அதிரசம்
பச்சரிசி – ஒரு டம்ளர்
உருண்டை வெல்லம் -. 3/4 டம்ளர்.
நெய் – சிறிது
தண்ணீர் – 1/4 டம்ளர்
ஏலக்காய் – 5
எண்ணெய் – பொரிக்க
செய்முறை;
பச்சரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊற விடவும். பின் கழுவி தண்ணீரை
வடிகட்டி வைக்கவும். நன்கு தண்ணீர் வடிந்து உலர்ந்ததும்,மிக்சியில் பொடித்து சலித்து
எடுக்கவும்.இரண்டு மூன்று முறை அரைத்து சலித்து மாவாக்கி வைக்கவும்.
வாணலியில் தண்ணீர் விட்டு வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.பின் இறக்கி வடிகட்டி மறுபடியும் வெல்லப்பாகை கொதிக்க விடவும்! பாகு நன்கு கொதித்து நுரைத்து வரும். சற்று நேரம் கிண்டவும். உருண்டைப் பாகு பதம் வந்ததும் (கரண்டியில் எடுத்து கொஞ்சம் தண்ணீரில் போட்டால் கரையாமல் உருளும்)
இரட்டைக் கம்பிப் பதம் வந்தாலும் சரி! கரண்டியில் எடுத்து ஊற்றும் பொழுது கரண்டியிலிருந்து இரண்டு கம்பிகள் நேராய் இழுத்துக் கொண்டு விழவேண்டும்.
இப்போது வாணலியை இறக்கி, பாகில் அரிசி மாவைத் தூவி, ஒரு ஸ்பூன் நெய் விட்டு
அடுப்பிலேற்றி நன்கு கிளறவும்.நெய் சிறிது விட்டு கிளறி இருப்புச் சட்டியில் ஒட்டாமல்
சுருண்டு வருகையில் இறக்கி ஆற விடவும்.ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
மூன்று நாட்கள் இருக்கட்டும்.மாவு புளித்தால் மிகவும் மெதுவாக வரும்.
நான்காம் நாள் ஒரு வாழை இலை அல்லது கண்ணாடி பேப்பரில் சிறிது நெய் தடவி, மாவை சிறு உருண்டைகளாக எடுத்து வட்டமாகத் தட்டி நடுவில் ஓட்டை போட்டு ( வடை மாதிரி) தட்டவும்.
எண்ணையைக் காய வைத்துப் போட்டு எடுக்கவும். எண்ணெய் புகையக் கூடாது.
அதிரசத்தின் மேல் எண்ணெயை கண்ணகப்பையால் ஊற்ற வேண்டும்.பின்
மேலெழும்புகையில் திருப்பிப் போட்டு, நன்கு வெந்ததும் எடுத்து, ஒரு
சட்டகப்பையில் வைத்து, கண்ணகப்பையின் பின்புறத்தால் அழுத்தி எண்ணெய் வடிய
விடவும்.
பின் ஒரு கண் சட்டியில் எடுத்து வைக்கவும். அதிரசம் சாஃப்ட்டாகவும்
சுவையாகவும் வரும்.உடனே செய்வதாயிருந்தாலும் செய்யலாம். மாவு
சேர்த்து வைத்து உடனே செய்யலாம். ஒரு நாள் கழித்து, இரண்டு நாள் என அவரவர்
நேரத்திற்கேற்ப செய்யலாம்!
நல்ல மிருதுவாய் தேவை எனில் மூன்று நாட்களுக்கு முந்தியே மாவு சேர்த்து
வைத்துப் பின் செய்யலாம்.