உலகமே வியந்து போற்றிய, இராமானுசரின் முக்கிய சரித்திரங்களுள் ஒன்றை இன்று நாம் காண உள்ளோம்.
ஸ்ரீஆளவந்தார் எனும் மஹாராஜா இளவரசன் என்று வருணிக்கும் படியான இராமானுசருக்குத் தான் கொடுக்க வேண்டிய அர்த்தங்கள் அனைத்தையும், மந்திரி மார்கள் எண்ணும்படியான தனது ஐந்து சிஷ்யர்கள் மூலம் சேர்ப்பித்துச் சென்றார். அதன்படி பெரிய நம்பிகளிடம் முன்னரே த்வயத்துக்கு அர்த்தம் பெற்றார் இராமானுசர்.
அரங்கத்தில் இராமானுசர் கோயில் சீரமைப்பு பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்தார். அப்போது பெரிய நம்பிகள் இராமானுசரிடம் “நீர் அடுத்து நம் ஆசார்யர் ஆளவந்தார் நியமனப்படி, திருக்கோட்டியூர் நம்பிகளிடம் சென்று திருமந்திரத்திற்கும்,சரம ஸ்லோகத்திற்கும் அர்த்தங்களைப் பெற்று வாரும்” என்று இராமானுசரைப் பணித்தார்.
இராமானுசரும் ஆர்வம் பொங்க, சுமார் 60 மைல்கள் தொலைவில் உள்ள திவ்விய தேசமான திருக்கோட்டியூருக்கு நடைப்பயணம் ஆனார்.
அவ்வாறு செல்கையில் தனது தண்டும், பவித்ரம் என்னும் படியான கூரத்தாழ்வானையும்,முதலியாண்டானையும் அழைத்துக் கொண்டே சென்றார். திருக்கோஷ்டியூர் சென்று சேர்ந்தார்.
“இங்கு திருக்கோட்டியூர் நம்பிகளின் திருமாளிகை எங்குள்ளது?” என்று அங்கு இருந்தவரைக் கேட்க,
“அதோ தெரிகிறதே அது தான் அவரின் திருமாளிகை” என்று கூறினர்.
அவ்வண்ணம் காட்டிய உடனே, இராமானுசர் ஆசார்யனை சேவிக்கப் போகும் பூரிப்பில், தாம் வீதியில் நின்றிருந்த இடத்தில் இருந்து தண்டம் சமர்ப்பித்துக்கொண்டே, அதாவது விழுந்து சேவித்து, தலைப் படும் இடத்தில் எழுந்து நின்று, மீண்டும் விழுந்து சேவித்து இப்படியே வீதியின் கோடியில் இருந்து அவரின் திருமாளிகை வரை தண்டன் சமர்பித்துக்கொண்டே சென்றார்.
இதைப் பார்த்து வியந்த அந்த ஊர்க்காரர்களுக்கு அப்போதுதான் திருக்கோட்டியூர் நம்பியின் பெருமை என்னவென்றே புரிந்தது.
அப்படிச் சென்ற இராமானுசர், திருக்கோட்டியூர் நம்பியைக் கண்டு சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்து, தம்மை அறிமுகம் செய்துகொண்டு, “தமக்குத் திருமந்திரத்திற்கான அர்த்தமும், சரம ஸ்லோகத்திற்கான அர்த்தத்தையும் கொடுக்க வேண்டும்.” என்று வேண்டி நின்றார்.
அதற்கு திருக்கோட்டியூர் நம்பிகள், “உமக்கு அதற்குரிய தகுதி இன்னும் வந்ததாகத் தெரியவில்லை. நீர் போய் வாரும்.” என்று கூறி அனுப்பி விட்டார்.
வருத்தத்துடன் இராமானுசர் திரும்பி ஸ்ரீரங்கம் திரும்பினார்.
