நாகை மாவட்டம் வேதாரண்யம் உடைக்கப் பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக மாவட்ட நிர்வாகத்தால் புதிய சிலை நிறுவப் பட்டதை அடுத்து, அங்கே அமைதி திரும்பி வருகிறது.
வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அங்குள்ள அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட நிலையில், அந்த சிலைக்கு பதிலாக வேறொரு சிலை நிறுவப்பட்டது. இதனால் பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.
முன்னதாக, 59 பேரை நாகப்பட்டினம் காவல் துறையினர் பிடித்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஒருவர் மீது கார் மோதியதால் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.
அந்தப் பகுதியில் இரு சமூகத்தினருக்கு இடையே அடிக்கடி நீண்ட காலமாக பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஒரு சமூகத்தை சேர்ந்த ராமகிருஷ்ணாபுரம் இளைஞர் ராமகிருஷ்ணன் என்பவர் மீது கார் மோதி அவர் கீழே விழுந்துள்ளார். இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு, தாக்கியுள்ளனர். இதில், காவல் நிலையம் முன்பே,வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் பொலிரோ கார் ஒன்று தீவைத்துக் கொளுத்த பட்டது இதை அடுத்து பிரச்னை பெரிதானது.
இதனால் அங்கு இரு சமூகத்தினருக்கு இடையேயான மோதலாக இது மாறியது! இதை அடுத்து, பதற்ற நிலை ஏற்பட்டு, வேதாரண்யத்தில் அனைத்து கடைகளும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன.
வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணிக்கு போலீசார் பெரும்பாலானவர்களும் சென்று விட்டதால், வேதாரண்யம் காவல் நிலையத்தில் குறைந்த அளவிலான போலீசாரே இருந்துள்ளனர். இதனால் மோதலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் பின்னர், அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக, போலீஸார் அதிக அளவில் குவிக்கப் பட்டனர். இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த 2 பேர் காயங்களுடன் வேதாரண்ம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். நாகை எஸ்.பி ராஜசேகரன் மோதல் ஏற்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழாமல் தடுக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் வேதாரண்யத்தில் குவிக்கப்பட்டனர்.
வதந்திகள் பரவுவதைத் தடுக்க மொபைல் இன்டர்நெட் சேவையின் வேகம் குறைக்கப்பட்டது. பேருந்துகள் நிறுத்தப் பட்டு, பெட்ரோல் பங்குகளும் மூடப் பட்டிருந்தன. இந்நிலையில், இன்று இயல்பு நிலை திரும்பி வருவதால், கடைகள் ஓரளவு திறக்கப் பட்டு, வாகனங்களும் ஓடத் தொடங்கின.