மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, 23ம் தேதி பாஜக சார்பில் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பது தொடர்பாக சேலத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது,
மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு வலியுறுத்தவில்லை. மத்திய அரசு கொடுப்பது மானியம். தேவை எனில் பெற்றுகொள்ளலாம். மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை கூற வேண்டாம். தமிழக அரசு, மின் செயற்கை தட்டுபாட்டை ஏற்படுத்தி, வெளி மார்க்கெட்டில் இருந்து, அதிக பணம் கொடுத்து மின்சாரத்தை வாங்குகிறார்கள்.
நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவது சரியா?. மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி,வரும் 23ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