இப்படியே இராமானுசர் அடுத்து ஒவ்வொரு முறையும் செல்லும்போதும் திருக்கோட்டியூர் நம்பிகள் தர மறுத்து விட்டார்.,
இப்படியே பதினேழு தடவை இராமானுசர் நடையாய் நடந்து சென்று கேட்ட போதும், அவர் “உமக்கு இன்னென்ன தகுதிகள் இன்னும் வரவில்லை, நீர் போய் பிறகு வாரும் பார்க்கலாம்.” என்று கூறி அனுப்பி விட்டார்.
இராமானுசர் தாமும் மிக்க வருத்தமுற்றார். ஆனால் தன் ஆவலையும் ஆர்த்தியையும் விடவில்லை.
இத்தகைய ஆர்த்தியும் ஆத்மகுண பூர்த்தியும், பாகவத க்ருபையும் பெற்றவர் என்பதனை, திருக்கோட்டியூர் நம்பிகள் தெரிந்துகொண்டார்.
திருமந்திரம் பெறுதல்:
பதினெட்டாவது தடவையாக திருக்கோட்டியூர் நம்பிகளிடம் சென்று, “அடியேனுக்கு அர்த்தம் ஸாதிக்க (தந்தருளல்) வேண்டும்” என்று வேண்டித் தண்டனிட்டு நின்றார் இராமானுசர் .
“சரி உமது தண்டும், பவித்ரம் மட்டும் கொண்டு உள்ளே வாரும்” என்று சொல்லி உள்ளே சென்றார் திருக்கோட்டியூர் நம்பிகள்.
இராமானுசர் தானும் தன்னுடன் வந்த கூரத்தாழ்வானையும், முதலியாண்டானையும் ஒரு சேர அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
“உம்மை ஒருவரை மட்டும் அன்றோ வரச்சொன்னோம்?” என்று வினவினார் நம்பிகள்.
“தேவரீர் எம்மைத் தண்டும், பவித்ரமுமாக வரச்சொன்னீர், எனது தண்டும், பவித்ரமும் இவர்கள் தான்” என்று கூறினார்இராமானுசர்.
“சரி ஆகட்டும், அப்படியானால் இந்த அர்த்தங்களை இவர்களைத் தவிர வேறு யாருக்கும் சொல்லல் ஆகாது.” என்று நியமனம் செய்தார் திருக்கோட்டியூர் நம்பிகள்.
பின் நலம் தரும் சொல்லான திருவெட்டெழுத்தினையும், அதன் சாரமான அர்த்தங்களையும் இராமானுசருக்கு உபதேசித்து அருளினார் திருக்கோட்டியூர் நம்பிகள்.
அவர் மேலும் பேசினார், “இராமானுசரே, நீர் எப்பேர்ப்பட்ட ஞான, பக்தி, வைராக்ய, அனுஸ்டான சீலர் என்பது எமக்குத் தெரியும். ஆயினும் உம்மை ஒவ்வொரு முறையும் திருப்பி அனுப்பி, இருக்க வேண்டிய பதினெட்டு தகுதிகள் (அறியவேண்டிய பதினெட்டு தகுதிகள் அல்லது விஷயங்கள் அல்லது இரகசியங்கள் என்று சம்பிரபதாயத்தில் இருப்பவை) உள்ளனவா என்று சோதித்த பின்னரே உமக்கு பதினெட்டாவது தடவையாக இந்த அர்த்தங்களைக்கொடுத்தோம்.
நீர் இதை யாருக்கும் சொல்லக் கூடாது. அப்படியே சொல்வதாயினும், நீர் பல முறைகள் சோதித்த பின்னரே கொடுக்க வேண்டும். இதற்கிடையில் பெரிய பெருமாளும் எமக்கு சொப்பனமதில் கொடுக்குமாறு கூறி இருந்தான். எனினும்உம்மையே நாம் எப்படிச் சோதித்து கொடுத்தோம் பாரும்.” என்றார் நம்பிகள்.
