
நவம்பர் 8ஆம் தேதி முதல் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது .
நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டதை தொடர்ந்து அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டது .
அனைவரும் விரல் வைப்பதால் வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக கருதி பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஆனால் தற்போது கொரோனா தொற்று நாடு முழுவதும் கட்டுக்குள் வந்துள்ளதால் வரும் 8ஆம் தேதி முதல் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி, பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யுமுன் அனைத்து ஊழியர்களும் கையை சானிடைசர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
அதற்காக பயோமெட்ரிக் கருவிக்கு அருகே சானிடைசர் பாட்டில்கள் இருக்க வேண்டும். வருகை பதிவு செய்யும் ஊழியர்கள் 6 அடி இடைவெளிவிட்டு நிற்க வேண்டும்.
வருகை பதிவு செய்யும் நேரம் உள்பட அலுவலகத்தில் எந்நேரமும் ஊழியர்கள் முககவசம் அணிய வேண்டும்.
கூட்டத்தை தவிர்க்க தேவைப்பட்டால் கூடுதல் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பது போன்ற வழிகாட்டுதல்களை அரசு வழங்கியுள்ளது.
மேலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.