
கர்நாடகத்தில் சமூக ஊடகங்களில் சண்டையிட்டுக் கொண்ட பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இருவரும் இன்று காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கர்நாடக அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்தவர் ஐஏஎஸ் அதிகாரி ரோஹிணி சிந்தூரி. இவர் ஏற்கெனவே சர்ச்சைகளுக்கு ஆளானவர் என்று கூறப்படுகிறது. கர்நாடக மாநில கைவினை மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர் ரூபா ஐபிஎஸ். இவர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதை வெளிக்கொண்டு வந்தவர்.
சமீபத்தில் ரோஹிணி ஐஏஎஸ் மீது ரூபா ஐபிஎஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஐஏஎஸ் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் சிலருடன் ரோஹிணிக்கு தொடர்பிருப்பதாகவும் அவர் மீதான புகார்களில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு ரோஹிணி அனுப்பியதாகக் கூறும் அவரின் தனிப்பட்ட புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் பகிர்ந்ததும் இந்த விவகாரம் வைரலாகப் பரவியது. இதற்குப் பதில் அளித்துள்ள ரோஹிணி, தான் எந்த புகைப்படங்களையும் யாருக்கும் அனுப்பவில்லை.
இது என் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள படங்கள், என்னுடைய புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டது தவறு. இதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
கர்நாடக உள்துறை அமைச்சர் இதுகுறித்து, அதிகாரிகள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய நிலையில் தற்போது ரூபா ஐபிஎஸ், ரோஹிணி ஐஏஎஸ் இருவரும் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.