
தீநகர்
ஈனசா திகள்குடி யிருப்பதாய், முள்வேலி
இல்லில் லினுக்கு முளதாய்,
இணைமுலை திறந்துதம் தலைவிரித் திடுமாதர்
எங்கும்நட மாட்டம் உளதாய்க்,
கானமொடு பக்கமாய் மலையோர மாய் முறைக்
காய்ச்சல்தப் பாத இடமாய்,
கள்ளர்பயமாய், நெடிய கயிறிட் டிறைக்கின்ற
கற்கேணி நீருண் பதாய்.
மானமில் லாக்கொடிய துர்ச்சனர் தமக்கேற்ற
மணியம்ஒன் றுண்டா னதாய்,
மாநிலத் தோர்தலம் இருந்ததனில் வெகுவாழ்வு
வாழ்வதிலும், அருக ரகிலே
ஆனநெடு நாள்கிடந்தமிழ்தலே சுகமாகும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
குற்றம் அற்றவனே!, அருமை தேவனே!,
இழிந்த சாதியினர் வாழ்வதாய்,
வீடுதோறும் முள்ளால் வேலி
யிருப்பதாய், மார்பிலே துணி விலகியவாறு தலைவிரித்துத்
திரியும் பெண்கள் எங்கும் உலாவும் நிலையினதாய், ஒருபக்கம் காடுடையதாய், மலையோரமானதாய்,
முறைக்காய்ச்சல் எப்போதும்
வருமிடமாய், திருடரால் அச்சமாய், – நீண்ட கயிற்றைக் கட்டி இறைக்கப்படும் கல்லால் அமைந்த கிணற்றுநீர் உண்ணு மிடமாய்,
மானம் அற்ற மிகக் கொடியவருக்குத் தக்க தலைவனையுடையதாய், ஓர் ஊர்
இப் பெரிய உலகில் இருந்து, அவ்வூரிலே பெருக வாழ்வதினும்,கொடிய
நரகத்தில் உண்டான நீண்டகாலம் கிடந்து அதனில் முழுகிப்போதலே
இன்பம் ஆகும்.
ஒருபக்கம் கானும் தீய விலங்குகளும் திருடர்களும்வாழ்வதால் ஊரில் வாழ்வோர்க்குக் கலக்கமுண்டாகும். மலைஓரம், வெப்பமும் முறைக்காய்ச்சலும் தரும். ‘கொடுங்கோல்’ மன்னர் வாழும்
நாட்டின் – கடும்புலி வாழும் காடு நன்றே’ என்பதால், ‘துர்ச்சனர் தமக்கு
ஏற்ற மணியம்’ உடைய நகர் நரகத்தினுங் கொடியது ஆயிற்று.
முள்வேலியும்
தலைவிரித்திடும் மாதர் நடமாட்டமும் நகரின் அழகைக் கெடுப்பன.
இத்தகைய நகரில் வாழ்வு கூடாது




