
நன்மாணாக்கரியல்
வைதாலும் ஓர்கொடுமை செய்தாலு மோசீறி
மாறாதிகழ்ந் தாலுமோ
மனதுசற் றாகிலும் கோணாது, நாணாது,
மாதாபி தாவெனக்குப்
பொய்யாமல் நீ யென்று கனிவொடும் பணிவிடை
புரிந்து, பொரு ளுடலாவியும்
புனித! உன்றன தெனத் தத்தஞ்செய் திரவுபகல்
போற்றி, மல ரடியில் வீழ்ந்து,
மெய்யாக வேபரவி உபதேச மதுபெற
விரும்புவோர் சற்சீ டராம்
வினைவேர் அறும்படி அவர்க்கருள்செய் திடுவதே
மிக்கதே சிகரதுகடன்
ஐயா! புரம்பொடி படச்செய்த செம்மலே!
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
தலைவனே! முப்புரங்களை நீறுபடச் செய்த பெரியோனே!, தலைவனாகிய
எமது தேவனே!, ‘ திட்டினும் ஏதேனும் கொடுமை யிழைக்கினும், மாறாமற்
சினந்து இழிவுபடுத்தினும், சிறிதும்
மனங்கோணாமலும் வெட்கப்படாமலும், உண்மையாக எனக்கு அன்னையும் தந்தையும் நீயேயென்று கூறி,
(ஆசிரியனுக்கு) மனங்கனிந்து வழிபாடு
செய்து, தூயவனே! என்
பொருளும் உடலும் உயிரும் உன்னுடையவை என்று கூறி, தத்தம்
கொடுத்து, இரவும் பகலும் விடாமல்
வணங்கி, (ஆசிரியன்)
மலர்போன்ற திருவடிகளில் உண்மையாகவே வீழ்ந்து புகழ்ந்து கூறி,
அறிவுபெற விழைவோர்
நல்ல மாணாக்கராவர், அவர்களுக்கு வினையின் வேர் கெடும்படி அருள் செய்வது சிறந்த ஆசிரியரது கடமையாகும்.
இங்குக் கூறப்பட்டவை நன்மாணாக்கரின் இயல்பு.