக்கை
நியூட்ரினோ திட்டத்தை தடுக்கவும், செண்பகவல்லி தடுப்பணையை பழுது பார்க்கவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் மதிமுக பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொச்சின் விமான நிலையத்தில் உள்ள பயணிகள் ஓய்வு அறையில் கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டியை வைகோ சந்தித்தார். அவரிடம் வைகோ தெரிவித்தது… தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் மத்திய அரசு அமைக்க இருக்கின்ற நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் இடுக்கி மாவட்டத்திற்கு, குறிப்பாக இடுக்கி அணைக்கு பேராபத்தை ஏற்படுத்தும். கேரளாவில் இடுக்கி அணை உள்ளிட்ட 21 அணைகளுக்கும், ஏலக்காய் தோட்டங்களில் அமைந்துள்ள பனிரெண்டாயிரம் தடுப்பணைகளுக்கும் தமிழ்நாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கும் நியூட்ரினோ திட்டத்தால் பெரும் ஆபத்து ஏற்படும். பசுமை நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலைகள் பாதிக்கப்படும். நியூட்ரினோ அமைக்கும் சுரங்கங்களில் அணுக்கழிவுகள் கொட்டுவதற்கும் திட்டமிட்டுள்ளனர். இத்தாலியில் அமைந்துள்ள நியூட்ரினோ திட்டத்திற்கு பேரெதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு 1500 கோடியை இத்திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் கொடுக்கவில்லை. எனவே கேரள அரசும், மக்களும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுகிறேன் என்று கூறி கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் வைகோ கொடுத்தார். அதற்கு கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி அவர்களை ஏற்கெனவே மார்க்சிÞட் தலைவர் அச்சுதானந்தன் அவர்கள் நியூட்ரினோ திட்டத்தை தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வருகிறார். இது குறித்து கேரள அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆதரவைக் கேட்பேன். மக்கள் நலனுக்கு தேவையானதை எங்கள் அரசு செய்யும் என உறுதியளித்தார். முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் அவர்களையும் இதுகுறித்து சந்திக்க இருக்கிறேன் என்று வைகோ கூறினார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சிவகிரி பகுதி விவசாயிகளுக்கு வாழ்வளித்து வந்த செண்பகவல்லி தடுப்பணை கேரள மாநில எல்லைக்குள் இருக்கிறது. 1733 ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது. 1955 இல் இதில் பழுது ஏற்பட்டபோது அன்றைய முதலமைச்சர் காமராசர் அவர்கள் முயற்சியால், கேரள அரசு செப்பனிட்டுத் தந்தது. அதற்கான செலவை 3,25,000 தொகையை தமிழக அரசு செலுத்தியது. 1965 இல் மீண்டும் பழுது ஏற்பட்டது. இதை செப்பனிடுவதற்காக இரண்டு அரசுகளுக்கும் இடையே கடிதப் போக்குவரத்து நீடித்து வந்தது. கடைசியாக 1986 இல் 10,29,752 ரூபாயை கேரள அரசு மதிப்பீடு செய்தது. அதில் பாதித்தொகை 5,15,000 ரூபாயை கேரள அரசுக்கு தமிழக அரசு செலுத்தியது. ஆனால் பழுதுபார்க்கப்படவில்லை. 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் உங்களை சந்தித்து 5 கோரிக்கைகளை முன்வைத்தேன். மற்ற நான்கு கோரிக்கைகளை ஏற்க முடியாவிடிலும் செண்பகவல்லி தடுப்பணை பழுதுபார்க்கப்படும் என்று உறுதியளித்தீர்கள். அதற்கு நன்றியும் தெரிவித்தேன். ஆனால் இன்னும் வேலை நடக்காமல் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு செலுத்திய பணத்தை கேரள அரசு திருப்பி அனுப்பிவிட்டது என்று கூறியபோது, கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி அவர்கள், தேர்தல் வந்தது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, அதனால் செய்ய முடியாமல் போனது என்றார். செண்பகவல்லி தடுப்பணை பழுதுபார்க்கும் வேலையை அனுதாபத்துடன் கவனிப்பதாக முதலமைச்சர் உம்மன்சாண்டி வைகோவிடம் உறுதி கூறினார். இந்த சந்திப்பின்போது கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா உடன் இருந்தார்.
பெண் குழந்தைக்கு அப்பாவான தோனி
இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி- சாக்சி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நேற்று மாலை, தோனியின் மனைவி சாக்சி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தோனி கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தனது நீண்ட நாள் தோழியான சாக்சியை மணந்தார். உலகில் எங்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் சாக்சியும் தோனியுடன் செல்வார். ஆனால், அண்மையில் நடந்த ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் சாக்சி உடன் செல்லவில்லை. அப்போதுதான், அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று அவருக்கு குழந்தை பிறந்தது குழந்தையின் எடை 3.7 கிலோ இருப்பதாகவும், தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை தகவல் வெளியிட்டது. பிப்ரவரி 14ம் தேதி உலகக் கோப்பை தொடங்க இருப்பதை முன்னிட்டு, ஆஸ்திரேலியாவில் தற்போது தோனி தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தில்லி: வாக்குப் பதிவு 67% என சாதனை
தில்லி சட்டமன்றத் தேர்தலில் இன்று மாலை வாக்குப் பதிவு நிறைவடைந்த நேரத்தில், சுமார் 67% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது. இது சாதனை அளவு என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மலை 3 மணி நிலவரப்படி, வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பெறக்கூடும் என்று தெரிகிறது. அக்கட்சி, 35-43 இடங்களையும், பாஜக 23-39 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும் பெறக்கூடும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