கிடைத்தற்கரிய திருமந்திரத்தினை பெற்று விட்ட உடையவர் உள்ளம் உவகை கொண்டது. உற்சாகம் மேலிட்டது. இப்பேர்பட்ட பொருள் நிறைந்ததும், ஆத்ம க்ஷேமத்திற்கு வழிகோலுவதும், உஜ்ஜீவனத்திற்கு ஆதாரமாய் இருப்பதுமான இந்தத் திருமந்திரத்தினை யாரேனும் பிறர் செவிகளில் விழாமல் தடுப்பார்களோ?? மறைபொருளைத் திரையிட்டு மறைப்பார்களோ??
எவ்வளவு ஆர்த்தியோடும், முயற்சியோடும் இருந்தும், நமக்குப் பல பரீட்சை செய்து, பதினெட்டு தரம் நடந்த பின்னரே இவர் கொடுத்தார். இன்று இந்த கலியுலகில் இதன் மகத்துவம் அறிந்தவர் யார் ??
சம்சாரம் என்னும் பெரும் கடலில் விழுந்துதத்தளிக்கும் இவர்கள் கரையேறும் காலம் எப்போது??
எம்பெருமானுக்கே உரிய இவர்கள் பிறர்க்காகி அனர்த்தப்படுவானேன்??
வாழ வேண்டிய இவர்கள் தாழ்ந்து போவானேன்?? என்றெல்லாம் உள்ளம் பாரித்தார் இராமானுசர்.
பாரினும் பரந்த நெஞ்சம்:
கருணைப் பெருக்கெடுத்து, பிறவித்துயரில் தவிக்கும் ஆத்மாக்கள் எல்லாம் உய்யும் வண்ணம், இதனை விரும்புவோர்க்கெல்லாம் இப்போதே உபதேசித்தால் என்? என்று எண்ணினார்.
உடனே தன் எண்ணத்திற்கு உயிரோட்டமும்அளித்தார் இராமானுசர்.
அதே ஊரிலேயே,
“ஆத்ம க்ஷேமத்தில் ‘ஆசை’ உடையோரெல்லாம் வாருங்கள்” என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அதைக்கேட்டு அநேக ஸ்ரீவைஷ்ணவர்கள் வந்து கூடினர்.
திருக்கோட்டியூரின் பெருமான் கோயில் கோபுரத்தின் (தெற்காழ்வான் திருவோலக்கத்தின்) மீது ஏறி, அவர்களுக்குத் தான் பெற்ற திருமந்திரத்தின் அர்த்தங்களை எல்லாம் கொடுத்தருளினார் உலகம் உய்ய அவதரித்த உடையவர்.
இந்தச் செய்தி பரபரப்புடன் ஊரெங்கும் பரவியது. கோஷ்டிபுரத்து நம்பிக்கும் தெரிந்து, உடனே அவர் இராமானுசரை அழைத்து வர ஆள் அனுப்பி வரவைத்தார்.
இராமானுசர் சென்று தண்டனிட்டர். அடியார்களின் பெரும் கூட்டமும் உடன் சென்றது.
எம்பெருமானார் தரிசனம்:
“இந்தப் பரம ரகஸ்யத்தினை வேறு ஒருவர்க்கும் சொல்லாதே என்றல்லவா நாம் உமக்குச் சொன்னோம்; அதை மதியாது நீர் அநேக ஸ்ரீவைஷ்ணவருக்குச் சொன்னீர் என்று கேட்டோமே.” என்று நம்பிகள் கேட்க,
இராமானுசரும் “உண்மை, தேவரீர் திருவடிகளை முன்னிட்டுக் கொண்டு சொன்னேன்.” என்றார்.
