மன்னிப்புக் கேட்ட மதபோதகர் மோகன் சி லாசரஸ்!

Published:

Mohan-c-lasaras-1
Mohan-c-lasaras-1

இந்து மதக் கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் மத போதகர் மோகன் சி.லாசரஸ் மன்னிப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அவர் மீதான வழக்குகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தங்கள் மதம்தான் பெரியது என்று கூறி பிற மதங்கள் மீது விஷம் கக்குவது, வெறுப்பை உமிழ்வது கூடாது என்று அவருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

சென்னையில் கடந்த 2016-ம்ஆண்டு நடந்த மதபோதனைக் கூட்டத்தில் பேசிய மதபோதகர் மோகன் சி.லாசரஸ், இந்து மதக் கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார்.

mohan
mohan

சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் பரவியதை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொடுக்கப்பட்ட புகார்களின் பேரில், மோகன் சி.லாசரஸ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், ‘மோகன் சி.லாசரஸ் தனது பேச்சுக்கு வருத்தமடைந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாது என உத்தரவாதம் அளித்துள்ளார்’ என்று பதில்மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ள தயாராக இருப்பதாக புகார்தாரர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இதையடுத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தனது உத்தரவில் கூறியதாவது:

மதச்சார்பின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்கிறது. பல்வேறு மதங்கள், பன்முக கலாச்சாரம் ஆகியவைதான் நமது நாட்டின் தனித்துவமாக உள்ளது. இந்த பன்முகத் தன்மை கொண்ட மதம் சார்ந்த கலாச்சார உரிமையை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை.

எல்லா மதத்திலும் மதபோதகர்கள் உள்ளனர். அவர்களை ஏராளமானோர் பின்பற்றுகின்றனர். அப்படியிருக்க, மதபோதகர்கள் தங்கள் கருத்துகளை மிகுந்த கவனத்துடன் முன்வைக்க வேண்டும். குறிப்பாக, பிற மதங்கள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் பேசக்கூடாது.

எந்த ஒரு மதத்தையும், கடவுளையும் தவறாக சித்தரித்து கிறிஸ்தவ மதத்தை வளர்க்க வேண்டியது இல்லை என்று இயேசு நாதரே அறிவுறுத்தியுள்ளார்.

போதகர்கள் செய்யும் மதபோதனைகள் மற்ற மதத்தினரை புண்படுத்துகிற, இழிவுபடுத்துகிற வகையில் இருக்கக் கூடாது. மனிதனை நல்வழிப்படுத்தும் மதம், நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டது. தங்கள் மதம்தான் பெரியது என்று கூறி மாற்று மதத்தின் மீது விஷம் கக்குவது, வெறுப்பை உமிழ்வது என்பது அந்த மதத்தின் நோக்கமோ அல்லது மத நம்பிக்கையோ அல்ல என்பதை மதபோதகர்கள் உணர வேண்டும். பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். இல்லாவிட்டால் நமது நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைக்கு அது ஆபத்தாகிவிடும்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

இவ்வாறு நீதிபதி தெரிவித்து, மோகன் சி.லாசரஸ் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related articles

Recent articles

spot_img