சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளான மின்சார ரயில் 9மணி நேர போராட்டத்துக்குப்பின் மீட்கப்பட்டு இச்சம்பவத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்கா ராம் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நேற்று விபத்துக்குள்ளானது.


பணிமனையில் இருந்து வந்த ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நின்றதால் விபத்து ஏற்பட்டது. பிரேக் சரியாக இயங்காததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி ரயில் விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் ரயிலில் யாரும் இல்லை எனவும், விபத்தில் ரயில் ஓட்டுநர் மட்டும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் .
இதனைத் தொடர்ந்து, ரயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்து ஏற்பட்டது தொடர்பாக ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய தண்டனை சட்டம் 279, ரயில்வே சட்டப்பிரிவு 151 மற்றும் 154 ஆகிய பிரிவுகளின் கீழ் ரயில் ஓட்டுனர் மீது எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்நிலையில், 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விபத்தில் சிக்கிய மின்சார ரெயிலின் பெட்டிகள் மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தப்பட்டன.