“ஒருவருக்கும் சொல்ல வேண்டா” என்று நியமித்தன்றோ சொன்னோம்; அத்தை மறுத்துச் சொன்ன உமக்கு ஏற்படும்விளைவு ஏது தெரியுமா?” என்று நம்பி கேட்க,
“ஆசார்ய நியமனத்தை மீறிய எனக்கு நரகமே கிட்டும்” என்றார் இராமானுசர்.
“இதனை அறிந்திருந்தும் சொல்வானேன்?” கேட்டார் நம்பிகள்.
“தேவரீரின் திருவடி முன்னிட்டுக் கொண்டு அடியேன் சொன்ன அந்த ரகஸ்யத்தினாலே,
அனைவரும் உஜ்ஜீவனம் பெறுவார்களே ஆயின், அதற்காக அடியேன் ஒருவன் நரகம் புகவும் தயார்.” என்று கூறினார் இராமானுசர்.
இந்த பதிலைக் கேட்ட நம்பி, அயர்ந்து நின்றார்.
இத்தகைய பரந்த உள்ளம் எனக்கு கூடிற்றில்லையே என்று எண்ணி, அவரின் விசாலமான இதயத்தையும், மற்றவர் வாழ்வினில் அவர் கொண்ட கருணையையும் கண்டு வியந்து, அவரை வாரியணைத்து,
“வாரீர் எம்பெருமானாரே- எம்பெருமானே நீர்” இதுவரை நம் தரிசனம் பரம வைதீக ஸித்தாந்தம் என்று இருந்தது; இன்று முதல் அதை “எம்பெருமானார் தரிசனம்” என்னுங்கொள்.
“இதுவே அரங்கன் திருவுள்ளம்” என்று அருளிச்செய்தார் திருக்கோட்டியூர் நம்பிகள்.
இராமானுசரின் இப்பேர்பட்ட தயைக்கும், திருவுள்ளத்திற்கும் இணையாக, ஆயிரமாயிரம் தாய் தந்தையரின் தயைகுணங்களை வைத்தாலும், அவைகள் ஒருபோதும் ஈடாக மாட்டாது என்று மனதில் கொள்ளுங்கள்.
(எம்பெருமானார் தரிசனம் மேலும் வளரும்..)
இனி அமுதனார் இராமானுசரை போற்றிய “ப்ரபன்ன காயத்ரி” என்கிற பெருமைக்குரிய இராமானுச நூற்றந்தாதியின் அடுத்த இன்தமிழ் பாசுரத்தையும்,அது தாங்கி வந்த பொருளை எளிய தமிழ் நடையிலும் காண்போம்.
பாசுரம்: 22
கார்த்திகையானும் கரிமுகத்தானும் * கனலும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு * மூவுலகும்
பூத்தவனே! என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் * இராமானுசன் எந்தன் சேமவைப்பே.
பொருள்:
சென்ற துவாபர யுகத்திலே ஸ்ரீயப் பதியான ஸ்ரீமந்நாராயணன், கண்ணனாய் வந்து அவதரித்தான்.
அப்போது மஹாபாரத யுத்தம் நிறைவடைந்திருந்த தருணம். கண்ணனின் பேரனான அநிருத்தன், பாணாசூரன் எனும் பெரும் அசுரனின் மகளான உஷை என்பவள் மீது அன்பு கொண்டு, உஷையை அந்தரங்கமாகச் சந்திக்க சென்றிருந்த தருணத்தில், பாணாசூரன் அநிருத்தனை நாக பாஷாணம் மூலம் சிரைப்பிடித்தான்.
அங்கே துவாரகையில் ஸ்ரீகிருஷ்ணன் முதலானோர் அநிருத்தனைக் காணாது தேடி, ஒருவழியாக விஷயம் அறிந்தனர். பின்பு இறுதியில் இருதரப்பினருக்கும் இடையே யுத்தம் மூண்டது. ஒவ்வொரு புறமும் 12 அக்ரோணி சேனைகளுடன்போரும் தொடங்கியது.
