ஜோதிட ரீதியாக ஆன்மிகத்தை அணுகுபவர்கள், இப்போது சனிப்பெயர்ச்சி குறித்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருக் கின்றனர். பொதுவாக இரண்டரை வருடத்துக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து வேறோரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் கிரகம் சனி என்பதால், இப்போது ஜனவரி மாதம் சனிப்பெயர்ச்சி என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் தீவிரக் காத்திருப்புக்கு ஏற்ப, இந்த வருட புத்தாண்டு பலன்களைச் சொன்ன ஜோதிடர்கள் சிலர், ஜனவரி மாதம் 24ம் தேதி சனிப்பெயர்ச்சி ஆகும் என்று வேறு சொல்லிவிட்டார்கள். அதற்கு ஏற்ப சனிப்பெயர்ச்சி பலன்களும் சிலர் சொல்லத் தொடங்கினர். ஆனால், வேறு சிலரோ, சனிப்பெயர்ச்சி இப்போது இல்லை, வரும் வருடத்தின் கடைசியில்தான் வருகிறது என்று கூறினர்.
இந்த நிலையில், சனிப்பெயர்ச்சிக்கு பொதுவாக பக்தர்கள் கூட்டம் அலைமோதும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் நிர்வாகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனி பகவானுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இங்கு, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அப்போது, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, நளன் குளத்தில் நீராடி, சனி பகவானை தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில், இந்த ஆண்டு நிகழவுள்ள சனிப் பெயர்ச்சி தொடர்பாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல், பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திருநள்ளாறு கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் வாக்கிய பஞ்சாங்கப்படி, வரும் டிசம்பர் 27ஆம் தேதி தான், சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது. எனவே வரும் 24ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்று சமூக வலை தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது