
பாகிஸ்தானில் தேசிய சிறுபான்மையினர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி பாகிஸ்தான் அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது மற்ற மதத்தவர்களை கட்டாய மதமாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமான செயலாக கருதுகிறேன்.
பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினா் தங்களின் மதம் சார்ந்த விழாக்கள், மற்றும் பண்டிகைகளை எவ்வித இடையூறும் இன்றி கொண்டாடி மகிழும் வகையில் அவர்களுக்கான உரிமை பாதுகாக்கப்படும்.
ஒரு இந்துப் பெண்ணைத் திருமணம் செய்தோ அல்லது வேறு சிறுபான்மையினரைத் திருமணம் செய்தோ, முஸ்லிம் மதத்துக்கு எப்படி நாம் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முடியும்? அல்லது துப்பாக்கி முனையில் மிரட்டி மதமாற்றம் செய்ய முடியுமா?
இந்த செயல் அனைத்தும் இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமான செயல் என்றே நான் கூறுகிறேன்.
நம் இறைதுாதா்கள் மதத்தை யார்மீதும் கட்டாயப்படுத்தி திணிக்கக்கூறவில்லை.
இறைதூதர்களின் பணி, கடவுளின் வார்த்தைகளைப் பரப்புவதில் மட்டுமே இருந்துள்ளது.
மேலும் நமது நாட்டில் உள்ள சீக்கிய மக்களின் புனித தலமான பாபா குருநானக் பிறந்த இடத்துக்கு செல்லும் கர்தார்பூர் பாதை விரைவில் திறக்கப்பட உள்ளது.
அதற்கான முயற்சியில் என்னுடைய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