பாணாசூரன் தீவிர சிவ பக்தன், அதனால் அவனுக்குப் போரில் உதவி புரியும் பொருட்டு, ருத்திரனாரும்,கார்த்திகையானும்,கணபதியும், அக்கினி தேவதையும், துர்க்கையும் மற்றும் ஜ்வர தேவதையும் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவையே எதிர்க்கத் துணிந்தனர்.
அப்போது நடந்த பெரும் போரில், கண்ணன் அவர்கள் அனைவரையும் ஒடுக்கி, புறமுதுகிட்டு ஓடச் செய்தார்.
அவ்வண்ணம் ஓடிய அவர்கள் சற்று தூரம் சென்று திரும்பி கண்ணனை பார்த்து கேட்கின்றனர்,
“தேவரீர் தானே அடியோங்களைப் படைத்தீர்? இன்னென்ன காரியங்களையும் எமக்காகக் கொடுத்தீர்??
அப்படியிருக்க எங்களுடைய பக்தர்களை யாம் காக்க வேண்டும் அன்றோ??
இப்படி எங்களையே நீர் அடித்தால், எங்கள் பக்தர்கள் எங்களை மதிக்க மாட்டார்களே!!
ஆகையால் எங்களை விட்டு விட வேண்டும்.” என்று கண்ணனை வேண்டினர்.
பின் கண்ணன் பேசினார்,
“ஏ தேவதைகளே! மானிடர்களுக்கு எம்மிடத்தில் பக்தியை வளர்ப்பதற்காகவன்றோ உங்களை யான் படைத்தேன்?? நீங்களேஇப்படி தமோ, ரஜோ குணங்கள் (துர் குணங்கள்) மேலிட்டு எம்மையே எதிர்த்தால்,
பின் எப்படி அவர்களுக்கு நீங்கள்உபதேசம் செய்வீர்???
இதோ உங்களுக்கு யாம் இன்று சாபம் இடுகிறேன்..
‘என்னுடைய பக்தன் யாரேனும் உங்களிடம் வந்தான் எனில்,
இப்படி நடந்த இந்தச் சரித்திரத்தை அறிந்தான் எனில்,
அவன் செய்த பன்னியிரண்டு கால கிருஷ்ண (விஷ்ணு) பக்தி உங்களால் அழிந்து போகும்'” என்று சாபம் இட்டார்.
அந்த அளவிற்கு விஷ்ணு பக்தர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்று மனதில் கொள்க. ஏனெனில் இந்தச் சிருஷ்டியையும் இதில் உள்ளடங்கிய மேற்சொன்ன அந்த தேவதைகள் முதலிய அனைத்து ஜீவாத்மாக்களையும் படைத்து, காத்து அழிப்பவன் பரம்பொருளான ஸ்ரீமந் நாராயணன்.
அந்த பரம்பொருளை மட்டுமே பக்தி செய்து மிக உயரிய நிலையான உஜ்ஜீவனம் (மோக்ஷம், பிறவாநிலை, நற்கதி) பெற இயலும். அவனால் மட்டுமே அதைக் கொடுக்கவும் இயலும்.
இதை நம்மாழ்வார் தம்முடைய திருவாய் மொழியில்,
“ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே?” -என்று அருளிச் செய்தார்.
அதன் பொருள்: “தேவாதி தேவர்களும், அன்னவர்கள் வாழும் லோகங்களும், அதில் உள்ள உயிர் வாழ்விகளும் ஆக எதுவுமே பிரளய காலத்தில் இல்லாமல் இருந்தன.
