முகஅழகிரி நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல நண்பருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 2021ல் அதிசயம் நிகழ்த்துபவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க என் வாழ்த்துக்கள் நண்பரே. ????????????????
எஸ்.வி.சேகரின் இந்தப் பதிவு இப்போது ஒரு பரபரப்பான பேசுபொருளாயிருக்கிறது.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் பிறந்த நாள் என்றால் மதுரை களை கட்டும். மதுரை முழுதும் போஸ்டர்கள் விதவிதமான கட் அவுட்கள் என மதுரையே அலங்கார நகராக ஜொலிக்கும்.
இன்று, மு.க. அழகிரியின் பிறந்த நாள். ஆனால், மதுரை அந்தக் கோலாகலங்களை எல்லாம் இழந்து களை இழந்து ஒளி இழந்து எல்லா நாளையும் போலே இன்றும் வெகுசாதாரணமாகக் கடந்து சென்றது.
தனது பிறந்த நாளில் தொண்டர்களை வீட்டில் சந்தித்து வந்த அழகிரி, கடந்த முறை கருணாநிதியின் மறைவால் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்தார். இந்த முறையும் ஏனோ, தனது பிறந்தநாளைக் கொண்டாடவில்லை! தனது `பிறந்தநாளன்று யாரும் வீட்டுக்கு வர வேண்டாம்’ என்று அழகிரி கூறிவிட்டதால் ஆதரவாளர்கள் யாரும் அவரது வீட்டுக்கும் இன்று செல்லவில்லை.
இந் நிலையில், அழகிரியின் தீவிர ஆதரவாளரும் வழக்கறிஞர் சங்கத் தலைவருமான மோகன்குமார் இல்ல திருமண விழாவுக்கு இன்று காலை மு.க.அழகிரியும் அவர் மனைவி காந்தி அழகிரியும் வந்திருந்தனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அழகிரி ஆதரவாளர்கள், திருமண மண்டபத்திலேயே அழகிரி பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் சிறிய அளவில் நடத்தி முடித்தனர்.
திருமண அரங்கிலேயே சிறிய அளவிலான கேக் ஏற்பாடு செய்து, அதை வெட்டச் சொன்னார்கள். முதலில் வேண்டாம் என்று மறுத்த அழகிரி பின்பு ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு உட்பட்டு, கேக் வெட்டினார்.
மண மக்களை வாழ்த்திவிட்டு பின்னர் பேசிய மு.க.அழகிரி, “மறப்பது என்பது இப்போது சாதாரண விஷயமாகிவிட்டது. அதற்கு நானே உதாரணம். அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ, எம்.பி-க்களே எனக்கு வணக்கம் சொல்லிவிட்டுப் பேசுகின்றனர். ஆனால், என்னுடன் பழகியவர்கள் எல்லாம் இப்போது என்னிடம் பேசுவதைத் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலைமை எப்போது மாறப்போகிறது எனத் தெரியவில்லை. என்னைப் பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும். நினைத்ததைச் சாதிப்பேன், நினைத்ததை முடிப்பேன். மற்றவர்கள் மட்டும்தான் கலைஞரின் பிள்ளை அல்ல; நானும் கலைஞரின் பிள்ளைதான். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என எச்சரிக்கும் தொனியில் பேசி முடித்தார்.
இதனிடையே, பாஜக., பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர், தனது ட்விட்டர் பதிவில் அழகிரிக்கு வாழ்த்து சொல்லிய கையுடன், 2021இல் நடக்கப்போகும் அதிசயத்தில் அழகிரியின் பங்கும் இருக்கும் என்று சூசகமாகச் சொல்லியிருக்கிறார்.
மு.க.அழகிரி, ரஜினியின் தீவிர ரசிகர், நண்பர் என்பதும், அரசியலில் தனக்கான அடுத்த இன்னிங்ஸுக்குக் காத்திருக்கும் அழகிரி 2021இல் ரஜினியுடன் கைகோக்க வாய்ப்பு இருக்கிறது என்பதும் இப்போது பேசப்படும் பொருளாகிவிட்டது.