எங்களை குற்றவாளிகள் போல் சித்திரிப்பதா என்று போலீசார் டிஜிபி உத்தரவினால் கொதிப்படைந்துள்ளனர்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசார் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்று தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார். இது மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துவிட்டது.
தமிழக போலீசார் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது மொபைல் போனை கையாண்டு கொண்டும், எப்போதும் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கியும் விடுகின்றனர். இதனால் பாதுகாப்புப் பணியில் பல நேரங்களில் கோட்டை விடுகின்றனர் என்று புகார்கள் தெரிவிக்கப் பட்டு வந்தது.
இதனால் உதவி ஆய்வாளர் அந்தஸ்துக்கு மேல் உள்ள அதிகாரிகள் மட்டுமே அலுவல் நிமித்தமாக மொபைல் போனை பயன்படுத்தலாம் என்றும் அதற்கு கீழ் உள்ள போலீசார் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு விவிஐபிகள் வருகை பண்டிகை மற்றும் கோவில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து காவல் நிலையங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டவேண்டும் என்றும், போலீசாருக்கு அடிக்கடி நினைவு படுத்தவேண்டும் என்றும் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். இந்த அறிவிப்பு வந்த போதே, பலருக்கும் பகீர் என்றிருந்தது.
இப்போது, டிஜிபி.,யின் அறிவிப்பு தங்களை குற்றவாளிகள் போல சித்திரிப்பதாக உள்ளது என்று போலீசார் கொதிப்படைந்துள்ளனர்.