
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடங்கப் பட்டது.
மதுரை மாவட்டத்திலுள்ள 1398 நியாயவிலைக் கடைகளில் 8,88,385 தகுதியுள்ள அரிசி அட்டைதாரர்களுக்கு இன்று காலை 9 மணி முதல் ரூபாய் 2,500 உடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன்களின் அடிப்படையில் சமூக இடைவெளியை பின்பற்றி காலை, மாலை என இருவேளைகளில் பொங்கல்பரிசு தொகுப்பானது வழங்கப்பட்டுவருகிறது.
டோக்கன் மூலமாக பொங்கல் பரிசை பெற இயலாதவர்கள் வரும் 13ஆம் தேதி அந்தந்த ரேசன்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்காக குடும்ப அட்டைதாரர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
முன்னதாக, தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு 2.10 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா ரூ.2,500 பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, துணிப்பை அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது. இதற்காக, 5,605 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 21ஆம் தேதி தொடங்கி வைத்தார். அவை ரேஷன் கடைகள் வாயிலாக ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கார்டுதாரர்கள் எந்த தேதி, நேரம் வர வேண்டும் என்ற டோக்கனை, அவரவர்களின் வீடுகளில் டிச., 26 முதல் 30ஆம் தேதி வரை, ரேஷன் ஊழியர்கள் வழங்கினர். அதனடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம், அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று தொடங்கியது. வரும் 13ஆம் தேதி வரை, ஒவ்வொரு ரேஷன் கடையிலும், காலையில் 100; மதியம் 100 என மொத்தம் 200 கார்டுதாரர்களுக்கு வழங்கப்படஉள்ளது.