நீலகிரியில் தென்பட்ட வினோத விலங்கு ஒன்று தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலங்கின் பின்னணி என்ன என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இருக்கும் நீலகிரி மாவட்டம் பல்வேறு விலங்குகள் மற்றும் அரிதான பறவைகளுக்கு தாயகமாக விளங்குகிறது. நீலகிரி மலை மட்டுமின்றி மேற்கு தொடர்ச்சி மலை முழுக்க வினோதமான, அபூர்வமான பல விலங்குகள் இருக்கிறது.
இப்படி இருக்க நீலகிரியில் காணப்பட்ட விலங்கு ஒன்றின் வீடியோ இணையம் முழுக்க வைரலானது. கருப்பு நிறத்தில் இந்த விலங்கு இணையம் முழுக்க நிறைய விவாதங்களை ஏற்படுத்தியது.
மரத்தின் அருகே அமர்ந்து இருந்த இந்த விலங்கை பார்த்து, இது கருஞ்சிறுத்தை என்று பலரும் கூறினார்கள்.
அமைதியாக அமர்ந்து இருந்த இதை பார்த்து, கண்டிப்பாக கருஞ்சிறுத்தையாக இருக்கும் என்று கூறினார்கள்.ஏனென்றால் கர்நாடகாவில் சில நாட்கள் முன்புதான் கருஞ்சிறுத்தை கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இது கருஞ்சிறுத்தை கிடையாது. வேறு ஏதோ விநோத விலங்கு. இது மிகவும் சிறியதாக இருக்கிறது. ஆனால் பூனையும் கிடையாது. சின்ன கங்காரு போல இருக்கிறது. இது என்ன வகையான விலங்கு என்றே தெரியவில்லை என்று பலரும் விவாதம் செய்தனர். தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச சில ஊடங்கங்களும் இணையத்தில் வெளியான இந்த வீடியோவை வைத்து செய்தி வெளியிட்டது.
அதேபோல் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சிலரும் இந்த வினோத விலங்கை பார்த்ததாக கூறியுள்ளனர். இதற்கு முன் நாங்கள் இதை பார்த்தது இல்லை. திடீர் என்று தோட்டத்திற்குள் வலம் வந்தது. நாங்கள் இதை எதுவும் செய்யவில்லை. அதுவும் அமைதியாக சென்றுவிட்டது என்று அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்த விலங்கு கருஞ்சிறுத்தையோ அல்லது எந்த வகையான புலி வகையோ கிடையாது. அந்த விலங்கு கரும்வெருகு என்று அழைக்கப்படும் நீலகிரி மார்ட்டின் (Nilgiri marten) விலங்கு ஆகும். மார்டின் எனப்படும் அழிந்து வரும் வகையை சேர்ந்த விலங்கு ஆகும் இது. இந்தியாவில் வேறு எங்கும் இந்த விலங்கு காணப்படவில்லை.
இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே இந்த விலங்கு இருக்கிறது. அதிலும் இந்த ஒரு குறிப்பிட்ட வகை உடல் அமைப்பை கொண்ட விலங்கு நீலகிரியில் மட்டுமே இருக்கிறது என்கிறார்கள். நீலகிரி மக்கள் இதை சிலர் ஏற்கனவே பார்த்து உள்ளனர். இது அழிந்து வருகிறது. எப்போதுதான் அரிதாக இது வெளியே வரும். மிகவும் சாந்தமான விலங்கு இது என்கிறார்கள்.