
தில்லி சட்டசபையில் இருந்து செங்கோட்டையை இணைக்கும் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தில்லி சட்டசபை வளாகத்தில் செங்கோட்டையை இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு தில்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் கூறியதாவது: சட்டசபையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுரங்கைப்பாதை செங்கோட்டையை இணைக்கிறது.
சுதந்திர போராட்ட வீரர்களை அழைத்து செல்வதற்காக ஆங்கிலேயர்கள் இதனை பயன்படுத்தியுள்ளனர். நான் 1993-ம் ஆண்டு எம்எல்ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சட்டசபையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் சுரங்கப்பாதை உள்ளதாக சிலர் தெரிவித்தனர்
.இதனால் அதன் வரலாற்றை கண்டுபிடிக்க முயற்சி செய்தும், தெளிவான முடிவுகள் கிடைக்கவில்லை. சுரங்கப்பாதையில் இருக்கும் ஒரு முனையை கண்டுபிடித்துள்ளோம்.
ஆனால், அதற்கு மேல் தோண்டவில்லை. ஏனெனில், மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் சுரங்கப்பாதையின் பாதை அழிக்கப்பட்டுள்ளது. கடந்த 1912-ம் ஆண்டு, கோல்கட்டாவிலிருந்து தில்லிக்கு தலைநகர் மாற்றப்பட்டபோது இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் சட்டசபை வளாகம்தான் அப்போது மத்திய சட்டசபையாக வளாகமாக பயன்படுத்தப்பட்டது.
பின்னர், இது நீதிமன்றமாக பயன்படுத்தப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வர இப்பாதை பயன்படுத்தப்பட்டது.
சட்டசபை வளாகத்தில் தூக்கு மேடை இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதனை இப்போது வரை திறக்கவில்லை.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அங்கு ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளோம். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அதை நினைவு சின்னமாக மாற்ற திட்டமிட்டுவருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.