கோவை மாவட்டம், காரமடை பகுதியில் உள்ள சிறுமுகை சாலைப் பகுதியில் வசிப்பவர் ஆர்.தங்கராஜ் என்பவர். ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்தவரான சுஜாதா தனியார் மருத்துவமனையில் சுகாதாரப் பிரிவில் பணிபுரிகிறார். இவர்களுக்குள் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, சுஜாதா, தங்கராஜை சந்திப்பதை தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த தங்கராஜ், அரிவாளால் சுஜாதாவின் இடது கையை மணிக்கட்டு பகுதியுடன் சேர்த்து வெட்டி எடுத்துக் கொண்டு, தப்பியோடி விட்டார்.
சுஜாதாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த மருத்துவமனை ஊழியர்கள், அவரை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்தினர். இதுபற்றி காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். அடுத்த சில மணிநேரத்திற்குள், தங்கராஜ் வெட்டப்பட்ட கையுடன் காவல்துறையில் நேரடியாக சரணடைந்தார்.
வெட்டப்பட்டு சில மணிநேரங்களுக்கு கைகளின் திசுக்கள் உயிரிழக்காமல் இருக்கும். அதற்குள் வெட்டுப்பட்ட பகுதி கிடைத்தால் அதனை ஏற்கனவே இருந்த இடத்தில் பொருத்தி செயல்பட வைக்க முடியும்.
அந்த கையை குறிப்பிட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை,உடனடியாக சுஜாதாவிற்கு, சிகிச்சை செய்து அந்த கையை ஒட்டி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். மருத்துவர்களும் இதற்கான தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.