பயனிலாதவை
சமயத்தில் உதவாத நிதியம்ஏன்? மிக்கதுயர்
சார்பொழுது இலாத கிளைஏன்?
சபை முகத்துத வாத கல்விஏன்? எதிரிவரு
சமரத்திலாத படைஏன்?
விமலனுக் குதவாத பூசைஏன்? நாளும்இருள்
வேளைக்கிலாத சுடர்ஏன்?
வெம்பசிக்குதவாத அன்னம் ஏன்? நீடுகுளிர்
வேளைக் கிலாத கலைஏன்?
தமதுதளர் வேளைக் கிலாதஓர் மனைவிஏன்?
சரசத் திலாதநகை ஏன்?
சாம்மரண காலத்தில் உதவாத புதல்வன் ஏன்?
தரணிமீ தென்பர் கண்டாய்!
அமரர்க்கும் முனிவர்க்கும் ஒருவர்க்கும் எட்டாத
ஆதியே! அருமைமத வேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
வானவர்க்கும் முனிவர்க்கும் பிறரெவர்க்கும் நெருங்கற்கியலாத முதல்வனே!,
அருமை தேவனே!,
உலகில் வேண்டிய காலத்திற் பயன் படாத செல்வம் எதற்கு?, மிகுதியான துன்பம் உண்டானபோது
பயன்படாத உறவு எதற்கு?,
அவைக்களத்திற் பயன்படாத படிப்பு எதற்கு?, பகைவன் எதிர்த்த போரிற் பயன்படாத படை எதற்கு?,
தூயவனான இறைவனுக்குப் பயன்படாத
வழிபாடு எதற்கு?,
எப்போதும் இருட்பொழுதில் ஒளிதராத விளக்கு எதற்கு?, கொடிய பசியைத் தணிக்கப் பயன்படாத உணவு
எதற்கு?, நீண்ட குளிர்
காலத்திற்குப் பயன்தராத ஆடை எதற்கு?, தமது தளர் வேளைக்கு இலாத
ஓர் மனைவி ஏன் தங்களின் சோர்வு காலத்திற்கு உடனிராத ஒரு
மனைவி எதற்கு?, விளையாட்டின்போது
இல்லாத நகைப்பு எதற்கு?, உயிர்விடும் இறுதிப்போதிற் பயனற்ற மகன் எதற்கு?, என்று(அறிஞர்) கூறுவர்.