சிருஷ்டிக்காக முதலில் நான் முகனைப் (ப்ரம்மனைப்) படைத்து, அவன் மூலம் சிவன், இந்திரன் முதலிய அனைத்துத் தேவாதி தேவர்களையும், அவர்கள் வசிக்கும் லோகங்களையும்,திரியக்குகளான மனித, பசு, பறவை முதலிய விலங்குகளையும், தாவரங்களையும், மற்றும் உள்ள யாவற்றையும்படைத்து வேத சாஸ்திரங்களில் ‘பரம்பொருள்’ என்று நின்ற ஆதிப்பிரானாகிய (தனக்கு முன்னவர்கள் அற்றவன்) எம்பெருமான் மலைபோன்ற திருமாளிகைகள் உயர்ந்து நிற்கும் ஆழ்வார் திருநகரியிலே காட்சி தந்து கொண்டிருக்கும்போது,
வேறு தெய்வங்களை தேடியோடுகின்றீர்களே. இது தகுமோ??” என்கிறார் ஆழ்வார்.
ஆக ஒருவன் இன்று இதர தேவதைகளிடம் இருந்தால் கூட, சிறிது சிறிதாய் தானே விலகி நாளடைவில் தன் புண்ணியகர்மங்களினால் ஓர் நாள் விஷ்ணுவின் பக்தன் ஆகிறான் (ஆக வேண்டும்).
அதுவே ஒவ்வொரு ஜீவாத்மாவின் முன்னேற்றப் பாதை.
அப்படியிருக்க ஒருவன் விஷ்ணுவின் பக்தனாய் இருந்து, இவ்வுலக(அற்ப) இன்பங்கள் தரும் இதர தேவதைகள் பக்கம்ஒருவன் போவானே ஆயின், அதுவே அவனின் கீழ் நிலையும், துர் பாக்கியமும், துர் குணத்தின் வெளிப்பாடும் ஆகும்.ஆகவே அற்ப பலன்களை எதிர்பார்த்து அந்த தேவதைகளிடம் சென்ற அவன் தண்டனைக்கு உரியவனே. ஆகவே அவனுக்கு அந்த தேவதைகளை மையமாகக் கொண்டே அவர்களுக்கு அன்று சாபமும் இட்டார் கண்ணன்.
இப்படி தன்னை காக்க வந்த தேவதைகளே தன்னை விட்டு ஓடிய பின், தானும் போரில் தோற்றுப்போய் கண்ணனின் திருவடி பணிந்தான் பாணாசூரன். பின் கண்ணனை ஸர்வலோக நாதன் என்று புரிந்து கொண்ட அவன்
“ஏ ப்ரபோ, சர்வலோகங்களையும் உம்முடைய திருநாபிக் கமலத்தில் படைத்த மஹா விஷ்ணு நீர் என்பதனை அறிந்து கொண்டேன். என்னை மன்னித்து, என் பிழை பொருத்தருள வேண்டும்.” என்று வேண்டித் தொழுதான்.
கண்ணனும் அவனை மன்னித்து விட்டார். (ஆதாரம்:ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம்-10 அத்யாயம்-63)
“அப்பேர்பட்ட சர்வபாப நிவர்த்தனான எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனே தனக்கு கதி” என்று கொண்ட எம்பெருமானாரே எனக்குக் கதி என்கிறார் அமுதனார்!!
English Translation:
Subramanya, Vinayaka, Siva, Parvali, Agni and all the other gods turned their backs and fied, then hailed, “O Lord of the three worlds, O Maker!” such was the mercy that Krishna showed on Sana, Ramanuja, who worships him, is our Provident Fund.
எம்பெருமான் கண்ணனின் திருவடிகளே சரணம்.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
அமுதனார் திருவடிகளே சரணம்.
(ஆதாரம்: பூர்வாசார்யர்களான ஸ்வாமி மணவாளமாமுனிகள் உரை, ஸ்வாமி பிள்ளைலோகம் ஜீயர் உரை, ஸ்வாமி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யார் உரை மற்றும் ஸ்ரீதரன் ஸ்வாமி உரை.)
*எம்பெருமானாரின் ஆயிரமாவது ஆண்டு விசேஷங்கள் – மே 2017***


