தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள வண்ணாரு கூடத்தை சேர்ந்தவர் அனில்குமார். கிறிஸ்தவரான அனில்குமாரும் கம்மம் மாவட்டத்தில் உள்ள கொல்லகூடத்தில் வசிக்கும் இஸ்லாமிய பெண் ஷேக் சோனியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
ஆனால் அவர்களுடைய காதலுக்கு பெண்ணின் குடும்பத்தார் தடை போட்டனர். காதலன் குடும்பத்தார் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.
பெண் தரப்பு ஒப்பு கொள்ளாததால் திருமணம் நடைபெறாமலே இருந்தது. இந்த நிலையில் கொல்லகூடத்தில் வசிக்கும் இந்துக்கள் ஒன்று சேர்ந்து ஷேக் சோனி பெற்றோரிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் பெற்றனர்.
இந்நிலையில் இந்துக்களின் முயற்சி காரணமாகவே கானல் நீராக இருந்த எங்கள் திருமணம் கைகூடியது.
எனவே நாங்கள் இந்து முறைப்படி மட்டுமே திருமணம் செய்துகொள்வோம் என்று காதலர்கள் கூறிவிட்டனர்.
அதன்படி நேற்று அவர்களுடைய திருமணம் இந்து முறைப்படி மேளதாளங்கள் முழங்க, மந்திரங்கள் ஒலிக்க, அக்னி வளர்த்து, மாலை மாற்றி, தாலிகட்டி சிறப்பாக நடைபெற்றது. திருமணத்திற்கு மூன்று மதங்களை சேர்ந்தவர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.