மதுரையில் இலவச பஸ்களில் பெண்கள் ‘டிக்கெட்’ எடுக்காமல் பயணித்தால்
நடத்துனர்களுக்கு ‘மெமோ’ கொடுக்கப்படுகிறது.
இது போக்குவரத்து ஊழியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நகரில் 20 சதவீதம், மாவட்ட பகுதிகளில் 40 சதவீதம் மகளிருக்கான இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பெண்கள் காத்திருந்து பயணிப்பதால் கூட்டம் அதிகமாகவே உள்ளது.
பயணிகளுக்கு கட்டணம், மாற்றுத்திறனாளி, இலவசம் என மூவகை டிக்கெட்டுகள் கொடுக்கப்படுகின்றன.
அவை ஒரே கலரில் உள்ளதால் கூட்ட நெரிசலில் ‘டிக்கெட்’ கொடுப்பது நடத்துனர்களுக்கு
சவாலாக உள்ளது.
அவர்கள் கூறியதாவது: அரசு பஸ்களில் ‘மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை’ என சிவப்பு ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டுள்ளது.
இதே அளவு இதே கலரில் ‘அரசு பஸ்சில் நோட்டீஸ் ஒட்டத் தடை. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற ‘ஸ்டிக்கரும்’ உள்ளது. இதை கவனிக்காத பெண்கள் இலவச பஸ் என நினைத்து கட்டண பஸ்களில் ஏறி ‘டிக்கெட்’ எடுக்காமல் வாக்குவாதம் செய்கின்றனர். ‘செக்கிங்’ வந்தால் நடத்துனருக்கு ‘மெமோ’ கொடுக்கின்றனர்.
இதுவரை 40 நடத்துனர்கள் ‘மெமோ’ பெற்றுள்ளோம். ஏற்கனவே ‘பேட்டா’ குறைந்துள்ள நிலையில் இதுபோன்ற சம்பவம் தினமும் எங்களுக்கு சோதனையாக உள்ளது. கலர் குழப்பத்தை தவிர்க்க இலவசத்திற்கு வெள்ளை கலர் ‘டிக்கெட்’ வழங்க வேண்டும் என்றனர்.