மின் பயன்பாடு குறித்து தவறாக கணக்கெடுக்கும் பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின் கணக்கீட்டுப் பணி செய்து, கணினியில்பதிவு செய்யும்போது சிலர் தவறானப் பதிவுகளைச் செய்து விடுகின்றனர். இதன் காரணமாக மின் கணக்கீட்டை ரத்து செய்து தருமாறு மாதம்தோறும் சில முன்மொழிவுகள் பெறப்படுகிறது. அதே போல், மின் கணக்கீட்டைத் திருத்தம் செய்யக் கோரியும் சில முன்மொழிவுகள் பெறப்படுவதால், பகிர்மானப் பிரிவு தலைமைப் பொறியாளர்களுக்குத் தொடர்ந்து சிக்கல் ஏற்படுகிறது.
ஆகவே, இனி வரும் காலங்களில் கணக்கீட்டுப் பணியாளர்கள் சரியான முறையில் கணக்கெடுப்பு செய்து, சரியான கணக்கீட்டை கணினியில் பதிவு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகப் பொறுப்பாளர்கள் அறிவுறுத்த வேண்டும்.
தவறும்பட்சத்தில், தவறாக மின் கணக்கீடு செய்த பணியாளர் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்ட கடிதத்தை மின் கணக்கீட்டை ரத்து செய்யக் கோரும் முன்மொழிவோடு சேர்த்து அனுப்பினால் மட்டுமே ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்வாரியம் கூறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.