
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 4ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான சூரசம்ஹாரம், கந்த சஷ்டி விழாவை காண பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும்.

இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நாளை வியாழக்கிழமை தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது.

காலை 7.35 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும். மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.
கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் தொடங்கி 5ஆம் திருநாள் வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். வெள்ளிக்கிழமையன்று 2ஆம் திருநாள் முதல் 5ஆம் திருநாள் வரையிலும் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
கோவில் வளாகத்தில் சூரசம்ஹாரம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், வரும் 9ஆம்தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு எளிமையாக பக்தர்களின்றி நடைபெறுகிறது.

அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.
மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். பின்னர் கோவில் வளாகத்தில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்வார்.

7ஆம் திருநாளான நவம்பர் 10ஆம்தேதி புதன்கிழமையன்று இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. சூரனை வென்று சம்ஹாரம் செய்த சுப்ரமணியருக்கு தேவேந்திரன் தனது மகள் தெய்வானையை மணம் முடித்து கொடுக்கிறார். இந்த நிகழ்வு ஆண்டு தோறும் சூரசம்ஹாரம் முடிந்த உடன் நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 1ஆம் திருநாள் முதல் 5ஆம் திருநாள் வரையிலும் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் 5 ஆயிரம் பேர் ஆன்லைன் முன்பதிவு மூலமாகவும், 5 ஆயிரம் பேர் நேரடியாகவும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

6 மற்றும் 7ஆம் திருநாட்களில் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், யூ-டியூப் இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கும் வகையில், கோவில்வளாகத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.