
ஜூலை 2 இன்று காலை.. பால் வாங்க பக்கத்து பொட்டிக் கடை மாதிரியான சிறிய ரக கடைக்கு போனேன்.. அப்படியே பேஸ்ட் இருக்கா.. என்று கேட்டேன்..
இருக்கு என்று, கையில் கொடுத்தவர்… சார் இனிமே இதெல்லாம் வெலை கூடிடும். இது பழைய ஸ்டாக். அதனால் அதே விலைக்கு தாரேன் என்றார்.
என்னாது…? என்று ஆச்சரியமாகக் கேட்டபோது…
நீட்டி முழக்கிக் கொண்டே போனார். எல்லாம் விலை கூடிடும். ரொம்ப ஏறிப் போச்சு… என்று ரொம்ப சீரியஸாக வைத்துக் கொண்டார் முகத்தை!
ம்ம்ம்.. சரிதான்! இதெல்லாம் உங்களுக்கு சொன்னது யாரு? நீங்க எதுனா பேப்பர்ல படிச்சீங்களா என்று கேட்டேன்.
இல்லை சன் டிவி நியூஸ்ல கேட்டேன். எல்லா சனமும் ரொம்ப புலம்புறாங்க… என்றார்.
சர்தான்…! நீங்க என்ன… ஒரு இருபது லட்சத்துக்கு வியாபாரம் செய்வீங்களா – கேட்டேன்.
அய்ய… இன்னா சார் நீங்க.. என்னயப் போயி இப்டி கேக்கிறீங்க? என்றார்
அப்ப என்ன..? கவலையை விடுங்க! இதெல்லாம் பெரிய வியாபாரிங்களுக்குதான் இடிக்கும்… என்றேன்.
சரி சார்.. ஜிஎஸ்டி நல்லதா? கெட்டதா?
உங்கள மாதிரி சின்ன வியாபாரிகளுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. திருட்டுத்தனம் செய்து கள்ள மார்க்கெட்ல செல்போனும் எலக்ட்ரானிக்ஸும் விக்கிறவன், வரி கட்டாம செருப்பு வியாபாரத்துலேர்ந்து துணிமணி வியாபாரம் வரைக்கும் மொத்தமா எடுத்து அத குடும்பத்த சேர்ந்த பத்து பயலுகளுக்கு பிரிச்சிக் கொடுத்து சிறு குறு வியாபாரின்னு கணக்கு காட்டி மொத்தமா வியாபாரம் செய்யிறவனுக்கெல்லாம் இது கெட்டது… என்றேன்.
கடைக்கு வர்ற பயலுஹ எல்லாம் என்னல்லாமோ சொல்லி குழப்பிட்டு போயிடுறானுங்க .. உங்கள மாதிரி சனங்ககிட்ட கேட்டாதான் தெளிவா தெரியுது… என்றார்.
பின்குறிப்பு: ஆவின் பால் முதல் ஆரோக்யா பால் வரை, ரோட்டின் பக்கம் போய் வாங்கினா எம்.ஆர்.பி.யில் கிடைக்கும். இவர் சுமார் ஒரு கி.மீ. தொலைவு சென்று மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வதால், எல்லாவற்றிலும் ரூ.1 கூடுதலாக வைத்து வாங்குவார்.
பெட்ரோலுக்கு 10 பைசா கூடினாலும், ஆட்டோக்காரர் எப்படி விலைவாசி ஏறிப் போச்சுங்க பத்து ரூவா போட்டுக் கொடுங்க என்று கேட்பாரோ அந்த மனோநிலையில்தான் இங்கே பெரும்பாலான மக்களும்!
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரேட்! முக்காடு போட்டு தடாலடியா ஒரு பாய் அம்மா வந்தா பத்து ரூபாக்கு விக்கிற அதே காய்கறிக்காரம்மா, நெத்தில பொட்டு வெச்சி கொஞ்சம் பம்மி பம்மி வர்ற பிராமண அம்மாவிடம் பதினைந்து ரூபாய்னு சொல்லி கறந்திடுறாங்க…!
ஆக மொத்தத்தில், ஜிஎஸ்டி எப்படி நுகர்வோரிடம் நேரடியாக டீல் செய்யும் கடைநிலை வியாபாரியிடம் வேலையைக் காட்டுகிறது என்பதில்தான், இதன் முழு பிரசாரமும் இருக்கிறது!


