எல்லாம் ஏழுமலையான் மகிமைதான் என்று சொல்லும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திருமலை திருப்பதி தேவஸ்தான குழு மாற்றி அமைக்கப் பட்டு வருகிறது. முன்னர் ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவர்களுக்கு எல்லாம் அறங்காவலர் குழுவில் இடம் கிடைத்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பலவித முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் கூறப் பட்டன.
இந்நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளனர். இதை அடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மாற்றி அமைக்கப் பட்டது. ஜெகனுக்கு சித்தப்பா முறை உறவினரான சுப்பா ரெட்டி டிடிடி தலைவராக நியமனம் செய்யப் பட்டார். கிறிஸ்துவ பின்னணி கொண்ட அவரை தலைவர் ஆக்குவதற்கு பாஜக., கடும் எதிர்ப்பு கிளப்பியது.
இந்நிலையில், தமிழகம் சார்பில் தேவஸ்தான உறுப்பினராக சேகர் ரெட்டியை மீண்டும் நியமனம் செய்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதால் சேகர் ரெட்டி நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.