நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற கலக்கத்தில் தேமுதிகவும் பாமகவும் இருப்பதாக கூறப்படுகிறது
அதிமுக கூட்டணியில் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகமும் இந்த முறை தேர்தலை சந்தித்தன. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாமகவுக்கு ஆச்சரியப்படுத்தும் விதமாக முதல் ஆளாக ஏழு மக்களவைத் தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கி அதிமுக அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஆனால் கடைசி வரை மல்லுக் கட்டிய தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.
2011க்குப் பின்னர் தேமுதிக தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்தது! அது போல், பாமக.,வுன் அண்மைக் காலமாக தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தது. இரு திராவிடக் கட்சிகளும் இன்றி தனித்து போட்டியிடுவது என்ற அக்கட்சியின் முடிவால் பாமக.,வுக்கு இழப்புதான் ஏற்பட்டது.
தேமுதிக பாமக இரண்டுமே தொடர் தோல்விகளை சந்தித்ததால் அந்த கட்சியில் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று கருதி பல நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து வெளியேறி வந்தனர்! இந்நிலையில் தங்களது கட்சி எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில் இரண்டு கட்சிகளின் எதிர்காலம் கருதி இரு கட்சிகளுமே அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தன.
ஆனால் இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணி முடிவால் சிலர் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் சிலர் ஈடுபட்டனர்!
கட்சியை மீண்டும் பலப்படுத்த வேண்டும் என்றால் இந்தத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் தேமுதிகவும் பாமகவும் உள்ளது! ஆனால் விஜயகாந்த்தின் பங்கு இல்லாமல் தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக.,வுக்கு எந்த விதமாக மக்கள் பதிலளித்திருக்கிறார்கள் என்பது இந்தத் தேர்தலில் தெரிந்து விடும்.
கருத்துக் கணிப்பு முடிவுகள் இந்த இரண்டு கட்சிகளுக்கும் தற்போது சாதகமாக இல்லை! 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவுக்கு தர்மபுரி தொகுதி மட்டும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது! நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக., வுக்கு கள்ளக்குறிச்சி மட்டும் கிடைத்தாலே பெரிய விஷயம்; அதுவும் கிடைக்காது என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன!
இவ்வாறு வரும் கருத்துக் கணிப்புகளும் பேச்சுகளும் இந்த இரு கட்சிகளின் தலைமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! ஏற்கனவே தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் அடுத்த தாவலுக்குத் தயாராக உள்ள நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அவர்களுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளன!
தேர்தல் முடிவு நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த இரு கட்சிகளுக்கும் பாதகமாக முடிவுகள் அமைந்தால், இரு கட்சிகளின் எதிர்காலமும் தேய்பிறையாகப் போகும் வாய்ப்பு அதிகம்!