
ஐபிஎல் 2022 – 24 ஏப்ரல் 2022 லக்னோ vs மும்பை
– K.V. பாலசுப்பிரமணியன்
ராகுலின் மூன்றாவது சதம்
நேற்று, ஏப்ரல் இருபத்திநான்காம் நாள் லக்னோ, மும்பை அணிகளுக்கிடையே மும்பையின் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 37ஆவது போட்டி நடந்தது. லக்னோ அணி (168/6, கே.எல். ராகுல் 103* பொலார்ட் 2/8, மெரிடித் 2/40) மும்பை அணியை (132/6, ரோஹித் ஷர்மா 39, திலக் வர்மா 38, க்ருணால் பாண்டியா 3/19) தோற்கடித்தது.
டாஸ் வென்ற மும்பை அணி லக்னோ அணியை மட்டையாடச் சொன்னது. லக்னோ அணியின் தலைவர் கே.எல். ராகுல் 62 பந்துகளில், 12 ஃபோர், நாலு சிக்சர்களுடன் 103 ரன் அடித்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த ஐ.பி.எல்லில் இது அவருக்கு மூன்றாவது சதம்; அதில் இரண்டு சதங்கள் மும்பை இந்தியன்சுக்கு எதிராக அடித்துள்ளார். ராகுல் 2013ஆம் ஆண்டிலிருந்து ஐ.பி.எல் விளையாடுகிறார். இதுவரை 4 சதங்கள் அடித்திருக்கிறார்; 28 அரைசதங்கள் அடித்துள்ளார்.
அவரைத்தவிர வேறு எவரும் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. மும்பை பந்து வீச்சும் சுமார் ரகம். அடுத்து ஆட வந்த மும்பை அணியின் இஷான் கிஷன் 20 பந்துகளில் 8 ரன் அடித்தார்.
ரோஹித் ஷர்மா 31 பந்துகளில் 39 ரன் அடித்தார். அதன் பின்னர் திலக் வர்மா 38 ரன்களும் கிரன் பொலார்ட் 19 ரன்களும் எடுத்தனர். இவர்களைத் தவிர பேட்ஸ்மென்கள் அனைவரும் சரியாக விளையாடவில்லை.
ரோஹித் ஷர்மா ஆடுவதைப் பார்த்தால் அவரை இந்தியாவின் டி20 அணியில் எடுப்பார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. பெரிதாக அடித்து ஆடக்கூடியவர்கள் என எதிர்பார்க்கப்பட்டவர்கள் எல்லாம் மிகவும் சின்சியராக சிங்கிள் எடுத்துக்கொண்டிருந்தனர். எனவே மும்பை அணி இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.




