தமிழகம்,கேரளா வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு 125 அடிக்கு கீழ் இருந்த நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது. நேற்று அணையின் நீர்மட்டம் 125.75 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 126.50 அடியாக அதிகரித்துள்ளது.நேற்று 850 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1975 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3942 மி.கன அடியாக உள்ளது.
இதே போல வைகை அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 68.41 அடியாக உள்ளது. நீர்வரத்து 276 கன அடியாக உள்ளது.
நேற்று மாலை முதல் மதுரை கள்ளழகர் கோவில் திருவிழாவுக்காக 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி என மொத்தம் 1072 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5421 மி.கன அடியாக உள்ளது.சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 92.8 அடியாக உள்ளது. வரத்து 12 கன அடி. திறப்பு 3 கன அடியாக உள்ளது.
குமரி மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து மாவட்டம் முழுவதும் கோடை மழை பெய்ய தொடங்கியது. இது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. கடந்த 10 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் கடந்த 10 நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் கடந்த 10 நாட்களில் 2 அடியும் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 6 அடியும் உயர்ந்துள்ளது.
கோடை மழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் இரவு நேரங்களில் இதமான குளிர் காற்று வீசி வருகிறது. திற்பரப்பு பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு உள்ள சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். திற்பரப்பு அருவியில் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து ஆனந்த குளியலிட்டு செல்கிறார்கள்.
திருநெல்வேலி தென்காசி மாவட்டத்தில் பெய்த மழையால் மணிமுத்தாறு அருவி,குற்றால அருவிகளில் தண்ணீர் வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
13-ந் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.14, 15-ந் தேதிகளில் உள் தமிழகத்தில் கன்னியாகுமரி , தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், லேசான மழை பெய்யக்கூடும்.
நேற்று அதிகபட்சமாக ஸ்ரீவை குண்டம், ராமேஸ்வம், மயிலாடி தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.








