
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் தவறு இல்லை என எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கையை அளித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், சசிகலா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஆனாலும் இன்னும் விசாரணை முடியவில்லை. இதனால் ஆணையத்தின் விசாரணை காலத்தை ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 3 வார கால அவகாசம் கேட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவக்குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்த குழுவினர் பலரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதன் இறுதி அறிக்கையை ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்ய இருப்பதாக ஆணையத்திற்கு எய்ம்ஸ் மருத்துவக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் தவறு இல்லை என எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 3 பக்க அறிக்கையை அளித்துள்ளது. மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை அளித்துள்ளது.
அதில், ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா தைராய்டு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் தவறு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.




