மதுரை :தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆன்..லைன் மூலம் பாடம் நடத்துவதாக கூறி, அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மெட்ரிகுலேஷன் கல்வி இயக்குநர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆன் லைன் மூலம் பாடம் நடத்துவதாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, புகார்கள் வந்த நிலையில், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை மாவட்ட மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் கண்காணிக்கவும், புகார் வரும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலும் சில பள்ளிகள் மாணவர்களிடையே அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். சில தனியார் பள்ளிகளில் கட்டணம் தவணை முறையில் செலுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக மதுரை மேலமடை சேர்ந்த சாந்தி கூறியது. என் மகளும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆறு வகுப்பு படித்து வருகிறார், இதுவரை பள்ளி நிர்வாகம் கட்டணம் பற்றி எந்த தகவலும் தரவில்லை என்றார்.
இருந்த போதிலும், மாவட்ட நிர்வாகமானது, கொரோனா காலத்தில் மாணவர்களிடையே, அதிக கட்டணம் கேட்டு நிர்ப்பந்திக்கும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அரசானது கல்விக் கட்டணத்தை நிர்ணயித்தும், மூன்று தவணையாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த முத்துராமன்.
தனியார் கல்வி நிறுவனங்கள் இதுவரை மாணவர்களிடையே கட்டணம் வசூலிக்க தொடங்கவில்லை. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வரும் காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளதாகவும், இதை அரசு தடுக்க ஆயூத்தமாக வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
- ரவிச்சந்திரன், மதுரை