எப்படி நாம் நடந்துகொள்ள வேண்டும்?
மைத்ர:
நாம் எல்லோரிடத்தும் சிநேக பாவனையுடன் இருக்க வேண்டும். ஆதிசங்கரர் ஓரிடத்தில்,
த்வயிமயி சான்யத்ரைகோ விஷ்ணு: I
வ்யர்த்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு: II
“ஒரே சைதன்யம்தான் உன்னிடத்திலும் இருக்கிறது. என்னிடத்திலும் இருக்கிறது. எல்லாவிடத்திலும் இருக்கிறது. அப்படியிருக்கும் போது என்னிடம் எதற்காகக் கோபித்துக் கொள்கிறாய்?” என்று சுலோகம் ஒன்றில் கூறியுள்ளார்.
ஆகவே நாம் எல்லோரிடத்தும் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும். அது மட்டுமல்ல.
கருண ஏவ ச
நாம் எல்லோரிடமும் கருணையோடும் இருக்க வேண்டும். மற்றவர்களுடைய கஷ்டங்களைப் போக்க வேண்டும் என்ற விருப்பம் “தயை” எனப்படும்.
நம் கண் முன்னால் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய கஷ்டத்தைப் போக்கக்கூடிய சக்தி நமக்கு இருந்தால் நாம் அவர்களுடைய கஷ்டத்தைப் போக்க வேண்டும்.
மாறாக, நாம் சுயநலக்காரர்களாக இருந்துவிட்டால், நம்மால் இந்த உலகிற்கு என்னதான் பயன்? பரோபகாரம் செய்யாத மனிதர்களைவிட பிராணிகளே எவ்வளவோ மேல் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
ஆகவே நமது வாழ்க்கை பயனுள்ளதாக அமைய வேண்டுமானால், நாம் மற்றவர்களுக்குத் தயை காட்ட வேண்டும்.