மதுரை சித்திரைத் திருவிழா முடிந்த நிலையில் இன்று வந்த கள்ளழகருக்கு அழகர்கோயில் முன்பாக அதிர்வேட்டுகள் முழங்க பக்தர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
மதுரையில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் அழகர்மலையில் இருந்து புறப்பட்டு மதுரை வந்தார். கடந்த சித்ரா பௌர்ணமி அன்று மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து, பல்வேறு திருக்கண்களில் பக்தருக்கு காட்சி கொடுத்த பின்பு, வண்டியூரில், மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம், அதைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம், இதையடுத்து, மதுரை சேதுபதி ராஜா மண்டகப்படியில், பூப்பல்லக்கில் காட்சி கொடுத்துவிட்டு, மதுரையிலிருந்து, சர்வேயர் காலனி, கடச்சநேந்தல், அப்பன்திருப்பதி, சுந்தரராஜன் பட்டி வழியாக கள்ளழகர் இன்று அழகர்கோயில் வந்தடைந்தார்.
அவருக்கு, கோயில் முன்பாக அதிர்வேட்டுகள் முழங்க பக்தர்கள் வரவேற்பு கொடுத்தனர். கண்திருஷ்டி சுற்றி போட்டனர்.இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கள்ளழகரை தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.






