ஷாக்கடித்து நின்ற சிறுமியின் இதயம்.. போராடி துடிக்க வைத்த மருத்துவர்!

Published:

shock
shock

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த பூவாளுர் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் மகள் தீபிகா. இவர் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, தேங்கியிருந்த மழை தண்ணீரில் காலை வைத்துள்ளார்.

அப்போது மின்கம்ப எர்த் வயர் வழியாக மின்கசிவு ஏற்பட்டு அந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால், சிறுமிக்கு மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், மரக்கட்டை உதவியுடன் சிறுமியை அந்த இடத்தில் இருந்து மீட்டுள்ளனர்.

பின்னர், உடனடியாக லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி, அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அரசு மருத்துவர் சரவணன் தலைமையிலான குழுவினர், சிறுமியைக் காப்பாற்றும் பொருட்டு நெஞ்சைக் கடுமையாக அமுக்கி சுவாசம் கொடுக்க முயற்சி செய்துள்ளனர்.

Saravanan - 2026

ஆனாலும் சிறுமியின் உடலில் எந்த சலனமும் இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்க முடிவு செய்து, டெஃபிபிரிலேட்டர் (Defibrillator) கருவியின் உதவியுடன் ஷாக் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

3 முறை ஷாக் கொடுக்கப்பட்டும் சிறுமியின் உடலில் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்துள்ளது. மருத்துவ குழுவினர் நம்பிக்கை இழந்த நிலையில், டாக்டர் சரவணன் நம்பிக்கை தளராமல் 4, 5-வது முறை தொடர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

அப்போது, ஆச்சர்யப்படத்தக்க வகையில் சிறுமி மூச்சு விட ஆரம்பித்துள்ளார். இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் அவருக்கு ஆக்சிஜன் கொடுத்து ஓரளவு சுவாசத்தை சீராக்கினர்.

அதனை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமியின் நின்றுப்போன இதயத்தை துடிக்க வைத்த அரசு மருத்துவக் குழுவினருக்கு பெற்றோர், உறவினர் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Related articles

Recent articles

spot_img